பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

189

கலா ஒரு வயதுக் குழந்தையா யிருந்தபோதே தாயை இழந்து விட்டாள். அன்று தொடங்கி இன்றுவரை தன் பாட்டி சித்ராதேவியிடமே வளர்ந்து வந்தாள்.

சித்ராதேவி வேசியர் குலத்தைச் சேர்ந்தவள்; தன் அருமை மகள் கோதை கலாவைப் பெற்றுத் தந்து விட்டுக் காலன் கைக்குப் போனதிலிருந்து கலாவைக்கண்ணும் கருத்துமாய் வளர்த்து வருகிறாள். பேரப் பெண் என்ற 'பாச’ உணர்வு ஒரு மடங்கு என்றால், செழுமையாக வளர்த்தால் பலி கொடுத்துப் பயன் பெறலாம் என்ற மோச உணர்வு மும்மடங்கு சித்ராதேவிக்கு உண்டு.

கலா இப்போது பதினாறு வயது நிரம்பிய பருவ மங்கை. எந்தத் தரத்தைச் சேர்ந்த ஆடவரும் அவளை ஒருமுறை பார்த்துவிடின், காட்சி இன்பத்திற்காகவாவது மறுமுறையும் அவள் முகத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கொடுக்காமல் தங்கள் கண்களை ஏமாற்ற முடியாது. கண் காட்சியில் கண்ணாடி மாளிகையில் வைத்துக் கண்டு களிக்க வேண்டியவள் அவள். வேசி சித்ரா தேவியின் மகளாகிய கோதை என்னும் அழகு தேவதைக்கும் அரசபோகத்தில் மிதந்த எந்த ஆடவனுக்குமோ பிறந்த உயர்ந்த இன ஒட்டு மாங்கனி வளமாகத் தானே இருக்கும்! அந்தக் கணியைக் கொய்து அருந்தத்தான் சேதுநாதன் வந்திருக்கிறார்.

சேது நாதன் பாண்டிய நாட்டில் பழைய பாளையப் பட்டுப் பரம்பரை ஒன்றினைச் சேர்ந்தவர். ஏராளமான செல்வத்துக்கு உடையவர். இன்னும் சில தலைமுறைகளின் ஆடம்பரச் செலவிற்கும் அவரது செல்வம் தாக்குப் பிடிக்கும்.

சேது நாதனுக்குச் சென்னையிலும் ஒரு பெரிய மாளிகை உண்டு. அடிக்கடி வந்து அங்கே தங்கிப் போவார்.