பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/203

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

201

இவ்வாறின்றி, இருவரும் வன்மையுடன் கயிற்றை எதிர்-எதிர்ப் பக்கலில் இழுக்கும்போது, கண்ணன் கடம்பன் இருக்கும் இடத்திலும் கடம்பன் கண்ணன் இருக்கும் இடத்திலும் மாறி வந்து நிற்பார்கள் என்றால், அது மிகவும் வியப்பிற்கு உரியதல்லவா? இத்தகைய வியப்பைத்தான் கம்பர் காட்டும் கயிறு இழுப்புப் போட்டியில் காணமுடிகிறது. இதன் விளக்கம் வருமாறு:-

இங்கே கயிறு இழுப்புப் போட்டி நடத்துபவர்கள் இராமனும் சீதையும் ஆவர். விசுவாமித்திரருடன் இராமன் மிதிலைத் தெரு ஒன்றில் நடந்து சென்றுகொண்டிருக்கிறான். அந்தத் தெருவில் உள்ள ஒரு மாளிகையின் மாடியில் சீதை நின்றுகொண்டிருக்கிறாள். ஒருவரை யொருவர் உற்று நோக்குகின்றனர். இருவரின் கண்களும் ஒன்றை யொன்று கவ்வி உண்ணுகின்றன; உணர்வு ஒன்றிய நிலையில் அண்ணலும் அவளை நோக்கிக்கொண்டிருக்கிறான்-அவளும் அவனை நோக்கிக்கொண்டிருக்கிறாள்.

கூரிய நுனி உடைய வேல் போன்ற அவளுடைய கண் பார்வை அவனுடைய தோள்களில் ஆழ்ந்து பதிந்து விட்டன. அவனுடைய பார்வை அவளுடைய மார்பகத்தில் தைத்துக் கொண்டன. இவற்றை அறிவிக்கும் கம்ப ராமாயணப் பாடல்களாவன:

"எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்."

"நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேல்இணை
ஆக்கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன;
வீக்கிய கனைகழல் வீரன் செங்கணும்
தாக்கணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே”