பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

கம்பன் சுயசரிதம்


என்பதை இவர்கள் உணர்ந்தார்கள் இல்லையே. அண்ணன் தம்பியாய் வாழவேண்டிய இவர்கள் இப்படி அடித்துக் கொள்கிறார்களே என்று பல தடவை நினைத்திருக்கிறேன். இப்படிப்பட்ட நாட்டிலே, சொன்ன வாக்கை நிறைவேற்ற அருமந்த மைந்தனையே காட்டிற்கு அனுப்புகிறான் ஒரு தந்தை. தாய் உரை செய, தந்தை ஏவ, ஒரு சாம்ராஜ்யத்தையே துறந்து காட்டிற்குப் புறப்படுகிறான் ஒரு மகன். தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை தீவினை என்ன நீத்து, காடு சென்ற தமையன் நாடு திரும்பும் வரை தவக் கோலம் தாங்குகிறான் ஒரு தம்பி, இன்பத்திலும் துன்பத்திலும் இணைபிரியாதவனாக இருந்து அண்ணனும் அண்ணியும் தூங்கும் போதும் வில்லையூன்றிய கையொடும், வெய்துயிர்ப்பொடும் கண்கள் நீர் சொரியக் கங்குல் எல்லை காண்பளவும் இமையாது நின்று காக்கிறான் இன்னொரு தம்பி, இம்மட்டோ தான் சக்ரவர்த்தி திருமகன் என்பதையே மறந்து காட்டிலே ஒரு வேடனையும், ஒரு குரங்கினையும், ஒரு அரக்கனையுமே உடன் பிறந்தானாகச் சேர்த்துக் கொள்ளுகிறான் அந்த வர புருஷன், என்றெல்லாம் அறிந்தபோது அந்தக் கதை தமிழ் மக்களுக்குச் சொல்லப்பட வேண்டியது என்று நினைத்தேன். நான் நினைத்ததில் தவறில்லை தானே. மேலும் ஒத்த குலமும், ஒத்த கல்வியும், ஒத்தநலனும் உடைய ஆடவன் ஒருவனும் பெண்ணொருத்தியும் ஒன்றி வாழ்ந்த இந்த தமிழகத்திலே அரசன் ஒவ்வொருவனும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணந்து வாழ்ந்தது நமது தமிழகத்தின் பண்பிற்கே விரோதமாகப்பட்டது. அந்தச் சமயத்தில், ஒரு காதலன் ஏகும் நல்வழி அவ்வழி என்மனம் என்ற உறுதிப்பாட்டோடு இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன் என்று கூறும் செவ்விய வரம்பில் நிற்கிறான் என்றால் அந்தத் தமிழனை நாயகனாக வைத்து ஒரு காவியம் எழுத வேண்டும் என்று நான் துணிந்ததில் வியப்பில்லை அல்லவா? இப்போது தெரிகிறதா தம்பி நான் ஏன் இந்தக் காவியம் எழுதினேன் என்று?