பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9



சீரிய பண்புடைய ஒருவனாக அநுமனைச் சித்தரித்துக் காட்டுகிறான் கம்பன்.

அநுமன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்கிறான் இளையவன். அதாவது அயோத்தியில் என்ன நடந்தது என்பதையும் வனம் புகுந்த பின் என்ன நடந்தது என்பதையும் ஒளியாது சொல்கிறான்.

***

எம் குலத் தலைவற்கு – எங்கள் குலத் தலைவனாகிய சுக்கிரீவனுக்கு; உம்மை – உங்களை; யார் என – யார் என்று; விளம்புகேன் நான் – சொல்வேன் நான்; வீரர் நீர் பணித்திர் வீரர்களே நீங்கள் சொல்லுங்கள்; என்றான் – என்று கேட்டான். மெய்ம்மையின் வேலிபோல் வான் – சத்தியத்திற்கு வேலிபோன்ற அநுமன். வார் கழல் – வீரக் கழல் அணிந்த; இளைய வீரன் – இளைய பெருமாள்; வாய்மை யாவும் – உண்மையாக நடந்த யாவும்; சோர்விலன் – சற்றும் சோர்விலாதவனாய்; மரபுளி – முறைப்படி; தெரிவுற – விளக்கமாக; சொல்லலுற்றான்.

***

கேட்டான் அநுமன்; இராமனை வணங்கினான்; வணங்கிய அநுமனைத் தடுத்தான் இராமன்.

“கேள்வி நூல் மறை வல்லோய்! நீ செய்யத் தகாத செயல் இது? உனது பிரம்மசரிய ஆசிரமத்துக்கு ஏற்ற செயல் அன்று” என்றான்.

அது கேட்ட அநுமன், “அடியேனும் குரங்கினத்தவனே” என்று மறுமொழி கூறினான். விசுவரூபம் எடுத்து நின்றான். பேருருவுடன் விளங்கிய அநுமனைக் கண்டு வியந்தான் இராமன்.