பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10



நசையாலே மூக்கு இழந்து
        நாணம் இலா நான் பட்ட
வசையாலே நினது புகழ்
        மாசுண்டது ஆகாதோ
திசை யானை விசை கலங்கச்
        செருச் செய்து மருப்பு ஒசித்த
இசையாலே நிறைந்த புயத்து
        இராவணவோ! இராவணவோ!

சூர்ப்பணகை அலறத் தொடங்கினாள்.

“ஓ இராவணா! ஓ இராவணா!” என்று பெருங்குரல் எடுத்துத் தன் அண்ணனை அழைத்தாள்.

“எட்டுத் திக்கிலும் உள்ள யானைகளை வென்று, அவற்றின் கொம்புகளை ஒடித்து அடக்கிப் புகழ்பெற்ற இராவணனே! ஆசையினாலே நான் என் மூக்கைப் பறிகொடுத்து விட்டேன். இது உன் புகழுக்கு இழுக்கு அன்றோ? நின் புகழுக்குக் களங்கம் வராதோ.”

திசை யானை– எட்டுத் திக்கிலும் உள்ள யானை; வசை கலங்க– தன் சினவேகம் அடங்க; செருச்செய்து– அவற்றுடன் போர் செய்து; மருப்பு ஒசித்த– கொம்புகளை ஒடித்த; இசையாலே பெயர் எழுது– புகழாலே விளங்கப் பெற்ற; இராவண ஓ! இராவண ஓ! –இராவணனே; நசையாலே–ஆசையினாலே; மூக்கு இழந்து–என் மூக்கைப்பறிகொடுத்து; நான் பட்ட– நான் அடைந்த; நாண் இலா– வெட்கம் கெட்ட; வசையாலே–பழியினாலே; நின் புகழ்– உனது புகழும்; மாசுண்டது ஆகாதோ– களங்கம் அடையாதோ; (ஆகும் என்றபடி)

திசை யானை எட்டாவன, வருமாறு: