பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

கம்பன் சுயசரிதம்

இலக்குமணனும் சோதிவடிவிலே காட்சிகொடுத்திருக்கிறார்கள் வெள்ளைக்காரக் கலெக்டர் துரை கர்னல் பிளேஸுக்கு. இந்த ராமன் காரியமே இப்படித்தானே. நாளும் ராம நாமத்தையே ஸ்மரணம் செய்து கொண்டிருக்கும் பக்தர்களுக்குத் தரிசனம் தரமாட்டான். ஆனால் அவனைப் பற்றிக் கொஞ்சமும் நினைக்காதவர்களைத் தேடிப்பிடிக்க ஓடுவான். ராமதாஸின் சரித்திரம் தான் தெரியுமே. அல்லும் பகலும் அனைவரும் துதித்து, பத்ராசலத்தில் கோயில் எடுப்பித்த அந்த கோபண்ணாவின் கனவில் கூடத் தோன்றாத அவன் ஹைதராபாத்தில் உள்ள பாதுஷாவின் பள்ளியறைக்கு விரைந்திருக்கிறான். அவனுக்குத் தரிசன்ம் தந்திருக்கிறான். மொகராக்களாகவே அவன் முன் கொட்டி இருக்கிறான் என்றால் கேட்பானேன். ஆனால் இந்தக் கலெக்டர் பிளேஸுக்குத் தரிசனம் தந்தது மிக்க ரசமான கதை.

மதுராந்தகத்து ஏரி பெரிய ஏரிதான், என்றாலும் இந்த ஏரிக்கு ஒரு சாபமோ என்னவோ, வருஷா வருஷம் கரை உடைத்துக் கொள்வது தவறுவது இல்லை. எண்ணற்ற பொருள் செலவில் ஏரிக்கரையைப் பழுது பார்ப்பார்கள் இந்த மராமத்து இலாகா அதிகாரிகள். என்றாலும் நல்ல ஐப்பசி கார்த்திகை மாதங்களில் அடைமழை பெய்து ஏரி நிறைந்துவிட்டால் ஒரே கவலைதான். எங்கேயோ ஒரு இடத்தில் பிய்த்துக்கொண்டு கரை உடையும் தண்ணிரெல்லாம் வெளியே ஓடும்; ஒடும் வழியில் உள்ள பயிர்களை அழிக்கும்; மாடு மனையை மக்களை எல்லாம் வாரிக்கொண்டே போய்விடும். ஏரியில் உள்ள தண்ணீர் எல்லாம் இப்படி வடிந்துவிட்டால் பயிர் விளைவதேது? நிலவரி வசூலாவது ஏது? இதனால் எல்லாம் சர்க்காருக்கு ஒரே நஷ்டம், கலெக்டர்களுக்கோ ஓயாத தலைவலி.

1795 - 1798 வருஷங்களில் செங்கல்பட்டு ஜாகீரில் கலெக்டராக இருந்தவர் கர்னல் லயனல் பிளேஸ் என்ற ஆங்கிலத் துரை. இவருக்கு இந்த மதுராந்தகம் பெரிய ஏரி