பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

கம்பராமாயணம்



வருவதைக் கண்டனர்; பருவதம் அசையும்” என்பதை அவள் வருகையில் கண்டனர். வானில் கண்ட மதிப்பிறையை அவர்கள், அவள் கூனல் பற்களின் வளைவில் கண்டனர். வேள்வித் தீயில் காணும் தீப்பொறிகளை அவள் வேள்விக் குறிகளில் காண முடிந்தது. கண்கள் சிவந்து கிடந்தன. பசி என்பதற்கு எரிமலையின் வடிவம் உண்டு என்பதை நெறி தவறிய அவள் இரைச்சலில் கண்டனர்.

தாக்கும் போக்கில் அவர்களை நோக்கி நடந்தாள். “உங்கள் சடைமுடி என்னை ஏமாற்றாது; நீங்கள் மணிமுடி தரிக்கும் மன்னவனின் சிறுவர்கள் என்பது எனக்குத் தெரியும்; வற்றி உலர்ந்த தவசிகளைப் பற்றித் தின்று என் பற்கள் கூர் மழுங்கிவிட்டன. செங்காயாகச் சிவந்து கிடக்கும் கனிகள் நீங்கள்; சுவை மிக்கவர்கள், நவை அற்றவர்கள்; நெய்யும் சோறும் நித்தம் தின்று கொழு கொழுத்து உள்ள மழலைகள் நீங்கள்; காத்திருந்த எனக்கு வாய்த்த நல் உணவாக அமைகிறீர்கள்” என்று சொல்லிக் கொண்டு சூலப்படை எடுத்து அந்த மூலப்பொருளை நோக்கி எறிந்தாள். வில் ஏந்திய வீரன் இராமன் தன் விறலைக் காட்ட அம்பு ஒன்று ஏவினான். அது அவள் ஏவிய சூலத்தை இருகூறு ஆக்கியது; சூலம் தாங்கிய அவள், அதை இழந்து ஒலம் இட்டாள். மறுபடியும் அவள் போர்க் கோலம் கொண்டாள்.

பெண் என்பதால் அவளைக் கொல்லத் தயங்கினான். அவள் பேயாக மாறிவிட்டதால் அவளை அடக்க வேண்டியது அவன் கடமையாகியது. மெல்லியல் என்ற சொல்லியலுக்கு அவளிடம் எந்த நல்லியலும்