43
பொய்யுடை யுள்ளத்தார்க்குப்
புலப்படா புனித மற்றுன்
கையடை யரகு மென்று அவ்
இராமற்கு காட்டுங்காலை
குற்றமிலா மனமுடைய தூய இராமனே! தீய அரக்கர்களுடைய பெருஞ்சேனை என் மகன் அங்கதனின் நெருப்புப் போன்ற தோள்கட்கு முன்னே பஞ்சு பொதியாகும். விரைவில் எரிந்து சாம்பலாகும். அந்த அரக்கர்களை அழிக்க அவன் பெரிதும் உதவுவான். எனவே நீ அவனை (அங்கதனை) அடைக்கலமாக ஏற்பாயாக என்றான் வாலி.
***
பொய் உடை உள்ளத்தார்க்கு - குற்றம் பொருந்திய மனமுடையார்க்கு; புலப்படா புனித - தோன்றாத தூயனே; அடை நெடு வேல் - நெய் பூசப்பெற்ற நீண்ட வேல்களையேந்திய; தானை - சேனைகளையுடைய ; நீல் நிற நிருதர் என்னும் துய் அடைக்கு - நீல நிறமுடைய அரக்கர்களெனப்படும் பஞ்சு மூட்டைக்கு; கனலி அன்ன தோளினன் - நெருப்பினையொத்த தோள்களையுடைய வனும்; தொழிலும் தூயன் - உள்ளத்திலும் செயலிலும் தூய்மையானவனுமாகிய இவனை (அங்கதனை); உன் கையடையாகும் - உனக்கு அடைக்கலமாகத் தந்தேன்; என்று அ இராமற்கு காட்டுங்காலை - என்று கூறி இராமனுக்கு அங்கதனை காட்டியபோது.
***
இராமனின் தாள்களை அங்கதன் வணங்கினான். இராமன் தனது அழகிய உடைவாளை அங்கதனுக்கு நீட்டினான். இதை பெற்றுகொள்வாயாக என்று இராமன் கூறினான். அங்கதனும் அதனை பெற்றது எப்படியிருந்தது? இராமன் அங்கதனை அடைக்கலமாக ஏற்றதை ஏழு உலகமும் துதித்து பாராட்டியது போலிருந்தது. ஏன்?