பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்டம்

111



சொற்களைக் கேட்டுக் கடுந்துயரில் ஆழ்ந்தான்; விம்மி அழுதான்.

“ஏன் என்னை உன்னிடமிருந்து பிரிக்கிறாய்? உனக்கு நான் என்ன தீங்கு செய்தேன்? என்னை நான் விரும்பும் இடத்தில் வாழ விடு”

“மீனும் குவளையும் நீரில்தான் வாழும்; ஏனைய உயிர்களும் அவை அவை வாழும் இடம் இவை எனத் தேர்ந்து எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன; கட்டிய மனைவியை நீ விட்டு ஒதுங்கமுடியாது; ஒட்டிய உறவுடைய என்னையும் நீ வெட்டித் தள்ளமுடியாது; “எட்டப் போ” என்று கூறமுடியாது! நீ இல்லாமல் நான் வாழ முடியாது; அன்னை சீதையும் உன்னை விட்டுப் பிரிந்து வாழ முடியாது; இது எங்கள் நிலை”.

“ஏன் என்னை ஒதுக்குகிறாய்; உனக்குக் கொடுமை இழைத்த தசரதன் மகன் என்பதாலா? நீ எதைச் சொல்லி இதுவரை மறுத்தேன்; சினம் தணிக என்றாய்; தணிகை மலையாயினேன்; சீற்றம் கொள்ளாதே என்றாய்? அதற்கு மறுப்பு நான் கூறவில்லை; நீ எதைச் சொன்னாலும் கேட்டு நடப்பவன் நான்; ஆனால் ‘இரு’ என்ற கூறுவதை என்னால் பொறுத்துக் கொள்ளமுடியாது; இது கொடுமை மிக்கது; அரச செல்வத்தை விட்டுச் செல்லும் நீ, நானும் உன் உடைமை என்பதால் என் உறவை உடைத்து எறிகிறாயா?” என்று கேட்டான் அதற்குமேல் இராமன் பேசுவதைத் தவிர்த்தான்; அவனைத் தடுக்கவில்லை.