பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

133

மோரென்று பேர்படைத்தாய்
முப்பேரும் பெற்றாயே

இந்தப் பாட்டை, தனிப்பாடல் திரட்டில் காளமேகம் பாடிய பாட்டு என்று போட்டிருக்கும். இல்லை இது கம்பன் பாட்டுத்தான் என்று சாதிப்பார்கள் டிகேசி. ஏன்? சத்தியம் கூட செய்வார்கள். வேம்புக்கும் பாம்புக்கும் சிலேடை பாடும் காளமேகத்தால் இப்படிப் பாட வரவே வராது. இந்தப் பாடல் எளிமையாக இருப்பதினாலே தான் இதைக் கம்பன் பாடல் என்று முடிவு கட்டுகிறேன். தனிப்பாடல் திரட்டில் காளமேகம் பாடிய பாடல்களோடு சேர்த்துவிட்டால், அந்தப் பாடலில் உள்ள கம்பன் முத்திரை, ஆம், எளிமை என்னும் அதே அற்புதமான முத்திரை தெரியாமலா போய்விடும்? என்பார்கள் டிகேசி நாமும் சரி என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இல்லை என்று சொல்ல நம்மால் இயலவே இயலாது.

டிகேசியின் பேச்சைப் பற்றி இன்னும் என்ன என்ன எல்லாமோ சொல்லலாம். பேச்சுத்தானே அவர்கள் ஜீவன், மூச்சு எல்லாம். முப்பது வருஷ காலமாக நான் அவர்களிடம் கேட்ட பேச்சின் சாரத்தை எல்லாம் முப்பது பக்கங்களில் சொல்லிவிட முடியுமா என்ன?

டிகேசி கம்பன் பாடல்களைப் படித்தார்கள். கம்பன் பாடல்களைப் பற்றிப் பேசினார்கள், கம்பன் பாடல்களைப் பற்றி எழுதவும் செய்தார்கள். அவர்கள் எழுதியதைப் பலர் படித்தார்கள். படித்தவர்கள் அனுபவித்தார்கள், அனுபவித்தவர்கள் அதனால் பயன் பெற்றார்கள்.

ஆனால் கம்பன் பாடல்களுக்குத் தாம் விளக்கம் எழுதுவதைப் பற்றி டிகேசி என்ன நினைத்தார்கள் தெரியுமா? அவர்கள் அபிப்பிராயம், கவிதை, அதிலும் கம்பன் பாடல்களை விளக்கம் எழுதிப் பிறருக்கு விளங்க வைத்துவிடக் கூடும் என்று எனக்குத் தோன்றவில்லை. கம்பன் பாடல்களைப் பிறர்