பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

கம்பராமாயணம்



திரிசடையின் ஆறுதல் மொழிகள்

உறக்கம் இழந்த நிலையில் அவளுக்கு உதவியாய்த் திரிசடை என்பவள் பேச்சுத் துணையாய் இருந்தாள்; அவள் வீடணன் மகள்; தன் இடக்கண்ணும் புருவமும் துடிப்பதை அத் தூய சீதை வீடணன் மகளிடம் எடுத்து உரைத்தாள்.

‘அது நன்மைக்கு அறிகுறி’ என்று நாலும் தெரிந்தவள் போல் அந் நங்கை சீதைக்கு விளக்கி உரைத்தாள்; அரை உறக்கத்தில் நிறைவு பெறாத தான் கண்ட கனவினையும் திரிசடை சீதைக்கு உரைத்தாள்.

பேயும் கழுதையும் இழுத்துச் சென்ற தேரில் இரத்த ஆடையனாய் இராவணன் தென்திசை நோக்கி இறுதி யாத்திரை செய்வதைக் கனவில் அவள் கண்டாள்.

அரிமா இரண்டு, புலிகளோடு வந்து யானைகளை அடித்துக் கொன்ற கனவும் கருத்துள்ளதாய் இருந்தது. இராமனும் இலக்குவனும் அனுமனோடு வந்து இலங்கை வேந்தனை வெல்லும் நிகழ்ச்சி, இதில் உருவகப்படுத்தப் பட்டுள்ளது. காட்டில் சிறைப் பட்டிருந்த தோகை மயில், விடுதலை பெற்று, விண்ணில் பறந்து சென்றது என்றும் கூறினாள். சோகத்தில் அகப்பட்டிருந்த சீதைக்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என்பதை அது தெரிவித்தது.

நம்பிக்கை ஊட்டும் திரிசடை கனவுகள், அவள் விரும்பிக் கேட்பவையாய் அமைந்தன.

திருமகள், திருவிளக்கு ஒன்றனை ஏந்தி இராவணன் மனையிலிருந்து வெளிப்பட்டு வீடணன் கோயிலில் அடி எடுத்து வைத்தாள்.