54
கம்பன் சுயசரிதம்
அங்கு நாம் காணும் மலைகளையும், மரங்களையும் மணிக்கற்பாறைகளையும், தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகுவதையும் ஒரு சித்திரக்காரன் ஒரு பலகையில் வர்ணங்களைக் குழைத்துப் பூசிச் சித்தரித்து விடுவானேயானால் அது கலையாகிவிடுகிறது.
ஓங்கு மரன் ஓங்கி மலை ஓங்கி மணல் ஓங்கி,
பூங்குலை குலாவுகுளிர் சோலை புடை விம்மத்
என்ற சொற் சித்திரம் எவ்வளவு அழகாக இருக்கிறது. ஓர் அழகிய பெண் கலையல்ல தான். ஆனால் அந்தப் பெண்ணுருவை சௌந்தர்ய தேவதையை, ஒரு சிற்பி தன் கற்பனைத் திறன் முழுவதையும் காட்டி, தன் சிற்றுளியால் செதுக்கி நிறுத்தி விடுவானேயானால், அந்தச் சிலை கலையாகிவிடுகிறது. ஆகவே, மனிதன் தன் கற்பனா சக்தியால் சிருஷ்டித்து, அப்படிச் சிருஷ்டிக்கப்பட்ட பொருளைப் பிறர் உணர்ந்து அது அனுபவிக்கத்தக்க விதமாகச் சொல்லிலோ, இசையிலோ, ஆட்டத்திலோ, சித்திரத்திலோ, அல்லது கல்லிலோ காட்டி விடுவானேயானால் அது கலையாகி விடுகிறது. Art is to be imagined first and then made manifest through the medium of visible materials, visible movements, audible sounds, and perceptible smells என்ற ஆங்கில விளக்கம் இந்தக் கொள்கைக்கு அரண் செய்கின்றது.
சரி இனி கம்பனைப் பார்க்கலாம். கம்பனுடைய காவியம் இமயமலையைப் போன்ற ஒரு கம்பீரமான காவிய மாளிகை. கம்பன் அந்தக் காவிய மாளிகையையும் அந்தக் காவிய மாளிகையில் நடமாடும் பாத்திரங்களையும், எத்தகைய கலையழகோடு சிருஷ்டித்திருக்கிறான் என்பதை எண்ணும் போது, கம்பன் கலை உணர்ச்சியின் வேகம் நமக்குப் புலப்படுகின்றது. இராமகாதையிலே வரும் பாத்திரங்களில்