14
குழந்தை பிறந்த செய்தி அவர்களுக்குத் தெரிந்தால் ஏதேனும் செய்துவிடக் கூடும். அரண்மனைக்குக் குழந்தையைக் கொணர்ந்து வளர்த்தால் தக்க பாதுகாப்பு வேண்டும். அதற்குரிய படைப்பலம் இல்லை. ஆகவே, இன்னும் சில ஆண்டுகள் ஒருவரும் அறியாமல் குழந்தை வளர்வதே நல்லது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். இரும்பிடர்த்தலையாரும் அந்த முடிவுக்கு உடன்பட்டார். குழந்தையைக் காக்கும் பொறுப்பு அவரிடமிருந்து அகலவில்லை. இன்ன இடத்தில் குழந்தை வளர்கிறது என்ற செய்தி மிகவும் இரகசியமாகவே இருந்தது.
ஆயினும் சோழ நாட்டு மக்களிடையே ஒரு வதந்தி பரவியது. சோழ குலத்தைக் காப்பாற்ற அரசிக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி அங்கங்கே வழங்கியது. “எல்லாம் பொய், இப்போது ஆட்சி புரிபவர்கள் தங்கள் ஆட்சி மாறாமல் இருக்க வேண்டிக் கட்டிவிட்ட கதை” என்று சிலர் சொன்னார்கள்.
“இளஞ்சேட்சென்னி வாழ்ந்திருந்த காலத்தில் பிறக்காத குழந்தை இப்போதுதான் பிறந்து வளர்கிறது போலும்!” என்று சிலர் ஏளனமாகப் பேசினர்.
“அயலிலுள்ள பாண்டி நாடும் சேர நாடும் எவ்வளவு சிறப்பாக இருக்கின்றன! அரசன். இல்லாத நாடும் ஒரு நாடா? பேசாமல் சேரன் ஆட்சியையே ஏற்கலாமென்று தோன்றுகிறது.”
இவ்வாறு பலர் பலவிதமாகப் பேசிக்கொண்டிருந்தனர். மன்னன் ஒருவன் இல்லாமையால்