vi
தண்டக வனத்திலே இருந்த முனிவர்கள் மகிழ்ந்தார்கள் இராமனை வரவேற்றார்கள்.
இராமன், இலக்ஷ்மணன், சீதை ஆகிய மூவரும் அத்திரி முனிவருடைய ஆசிரமத்துக்குச் சென்றனர்.
அத்திரி என்பவர் சப்தரிஷிகளுள் முதல்வர். திரிவர்க்க தோஷங்களாகிய காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்றையும் போக்கியவர் என்பது பொருள். வேத அத்யயனம் செய்யாது மூன்று இரவுகளைப் போக்காதவர் என்றும் கூறுவர். இவர் பிரம்ம குமாரர்களில் ஒருவர்.
இவருடைய மனைவி அனசூயை. அனசூயை என்றால் பொருமை அற்றவள் என்று பொருள். இவள் தக்ஷப் பிரஜாபதியின் புதல்வியருள் ஒருத்தி.
தனது கற்பு நிலையைச் சோதிக்க வந்த மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக்கித் தொட்டிலில் இட்டு ஆட்டியவள்.
என்றும் மாசுபடியாத பட்டாடை, நறுமணங்குன்றாத கலவைச் சாந்து, என்றும் குன்றா இளமை ஆகியவற்றை சீதைக்கு அளித்தாள் என்று வான்மீகம் கூறும்.
விராதன் என்பவன் ஓர் அரக்கன். சிவந்த கண்கள், சுருண்ட தலைமயிர், விஷம் ஒரு மலை வடிவு பெற்றுவருவது போலும் தோற்றத்தினன்.
அவனது நடைப் பெயர்ச்சியினால் பெருங்காற்று எழுந்தது. அக்காற்று மலைகளைப் பெயர்த்தது. அவ்விதம் பெயர்ந்த மலைகள் காற்றிடைப்பட்ட பஞ்சுபோல் பறந்தன.
குதிரை, யானை, சிங்கம், புலி இவற்றையெல்லாம் ஒரு பாம்பினாலே தொடுத்துக்கட்டி மாலையாக அணிந்து கொண்டிருத்தான் அவ் விராதன்.