பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

மல்லிகா எவ்வளவு நாழியாகத் தன் கணவனின் தீர்ப்புக்காகக் காத்திருப்பாள், 'பாவம் !

சிகரெட்டை வெறியுடன் ஊதினான் சிவஞானம். 'எஸ்.... ஆமாம், நான் இப்பொழுது ஒரு முடிவைச் செய்தாக வேண்டும். என் ராஜாவுக்கு ஒரு இரண்டாவது அம்மாவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்! ... இது என் கடமை!... '--சிகரெட்டின் புகை நெஞ்சிற்குள் புகுந்தது. இருமல் வந்தது. இருமினான்.

'அத்தான்!'

குரலுக்குடையவள் மல்லிகா அல்லவா ?

'மல்லிகா ! உன் கட்டளைப்படி நம்ம ராஜாவுக்கு ஒரு இரண்டாவது அம்மாவைத் தேர்ந்தெடுத்து நியமிச்சிடுறேன்!...” ஏதோ ஒரு முடிவின் நெருக்கமாகச் சிந்தனைக் குமைச்சலுடன் குழந்தையையே அவன் வெறிக்கப் பார்த்தான். அவன் கண்கள் வழிந்தன. தெய்வமே !'... - அவன் உள்ளத்தில் அவனது மல்லிகா மங்கள சொரூபியாகத் தோன்றி மறைந்தாள். அவன் நிறைவுடன் சிரித்த ஆனந்தச் சிரிப்பின் மெல்லலைகள் அவன் மேனியைப் புல்லரிக்கப் பண்ணின.

"நான் இப்போது என் ராஜாவுக்கு ஒரு நல்ல இரண்டாவது அம்மாவை நியமிச்சாகணும்! சரி : அந்த இரண்டாவது அம்மாவை நான் எங்கே கண்டு தேடுவேனாம் ? தொடுக்கப்பட்ட கேள்வியில் தவிப்பு மேலோங்கியிருந்தது. எதை எதையோ எண்ணினான். ஏதேதோ நினைவுகள் பேயாட்டம் கூட்டிச் சிரித்தன.

"அத்தான்.”

யார் அழைத்த குரல் அது ?

யார், விஜயாவா? அவன் மாமன் மகள் விஜயா அல்லவா?

"விஜயா !” - அவன் மனம் ஏன் அப்படித் திடுதிப்பென்று .நடுங்கித் தொலைத்தது ? -

விஜயா புன்னகையும் புது நிலவுமாகப் பூவும் பொட்டும் சூழச் சிரித்துக்கொண்டேயிருந்தாள். சிரிப்பதற்காகத்தான் வாழ்க்கை என்று செப்பியவள் சிரிக்கக் கேட்க வேண்டியதுஇல்லைதான் !