பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

கம்பராமாயணம்



“கூர்த்த செவிப்புலன் படைத்த யான், தவறி விட்டேன்; குருடன் ஆகிவிட்டேன்; அது யானை எழுப்பிய ஒலியன்று; ஒர் இளைஞன் பானை எழுப்பியது; நீர் மொள்ளும் முடுமுடுப்பு அது. அம்பு பட்டு அவன் அலறி விழுந்தான்; அலறல் கேட்டு ஒடினேன்; அவனைத் தேடினேன்; வாடினேன்.”

“ஐயா! நான் அந்தணச் சிறுவன்; விழி இழந்தவர் என் பெற்றோர்; அவர்களுக்கு வழிகாட்டி அழைத்து வந்தேன் யான்; நீர் வேட்கையால் அவர்கள் தவித்தனர்; அதனால், இங்கு முகக்க வந்தேன்; நீ என் உயிரை முகந்துவிட்டாய்”.

“ஐயா! எனக்கு நீர் ஓர் உதவி செய்துதர வேண்டும்; இந்தத் தண்ணிர் மிடாவை அவர்களிடம் தந்து குடிக்கச் செய்; என் இறுதி அஞ்சலியை அவர்களுக்கு அறிவித்து விடு” என்றான்.

அம் முதியவருக்குப் பருக நீர் கொண்டு சென்றேன்; அவர்கள் மனம் உருக, “'மகனே வருக! நீர் தருக” என்று குழைந்து பேசினர்.

“கரம் நீட்டினேன்”

“உன் உரம் எங்கே?” என்று என்னைத் தழுவினர்.

“என் தரம் அவர்களுக்கு அறிவித்தேன்”

“இப்பொழுதே விழி இழந்தோம்” எல்லு கதறினர்.

“நான் நாட்டு மன்னன்” என்றேன்.

கேட்டு அவர்கள் மன்னிக்கவில்லை; “நீயும் எம்மைப் போல் மகனைப் பிரிந்து தவிப்பாய்” என்றனர்.