பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரணிய காண்டம்

167



“மழலை மொழி மகிழப் பேசும் அழகியைப் பெற்ற பின் கொள்னை மாநிதிகளை அவளுக்கே கொடுப்பாய்; சீதையை நீ பெறுமாறு செய்வதால் நான் உனக்கு நல்லவள் ஆகின்றேன்; ஆனால், கிள்ளைபோல் மொழி பேசும் உன் விருப்ப மாதர்க்கு எல்லாம் கேடு சூழ்கின்றேன் அல்லவா?”

“அவள் தெய்வ மகளும் அல்லள்; தாய் வயிற்றில் பிறந்த மானுட மகளும் அல்லள், மண்மகள் தந்த மாமகள் ஆவாள்; சிற்றிடையாளாகிய சீதை என்னும் மானை நீ பெற்றுக் கொண்டு இராமன் என்னும் யானையை வளைத்துப் பிடித்து எனக்கு விளையாடத் தந்துவிடு.”

“அன்னவள் தன்னை உன்னிடம் சேர்க்கவே அவளை அணுகினேன்; அவ் இராமன் தம்பி என்னை இடையிலே புகுந்து மூக்கு அரிந்துவிட்டான் அப்பொழுதே என் வாழ்வினை முடித்துக் கொண்டு இருப்பேன்; உன்னிடம்; சொல்லிவிட்டு உயிரைவிடத் துணிந்தேன்” என்று சொல்லி முடித்தாள்.

அவள் பற்றவைத்த நெருப்பு அவனைச் சுட்டெரித்தது. சீதையின்பால் சிந்தை இழந்த அவன் அவள் நினைவாக மாறிவிட்டான், இராமனால் உயிரிழந்த தன் தம்பி கரனையும் மறந்தான்; தன் தங்கையின் மூக்கைத் தடிந்த இலக்குவன் மீது கொண்ட பகையையும் மறந்தான்; அதனால், தனக்கு நேர்ந்த பழியையும் மறந்தான்; தான் பெற்றிருந்த வரங்களை எல்லாம் மறந்தான்; சூர்ப்பனகை சொல்லிக் கேட்ட மங்கையை மட்டும் அவனால் மறக்க முடியவில்லை.