பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தென்தமிழ் தெய்வப் பரணி

21


இறுவாய்

கலிங்கத்துப் பரணி தாழிசையால் முதன் முதலாகப் பாடப்பெற்ற ஓர் ஒப்பற்ற பரணி நூல். இந்நூல் பரணி நூல்களுக்கெல்லாம் தலை சிறந்ததாய், பரணி பாடுவோர்க்கெல்லாம் முன்மாதிரியாய், இலக்கிய வானில் ஒரு கலங்கரை விளக்கம் போல் நின்று நிலவுகிறது. காவியங்களுக்கெல்லாம் சிறந்ததாய்க் கம்ப ராமாயணம் திகழ்வது போல, பரணி நூல்களுக்கெல்லாம் சிறந்தாய்க் கலிங்கத்துப் பரணி மிளிர்கின்றது. கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தரும் தாம் பாடிய தக்க யாகப் பரணியில் "தென்தமிழ் தெய்வப் பரணி" என்று இந்நூலைச் சிறப்பித்துள்ளார். நூலைப் பாடிய கவிஞரையும் பிற்காலத்துப் புலவர் பல பட்டடைச் சொக்கநாதர் என்பார், "பரணிக்கோர் சயங் கொண்டான்" என்று பாராட்டியுள்ளார். எனவே, அணி நலன்களும் சுவை நலன்களும் பிற நூல்களில் காண்டற்கரிய கற்பனைகளும் செறிந்துள்ள இந்நூலைத் தமிழ்மக்கள் படித்துச் சுவைக்க வேண்டியது அவர்கள் கடமை.