16 அ. ச. ஞானசம்பந்தன்
மக்கள் இத்தகைய பொழுது போக்கை தக்கபடி பெறவில்லையானால், செம்மையான வாழ்க்கையைப் பெற இயலாது. பகல் முழுதும் நன்கு உழைக்கின்றவர்கள் மாலையில் ஒய்வு கொள்ளவும் இளைப்பாறவும் நல்ல வசதி வேண்டும். அப்பொழுதுதான் மறுநாள் அவர்கள் நன்கு உழைக்க இயலும். மேலை நாட்டார் இத்துறையில் நன்கு கவனம் செலுத்துவதை இன்றும் காண்கிறோம். நம்முடைய நாட்டிலோ, இளஞ்சிறார்களுக்குக்கூட விளையாடும் இடம் இருப்பதில்லை. அங்ஙனம் இருக்க, பெரியவர்கள் விளையாட்டிடத்திற்கு எங்கே போவது? நம் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இக்குறைபாடு இன்றும் இருந்து வருகிறது. எனவே, கம்பநாடன் கண்ட கனவு நாட்டில் மக்கள் நல்ல பொழுதுபோக்கைப் பெற்றுள்ளனர் என்று கூறுவதை அறியப் பெருமகிழ்ச்சி உண்டாகிறது. மாலையில் இத்தகைய இடங்கட்குச் சென்று வர வசதி இன்மையால், நகர மக்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டே வம்பளந்து, பிறர் பழி தூற்றவும் பழகிக் கொள்கிறார்கள். விளையாட்டில் மற்றொரு பெரும்பயனும் உண்டல்லவா? பிறருடன் எளிமையாகப் பழகவும், விட்டுக் கொடுத்துப் பழகவும், பிறருக்கும் வாழ உரிமையுண்டு என்பதை அறியவும், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சமத்துவ உணர்வைப் பெருக்கிக் கொள்ளவும் விளையாட்டைவிடச் சிறந்த கருவி வேறு யாதுளது? எனவே, ஒரு நகர அமைப்பில் இத்தகைய இடங்கள் மிகுதியும் இருக்க வேண்டுபவை என்பதைக் கவிஞன் அறிவுறுத்துகிறான். கோசலநாட்டு மக்கள் நல்ல பண்பாடு உடையவர்களாய் வாழ்வதற்கு இவை போன்ற சாதனங்கள் உதவி செய்தன என்பதைக் கவிஞன் தனக்கே உரிய முறையில் கூறுகிறான்.
இவ்விளையாட்டிடங்களில் தங்கள் காலம் முழுவதையும் கழிக்கின்ற மக்கள், இன்றும் நம் நாட்டில் அண்டு. வாழ்க்கையில் செய்ய வேண்டிய பெரும்