பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

61

நாம் வணங்கும் தேவர்கள் உலகிலே, பச்சைப் சுங்கொடி அந்த கருப்பில் அழகி உமை, சிவந்த லக்ஷ்மியின் அழகுக்கோ அல்ல வெள்ளை நிறத்து கலைமகள் அழகிற்கோ கொஞ்சமும் குறைந்தவள் அல்லவே. விஷ்ணுவின் நீலமேக சியாமள நிறத்தைப் பற்றியோ சொல்லவே வேண்டாம். ஆணழகன் அருச்சுனனும், காதற் கடவுள் காமனும் நல்ல கருத்த நிறத்தினரே. இவர்கள் எல்லாம் அழகிற்கே எடுத்துக்காட்டாக விளங்கியவர் ஆயிற்றே. அப்படியிருக்க, கருப்பைவிடச் சிவப்பு அழகு என்று கலா ரசிகர்கள் சொன்னால் அவர்களது ரசிகத் தன்மையை என்ன என்று சொல்வது?

இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு முடிந்த முடிவை நிலைநிற்கச் செய்கிறான் காவிய நாயகனான ராமன். வான்மீகர், ராமனது அழகில் எப்படி ஈடுபட்டாரோ? மூலத்தைப் படித்துப் பார்க்கும் வாய்ப்பு இல்லாததினால் கூறுவதற்கில்லை. ஆனால் கவிச்சக்கரவர்த்தி கம்பன் இருக்கிறானே அவன் ராம சௌந்தர்யத்தில் அப்படியே ஈடுபட்டு மெய் மறக்கிறான். ‘அல்லையாண்டு அமைந்த மேனி அழகன்’ என்று அந்த அழகனை நிறைந்த பெருமையோடேயே குறிப்பிடுகிறான். அதிலும் அவனது கரிய நிறத்தையே பாராட்டி நல்ல இருட்டைப் போலக் கரிய நிறத்தவன் என்றே கூறுகிறான். இந்த ‘இருங்கடக் கரதலத்து எழுதரிய திருமேனிக் கருங்கடலை’ மனதிற்கும் எழுத ஒண்ணாச் சீதை கன்னிமாடத்திருந்து கண்டு காதல் கொள்கிறாள் என்பது கம்பன் சொல்லும் கதை. இந்த அழகனது அழகைத் தான் சீதை எப்படி அனுபவித்திருக்கிறாள். அதைக் கவிஞன் தானே சொல்ல வேண்டும். சொல்கிறான்; அழகு ஒழுகும் தமிழ்ப்பாட்டிலே

இந்திர நீலம் ஒத்து
   இருண்ட குஞ்சியும்,
சந்திர வதனமும்
   தாழ்ந்த கைகளும்,