பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


தண் என்ற ஒழுக்கம் உடையதாய்– தீய ஒழுக்கங்களை விவரிக்காமல் நல் ஒழுக்கங்களையே வலியுறுத்தும்–மெல்லென்ற ஓசையோடு தட்டின்றிச் செல்லும் நடையுடையதாய் இருக்கும்.

ஓதிமம் ஒதுங்க கண்ட
        உத்தமன் உழையள் ஆகும்
சீதை தன் நடையை நோக்கிச்
        சிறியதோர் முறுவல் செய்தான்
மாது அவள் தானும் ஆண்டு வந்து
        நீர் உண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கிப்
        புதியது ஓர் முறுவல் பூத்தாள்.

அன்னங்கள் ஒதுங்கி நடந்து செல்கின்றன. உத்தமனான இராமன் அவற்றை நோக்கினான்; அருகில் உள்ள சீதையின் நடையையும் நோக்கினான்; புன் முறுவல் பூத்தான்.

சீதை என்ன செய்தாள்? அங்கு வந்து நீர் குடித்துச் செல்லும் ஆண் யானையின் நடை கண்டு அதுவரை இல்லாத புன்முறுவல் பூத்தாள்.

“உன் நடை அழகின் முன்னே இந்த அன்னத்தின் நடையழகு என்னே” எனும் கருத்துத் தொனிக்க இராமன் புன்முறுவல் பூத்தான்.”

“இராமன் நடை அழகின் முன் இந்த ஆண் யானை நடையில் தோற்கும்” எனும் கருத்துப் படச் சீதை புன்முறுவல் பூத்தாள்.