பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்டம்

121



காத்துக்கிடக்கின்றார்கள்” என்று அன்பு காட்டி வேண்டினான்.

“வீரனே! இங்கு வந்தது சுற்றுலாப் பயணம் செய்ய அன்று; உண்டு உறங்கிக் களித்து விளையாட அன்று; புண்ணிய நதிகள் ஆடவும், ஞான நன்னெறி நண்ணவுமேயாகும்; இதுவே என் அன்னையின் அன்புக் கட்டளை; இது எமக்கு ஏற்பட்ட கால் தளை, பதினான்கு ஆண்டுகள் விரைவில் கழிந்துவிடும். திரும்பும்போது விரும்பி உங்களைச் சந்திப்போம்; உம் விருந்து ஏற்போம்” என்று கூறினான்.

“யாம் உடன் பிறந்தவர் நால்வர்; உன்னோடும் சேர்ந்து ஐவர் ஆகிவிட்டோம்” என்று ஆறுதல் கூறினான்.

குகன் அதற்குமேல் அதிகம் பேச, அவன் அடக்கம் இடம் அளிக்கவில்லை. அவன் கடமை செய்வதில் நாட்டம் கொண்டான். ஒடம் ஒன்று வந்து நின்றது. அதில் மூவரும் ஏறிக் கங்கையைக் கடந்து அடுத்த கரை சேர்ந்தனர்.

வனம்புகு வரலாறு

இளவேனிற் காலம் அந்தக் காட்டுக்குப் பொலிவை ஊட்டியது; இராமன் வரவும் முகில்கள் பூ மழை பொழிந்தன; வெய்யில் இளநிலவைப் போலத் தண் கதிர்களை வீசியது; மரங்கள் தழைத்து நறுநிழல் தந்தன. பனித்துளிகள் சிதறின. இளந்தென்றல் மலர்களில் படிந்து மணம் அள்ளி வீசியது; மயிலினம் நடமாடின; இத்தகைய காட்டுவழியில் இராமன் இனிதாய் நடந்து சென்றான்.