பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

கொடுங்க. அவனுக்கு இரண்டாம் அம்மாவாக வரப்போற புண்ணியவதியைச் சோதிச்சுப் பார்த்து, அவளுக்கு அந்தப் புனிதப் பதவியை——பாசப் பொறுப்பைக் கொடுங்க ! நீங்க என்னை எப்படி மறப்பீங்க ? எனக்கு நீங்க திருப்பூட்டினவுடனேயே நான்தான் என் உயிரை உங்க உயிரோடே இரண்டறக் கலக்கச் செஞ்சிட்டேனே ?...” என்று அவள் தேம்பியவண்ணம், அவனிடம் முன் போலக் கையடித்து வாங்குவதற்காகத் தன்னுடைய நலிந்த கரங்களே நீட்ட முனைந்தபோது, விதி அந்தப் பொற்கரங்களிலே முத்திரையிட்டு இறுதித் தீர்ப்பு வழங்கிவிட்டது ! “கண்ணே மல்லி, என் நெஞ்சைத் திறந்து கொட்டி அழக்கூட எனக்கு ஒரு பாக்கியத்தை நீ கொடுக்காமல், விஷ ஜூரம்னு பாயும் படுக்கையுமான சடுதியிலேயே நீ போயிட்டியே ?” என்று கதறியழுதானே அவன்?

அடுத்த தடவையாக ஒரு சிகரெட் எரிந்தது.

எரிந்த மனத்திற்கு அந்தச் சூடுதான் ஆறுதல் போலும் !

அடுத்த தடவையாகவும் ரிக்ஷா ராமையா சிவஞானத்துள் புகுந்துகொண்டான். அவன் பேச்சும் அவனுடன் புகுந்து கொண்டது !‘...அப்படி நீங்க உங்க ராஜாவுக்கு ஒரு இரண்டாவது அம்மாவைக் கொடுத்தாத்தான், நீங்க நம்பியிருக்கிறபடி, உங்க தெய்வம் உங்க ராஜாவை வளர்க்க முடியும் ! வளர்த்துக் காப்பாத்தவும் முடியுமுங்க, அண்ணாச்சி !’

அவன் மனம்——மனத்தின் மனம் அதிர்ந்தது.

ராமையா பிரியும் கட்டத்தில் அவனிடம் தான் விடுத்த முடிவை நினைத்துக்கொள்ள வேண்டியவனான் சிவஞானம் : “ராமையா, இந்தச்சிறு வயதிலே எனக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த மகத்தான சோகத்துக்கு நான் பதில் சொல்லித்தான் தீருவேன். என் அன்பு மனைவி மல்லிகாவின் ஞாபகம் ஒண்ணே என்னைக் காப்பாத்திப்பிடும்னும் நினைச்சிருக்கேன். என் தங்கம் ராஜாவைக் காப்பாத்துறது ஒண்னு தான் இனி என் கடமை, லட்சியம், கனவு. இதுக்கு நான் அடிக்கடி சொன்னதாட்டம் அந்த ஆண்டவன்தான் கை கொடுக்க வேணும். பட்டணத்துக்குப் போனதும்அவனுக்கு ஒரு ஆயாவை நியமிச்சிட வேணும்