பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

124

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

யும், பேச்சுரிமையும் உண்டு. காங்கிரசின் நடைமுறை பொதுவாக உலகில் உள்ள வேறு இராச்சிய சட்டசபைகளின் நடைமுறையைப் பின்பற்றியதே யாகும்.

ஜனாதிபதியும் காங்கிரசும் : நிருவாகத்திற்கு அவசியமான சட்டங்களைச் சட்டசபை நிறைவேற்ற வேண்டும். சட்டசபையின் கருத்தைத் தழுவி நிருவாகப்பகுதி நடந்துகொள்ளவேண்டும். நிருவாகப் பகுதியின் நடவடிக்கைகளைச் சட்டசபையார் நாள்தோறும் பரிசீலனை செய்து, தவறுகளைக் கண்டித்தும், பொதுமக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும்படி செய்தும் வந்தால் பொறுப்புள்ள ஆட்சி ஏற்படும். அமெரிக்க சர்க்காரில் நிருவாகப் பகுதியும் சட்டசபையும் ஒன்றிற்கொன்று சம்பந்தமில்லாமல் அமைக்கப்பட்டுள்ளதால் அவை இரண்டும் ஒத்துழைப்பது கடினமான காரியம். அரசியல் அமைப்பின்படி அவை இரண்டிற்கும் உள்ள தொடர்புகள் சிலவே. ஜனாதிபதி ஒவ்வோர் ஆண்டும் காங்கிரசுக்கு நாட்டு நிலைமையைப் பற்றித் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறார். வேண்டும்போது காங்கிரசுக்கு அவர் நிருபம் (Messages) அனுப்பலாம் ; காங்கிரசை விசேஷமாகக் கூடும்படியும், குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றி ஆலோசிக்குமாறும், சட்டங்கள் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளலாம். காங்கிரசில் நேரில் வந்திருந்து தாமும் பேசலாம். இத்தொடர்புகள் அரசியல் அமைப்பில் அனுமதிக்கப்பட்டவை. நிருவாகத் தலைவரும் அவர் மந்திரிகளும் சட்டசபைகளில் அங்கம் வகிக்கக்கூடாது. அங்கு மசோதாக்களைப் பிரேரணை செய்யவும், அவற்றைப்பற்றிய விவாதங்களில் கலந்துகொள்ளவும், நிருவாகத்தைக் குறைகூறுவோருக்குச் சமாதானம் அளிக்கவும் நிருவாகிகளுக்கு உரிமையில்லை. காங்கிரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஜனாதிபதி தம் சம்மதத்தை அளிக்க மறுக்கலாம். காங்கிரசு கமிட்டிகளின் முன்பு தோன்றி, நிருவாக அதிகாரிகள் சாட்சியம் அளிக்கலாம்.

இவை தவிர, நிருவாகப்பகுதிக்கும் காங்கிரசுக்கும் பழக்கத்தில் பல தொடர்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றுள் முக்கியமானது அரசியல் கட்சிகளால் ஏற்பட்டுள்ள தொடர்பு. ஜனாதிபதி ஓர் அரசியல் கட்சியின் தலைவர். அவருக்கும் அவர் கட்சியைச் சேர்ந்த காங்கிரசு அங்கத்தினர்களுக்கும் நெருங்கிய உறவு எப்போதும் இருந்து வருகிறது. தமது கட்சியின் திட்டங்களை நிறைவேற்றுவதில் நிருவாகப்பகுதியும் சட்டசபையும் ஒத்துழைப்பது இந்த உறவினால் சாத்தியமாகிறது. மேலும் காங்கிரசில் பல கமிட்டித் தலைவர்களுடன் ஜனாதிபதி தம் திட்டங்களைக் குறித்துக் கலந்து ஆலோசிப்பதும் உண்டு. சட்டங்களுக்குத் தம் சம்மதத்தை மறுத்தல், சட்டசபை அங்கத்தினர்கள் விரும்பிய காரியங்களைச் செய்தல், பொது மக்களின் கருத்தை அறிதல் முதலிய பல வேறு வழிகளில் ஜனாதிபதி காங்கிரசை நிருவாகத்தோடு ஒத்துழைக்குமாறு செய்கிறார்.

நிருவாகப்பகுதியும் சட்டசபையும் தனி அதிகாரம் பெற்றிருப்பதால், இரண்டும் ஒன்றிற்கொன்று முரணாக நடப்பதும் உண்டு. ஜனாதிபதி ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும், காங்கிரசில் பெரும்பாலோர் வேறு கட்சியினராகவும் இருந்தால், நிருவாகப்பகுதியும் சட்டசபையும் ஒன்றிற்கொன்று முட்டுக்கட்டை போட்டு, வேலை செய்யாமல் தடுக்கும். அத்தகைய நிலையில் நிருவாகப்பகுதி செய்ய நினைத்துள்ள திட்டங்களை நிறைவேற்ற இயலாமல் போகின்றது. சட்ட நிருமாண வேலை சீர்குலைகின்றது. இதேமாதிரியான சமயத்தில் பார்லிமென்டு முறையில் மந்திரி சபை ராஜிநாமா செய்யும்; அல்லதுபுதிய தேர்தல்கள் நடக்கும். ஆனால் அமெரிக்காவில் ஜனாதிபதியைப் பதவியிலிருந்து நீக்கச் சட்டசபையால் முடியாது ; சட்டசபையை அவரால் கலைக்கவும் முடியாது. அரசாங்கம் ஸ்தம்பித்து நிற்கும். அமெரிக்க அரசியலமைப்பில் இது ஒரு பெருங்குறை என்று எல்லா அரசியல் வாதிகளும், நிபுணர்களும் ஒப்புக்கொள்கின்றனர். இக்குறையை நீக்குவது எப்படி என்பதுபற்றி மாத்திரம் அவர்களிடையே ஒருமித்த கருத்தைக் காணோம்.

கூட்டாட்சி நீதி மன்றங்கள் (The Federall Judiciary) : கூட்டாட்சி நீதி மன்றங்கள் மூன்று படிகளில் அமைந்துள்ளன. அடிப்படையில் 94 கூட்டாட்சி ஜில்லா நீதி மன்றங்களும், இடையே 13 கூட்டாட்சி அப்பில் நீதி மன்றங்களும், தலைமையில் ஓர் உச்சநீதி மன்றமும் (Federal Supreme Court) உள்ளன. ஆரம்பத்திலிருந்து கடைசிவரை கூட்டாட்சிச் சட்டதிட்டங்கள், உடன்படிக்கைகள், கூட்டாட்சி அரசியல் திட்டம் முதலிய எல்லா விவகாரங்களையும் கூட்டாட்சி நீதி மன்றங்களே விசாரிக்கின்றன. இராச்சியங்களில் உள்ள இராச்சிய நீதி மன்றங்களுக்கும் இவற்றிற்கும் யாதொருவிதமான தொடர்பும் இல்லை. உச்சநீதி மன்றம் வாஷிங்டன் நகரிலும், மற்றவை ஐக்கிய நாடுகளில் பல வேறு நகரங்களிலும் உள்ளன.

கூட்டாட்சி உச்சநீதி மன்றம் 1791-ல் நிறுவப்பட்டது. இது ஒரு பிரதம நீதிபதியையும், எட்டு உப நீதிபதிகளையும் கொண்டது. இவர்களை ஜனாதிபதி செனெட் சபையின் அங்கீகாரம் பெற்று நியமிக்கிறார். நீதிபதிகள் தங்கள் வாழ்நாட்கள் முடிவுவரை பதவி வகிக்கிறார்கள். 70 வயதை அடைந்தவர்கள் முழுச் சம்பளத்துடன் வேலையைவிட்டு விலகலாம். காங்கிரசில் துரோகக் குற்றச்சாட்டு முறைப்படியே (Impeachment) அன்றி நீதிபதிகளைப் பதவியிலிருந்தும் விலக்க முடியாது ; நியமனம் ஆனபின் அவர்கள் ஊதியத்தைக் குறைக்கவும் கூடாது. நீதிபதிகளின் சுதந்திரம் இவ்வாறு முழுவதும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

உச்சநீதி மன்றத்தின் அதிகாரங்களில் முக்கியமானது காங்கிரசும் இராச்சியச் சட்டசபைகளும் செய்யும் சட்டங்களை, அவை அரசியல் அமைப்பை அனுசரித்துள்ளனவா என்று நிருணயிப்பதே. காங்கிரசும், இராச்சியச் சட்டசபைகளும், செய்த பல சட்டங்கள் அரசியல் திட்டத்திற்கு முரணானவை என்று உச்சநீதி மன்றம் தீர்மானித்ததால் ரத்தாகியுள்ளன. அரசியல் அமைப்பு மிகவும் சுருக்கமானதாகையால் நீதிபதிகள் அதற்குத் தங்கள் மனம்போன வழிகளில் பொருள் செய்து, பல சட்டங்களை நிராகரித்திருக்கிறார்கள். ஐக்கிய நாடுகளில் எந்த இராச்சிய அரசாங்கமும் உச்சநீதி மன்றத்தார் ஏற்றுக்கொள்ளக்கூடிய சட்டங்களைத்தான் செய்ய இயலும். இக்காரணத்தால் அரசாங்கம் மக்கள் விரும்பும் பல காரியங்களைச் செய்ய இயலாமல் போகலாம். உச்சநீதி மன்றம், அதன் முன்வந்த வழக்குகளுக்குத் தொடர்புடைய சட்டங்களை மாத்திரமே இவ்வாறு பரிசீலனை செய்யும் ; எனினும் உச்சநீதி மன்றத்திற்கு மக்களின் பிரதிநிதிகள் செய்யும் சட்டங்களை ரத்துச் செய்யும் அதிகாரத்தை விட்டுவைப்பது உசிதமானதல்ல என்பது ஒரு கருத்து. அடிப்படையான மக்கள் உரிமைகளை அவ்வப்போது சட்டசபைகளில் பெரும்பாலோர் இயற்றும் சட்டங்கள் தகர்த்துவிடாமல் காக்க, நாட்டின் உச்சநீதி மன்றத்துக்கு அதிகாரம் அரசியலமைப்புப்படியே இருத்தல் அவசியம் என்பது இங்குக் கவனிக்கத்தக்கது.

உச்சநீதி மன்றம் கூட்டாட்சியைப் பலப்படுத்துவதில் அரிய சேவை செய்துள்ளது. இராச்சியங்களிடையே ஏற்பட்ட விவகாரங்களைத் தீர்த்து, அவற்-