பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42



வெறும் வெற்றிப் புகழ் ஒன்றையே கருதி மேற்கொண்டானல்லன்; மாறாக, அக்கடாரத்திற்குக் கடல் வாணிகம் கருதிச் சென்று வாழும் எண்ணிலாத் தமிழ் மக்களுக்கு, அந்நாட்டு மன்னனால் நிகழ்ந்த இன்னலைப் போக்கி, அவர்க்கு இனிய வாழ்வளிக்கவே, அவ்வரும் பெரும் பணியை விரும்பி மேற்கொண்டான்.

கடார வெற்றிக்குப் பின்னர், இராசேந்திரன் சிந்தை யும் செயலும் அரசியல் துறைகளில் சென்றில; அரசியற் பொறுப்புக்களையெல்லாம் தொண்டை மண்டலத்தும், பாண்டி மண்டலத்தும், சேர மண்டலத்தும், ஈழ மண்டலத்தும் இருந்து அம்மண்டலங்களின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நிற்கும் தன் அரும்பெறற் புதல்வர்கள்பால், சிறப் பாகத் தன் மூத்த மகனாகிய இராசாதிராசன்பால் ஒப்படைத்துவிட்டு ஒய்வு பெற்றுக் கொண்டான்; அந்நாள் முதல் அவன் சைவசமய வளர்ச்சியும், தமிழ்மொழி வளர்ச்சியுமே தன் தலையாய கடமையாகக் கொண்டு வாழ்ந்தான்.

தன் தந்தை, முதலாம் இராசராசன் உண்டாக்கிய சோழர் சாளுக்கிய உறவு, சோணாட்டின் நல்வாழ்விற்கு நல்லதுணையாம் என்பதை இவனும் எண்ணித் தன் இளையமகள் அம்மங்கைதேவியாரைத் தன் உடன் பிறந்தாள் குந்தவைப் பிராட்டியாருக்கும் கீழைச்சாளுக்கிய மன்னன் விமலாதித்தனுக்கும் பிறந்த இராசராச நரேந்திரன் என்பானுக்கு மணம் செய்துவைத்தான்; பிற்காலத்தே, சோழர்குலத்தையும் சாளுக்கியர் குலத்தையும் ஒன்றாக்கி, இருகுலத்தவர்க்கும் ஒருவனே ஆகிக் கோவோச்சிய குலோத்துங்கனைப் பெற்றெடுத்த பெரியாள், இராசேந்திரன் பெற்ற குலக்கொடியாகிய இவ்வம் மங்கை தேவியே ஆவள்.

இராசேந்திரன் பெற்ற வெற்றிகளுள் ஈடும் எடுப்பும் இல்லாப் பெரு வெற்றிகளாய கங்கை வெற்றியையும்,