பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


குலம் இது; கல்வி ஈது;
        கொற்றம் ஈது; உற்று நின்ற
நலம் இது; புவனம் மூன்றும்
        நாயகம் உன்னது அன்றோ?
வலம் இது; இவ்வுலகம் தாங்கும்
        வண்மை ஈது என்றால் திண்மை
அலமரச் செய்யலாமோ அறிந்திருந்து
        அயர்ந்துளார்போல்

சிறந்த குலத்தில் பிறந்தாய்! உயர் கல்வியுடையாய்! வெற்றியுடையாய்! நற்குண நற்செயல்யாவும் உடையாய்! மூவுலகிற்கும் தலைமை தாங்குவாய்! வலிமை உனது! பாதுகாக்கும் மேன்மை உனது. எல்லாம் அறிந்தும் அறியாதார் போல் இதனைச் செய்யலாமோ!

***

குலம் இது – உன்னுடைய குலம் சிறந்தது; கல்வி ஈது – சிறந்த கல்வி உன்னுடையது; கொற்றம் ஈது – வெற்றி உன்னுடையது; உற்று நின்ற நலம் இது – பொருந்திய நற்குண நற்செயல்கள் எல்லாம் உன்னுடையன; புவனம் மூன்றும் – மூன்று உலகங்களுக்கும்; நாயகம் – தலைமை; உன்னது அன்றோ – உன்னுடையது அன்றோ? வலம் இது – சிறந்த வலிமை உன்னுடையது; இ உலகம் தாங்கும் – இந்த உலகத்தைப் பாதுகாக்கும்; வன்மை ஈது – மேன்மை உன்னுடையது; என்றால் – என்றால்; அறிந்து இருந்தும் – எல்லாம் அறிந்து இருந்தும்; அயர்ந்துளார் போல் – அனைத்தும் மறந்தவர் போல; திண்மை அலமர – அந்த உறுதிகள் எல்லாம் நிலை குலையும்படி; செய்யலாமோ? – நீ இப்படிச் செய்யலாமோ?

***