பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

கம்பன் சுயசரிதம்

அழகுணர்ச்சிக்குத் திருப்தி அளிக்கக்கூடியதெல்லாம் கலை என்பார் ஒருவர். கலை என்பது மனிதனுடைய சௌந்தர்ய உணர்ச்சியில் பிறந்து அவனுடைய இச்சையைப் பூர்த்தி செய்வது என்பார் மற்றொருவர். அழகைப் பற்றிய சாஸ்திரமே அது என்பார் இன்னும் ஒருவர். சரி இந்த வியாக்யானங்கள் எல்லாம் கலை என்ன என்பதைக் காட்டி விடுகின்றனவா? என்று கேள்வி. கன்னியாகுமரியில் கடற்கரையில் நின்று கொண்டு காலைக்கதிரவன் கடல் அலைகளின் மீது மிதந்து கொண்டு உதயமாகிற காட்சியைப் பார்க்கிறான் ஒருவன். அந்தக் காட்சி அவனுடைய சௌந்தர்ய உணர்ச்சியில்தான் பிறக்கிறது. அவனுடைய உள்ளத்திலே ஓர் ஆனந்தத்தை உண்டாக்கத்தான் செய்கிறது. அப்படியானால் அந்தச் சூரியன், அந்தக் கடல், அந்தச் சூரிய உதயக் காட்சி எல்லாம் கலையா? கடலை விட்டு மலைக்குப் போவோம். திருக்குற்றால மலையில் சித்திரா நதி ஓர் அருவியாகக் குதிக்கிறது. ஒரு கண்கொள்ளாக் காட்சி. அந்த அருவி நீர் ஓசையோ, நம் செவிகளில் இசையமுதத்தையே பொழிகிறது. அந்த அருவியில் ஆடினாலோ உடல் மாத்திரம் அல்ல, உள்ளமுமே குளிருகிறது. மலையும் மலைவீழ் அருவியும் அருவி நீர் ஓசையும் நமது அழகுணர்ச்சிக்கு ஒரு திருப்தியைக் கொடுக்கின்றன. ஓர் ஆனந்தத்தையே உண்டாக்குகின்றன. ஆனால், இந்த மலை, இந்த அருவி இந்த ஓசையெல்லாம் கலையா? ஒரு பெண் அழகே உருவமாக அமைந்தவள். மன்மதனுக்கு ஏற்ற ரதி. அவள் சௌந்தர்யம் மக்கள் எல்லோரையும் வசீகரிக்கிறது. அவள் மனிதனது அழகுணர்ச்சியைத் தூண்டுகிறாள். உள்ளத்திற்கு ஓர் ஆனந்தத்தைக் கொடுக்கிறாள். அப்படியானால் அந்தப் பெண் கலையா? எல்லாக் கேள்விக்கும் ஒரே பதில். இவை எல்லாம் கலை அல்ல என்பதுதான். ஏன்? இவையெல்லாம் இறைவனால் சிருஷ்டிக்கப்பட்டவை.