பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

பெரியவரைப் பார்த்தான். மூச்சு இருந்தது. நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைத்தான். உடனே டாக்டருக்கு ‘போன்’ செய்தான். கைத்துப்பாக்கி இடறியது!

குழலி, “அப்பா ! அப்பா !...” என்று கதறினாள்.

அன்னபாக்கியத்தம்மாளின் நெற்றித் திலகம் சத்தியத்தின் ஜோதியாக ஒளிர்ந்தது. அவள் கதறலை நிறுத்தவில்லை.

“அம்மா! நீங்க தர்மத்துக்கு ஒரு சாட்சி. சத்தியத்துக்கு ஒரு குரல். உலகத்திலே குற்றம் அழியவும் தர்மம் வாழவும், நீங்க கொண்ட புருஷனையே உங்க வாக்காலே தண்டிச்சு, இருபத்தைஞ்சு வருஷ காலம் சத்தியத்துக்காக —தர்மத்துக்காக — நீதிக்காக நீங்க தனிச்சு வனவாசம் கணக்காய் ஒதுங்கி இருந்தீங்க. உங்க கணவரைவிட்டு இவ்வளவு காலம் பிரிஞ்சு இருந்தீங்க. உங்க மகளுக்கும் அதன் அப்பாவைக் காண்பிக்காமலும் அவ்வளவு வைராக்கியத்தோட இருந்தீங்க! உங்களைப் பார்க்கிறதே சத்திய தரிசனமாகவே தோணுது. நான் வாழ, உங்களையே அழிச்சுக்கிட்டிங்க! ... எனக்குக் கடவுளைக் கண்டு பழக்கமில்லை, தாயே! ஆனால், இப்போ கடவுளைக் கண்டு பழகிக்கிட்டேன் !. நீங்க அழாதீங்க! என் அப்பாவுக்கு உயிருக்கு ஒரு பயமும் இல்லை ... என் பிரார்த்தனையைக் கடவுள் வாழ்த்தாமல் இருக்க மாட்டாரம்மா !...”

ஞானபண்டிதன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.

டாக்டர் வந்தார்.

ஶ்ரீமான் சோமசேகர் அவர்களுக்குப் புதிய ஜன்மத்தைக் கொடுத்துவிட்டு விடை பெற்றார்.

அங்கு அமைதி சொல்லிச் சொல்லி வழிந்தது.

“அப்பா ! இந்தப் பங்களாவிலே நடக்கவேண்டிய கல்யாணங்களை நடத்தி வைக்காமத்தானே எங்களை ஏமாத்திட்டுப் போகப் பார்த்தீங்க ? அது முடிஞ்சுதா ? இனி ஒரு வினாடிகூட இந்தப் பங்களாவிலே எங்களுக்குத் தெரியாம நீங்க மூச்சுவிடக்கூட மறந்திட முடியாதாக்கும் ! அதுமட்டுமா ? இந்தப் பங்களாவிலே பிறக்கப்போற குழந்தை குட்டிங்ககூட உங்களை அந்தண்டை இந்தண்டை நகர விடாதாக்கும் !...