பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

128

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

உயர்தரக் கல்வி தரக்கூடிய நிலையங்கள் 1,800 உள. அவற்றுள் மூன்றில் ஒரு பங்கு ஸ்தாபனங்களே பொது வரிப் பணத்தால் நிறுவப்பட்டு நடைபெறுவன.

அரசாங்கம் நடத்தும் கல்லூரிகளில் அவைகளை நிறுவிய இராச்சியத்தில் வாழும் மக்கள் சம்பளம் தரவேண்டியதில்லை. பல ஏழை மாணவர்கள் ஓய்வு நேரத்தில் வேறு தொழில்கள் செய்து, கல்விக்கு வேண்டிய பணத்தைத் தேடிக்கொள்கிறார்கள். மாணவர்கள் உணவு விடுதிகளில் பரிமாறும் வேலை செய்தாலும் அதை யாரும் இழிவாகக் கருதுவதில்லை.

வியாபார அலுவலகங்களில் வேலை பார்க்க விரும்புகிறவர்களுக்கு வேண்டிய கல்வியைத் தரும் பாடசாலைகள் இரண்டாயிரத்துக்குமேல் இருக்கின்றன. அதுபோலவே அமெரிக்கச் சிறுவர்களும் சிறுமிகளும் கல்வி கற்பதற்கு வேண்டிய வசதிகள் அனந்தம். ஓஹியோ இராச்சியக் கல்லூரிகளில் எண்ணூறு விதமான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

வயதுவந்தோர் கல்வி கற்பதற்கும் ஏராளமான வசதிகளை அமைத்திருக்கிறார்கள். அவற்றை மூன்று கோடிப் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். அத்துடன் நாற்பத்திரண்டு பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் வயது வந்தோர்க்குத் தபால் மூலம் கல்வி கற்பித்து வருகின்றன. இவை தவிர, இத்தகைய தபால் வாயிலாகக் கல்வி போதிப்பதற்காகவே ஏற்பட்டுள்ள ஸ்தாபனங்கள் 350 ஆகும்.

அயல் நாடுகளிலிருந்து வந்து குடியேறுபவர்க்கு ஆங்கில மொழியை மிக விரைவில் கற்றுக்கொடுத்து, அவர்களை அமெரிக்கக் குடிகளாகச் செய்வதற்காகவும் கல்வி ஸ்தாபனங்கள் உண்டு.

கலைகள் : அமெரிக்காவில் ஓவியக்கலையானது 17ஆம் நூற்றாண்டில்தான் உதயமாயிற்று. தொடக்கத்திலிருந்த ஓவியர்கள் தொழில் நுட்பம் அதிகமாகத் தெரியாதவர்கள். சிறந்த ஓவியர்களைப் பார்க்க முடியாத நிலைமைதான் இதற்கு முக்கிய காரணம். அதனால் அமெரிக்க ஓவியர்களுள் பலர் ஐரோப்பாவுக்குச் சென்று, சிறந்த ஓவியர்களிடம் பயின்று வந்தனர். அவர்கள் ஐரோப்பிய ஓவியங்களைத் தழுவியே வரைந்து வந்தனர்.

ஆரம்ப அமெரிக்கா ஓவியங்களுள் முக்கியமானது 1729-ல் ஜான் ஸ்மிபெர்ட் என்பவர் வரைந்த உரு ஓவியமாகும் (Portrait). அவர் ஐரோப்பிய ஓவியங்களைத் தமது கடையில் தொகுத்து வைத்தார். அமெரிக்க ஓவியர்கள் அவைகளைப் பார்த்துப் பயன் அடைந்தனர்.

அமெரிக்க ஓவிய முறை என்பதை 18ஆம் நூற்றாண்டில் காப்ளி (1738-1815) என்பவரும், பெஞ்சமின் வெஸ்ட் (1738-1820) என்பவரும் தொடங்கி வைத்தனர். அவர்கள் உள்ளதை உள்ளவாறு வரையும் தன்மை நவிற்சிக் கொள்கையினர் (Realists).அக்காலத்திலிருந்த கில்பெர்ட் ஸ்டூவர்ட் என்பவர் ஜார்ஜ் வாஷிங்டனுடைய படங்களிற் பல வரைந்தனர். அவை புகழ்பெற்றவை.

19ஆம் நூற்றாண்டில் அமெரிக்க ஓவியக்கலை ஒரு புதிய எழுச்சி பெற்றது. வால்ட் விட்மன் போன்ற கவிஞர்கள் அமெரிக்காவிலுள்ள இயற்கைக் காட்சிகளின் எழிலை எடுத்து ஓதினர். ஆடபான் (Audubon), ஜார்ஜ் இன்ஸ் போன்றவர்கள் அவற்றைப் பிழையின்றி அழகாக வரைந்தனர்.

தன்மை நவிற்சிக் கொள்கைதான் அமெரிக்க ஓவியக் கலையின் சிறப்பியல்பாகும். அதை ஈக்கின்ஸ், ஹோமர், பிக்கெட் என்னும் மூவருடைய ஓவியங்களில் காணலாம். ஹோமருடைய ஓவியங்களைப் பார்த்தால், அவை ஓவியம் என்ற எண்ணமே தோன்றாதவாறு அவ்வளவு இயற்கையாகக் காணப்பெறும்.

அயல் நாட்டிலிருந்துகொண்டு வரைந்த அமெரிக்க ஓவியர்களுள் சார்ஜென்ட் என்பவருடைய ஓவியங்கள் அமெரிக்க ஓவியத் தொழில்நுட்பத் திறமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாக விளங்குகின்றன.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்க ஓவியக்கலையில் ஒரு மாறுதல் உண்டாயிற்று. காசெட், விஸ்லர், சேஸ் போன்ற ஓவியர்கள் ஜெர்மனி, பிரான்சு முதலிய இடங்களில் பயின்று வந்ததன் பயனாக, அமெரிக்க ஓவியங்களில் அதிகமான விவரங்கள் காணப்படுவது மறைந்துபோயிற்று; உணர்ச்சியைக் காட்டுவதே சிறப்பியல்பாக ஆயிற்று.

ஜார்ஜ் பெல்லோஸ் என்பவர் தம்மைச் சூழ்ந்து காணும் வாழ்க்கையைச் சித்திரிப்பதிலேயே கவனத்தை ஈடுபடுத்தினார். மிகவும் சாதாரணமான பொருள்களில் கூட அழகிருப்பதைக் கண்டார்.

ஐரோப்பாவில் பதிவுநவிற்சி, கனவடிவநவிற்சி, அடி ன நவிற்சி (Impressionism, cubism, surrealism) போன்ற பல ஓவியக்கலை முறைகள் தோன்றியபோதிலும், அவை அமெரிக்காவில் அதிகமாக இடம் பெறவில்லை. இக்காலத்து ஓவியர்களுள் சிறந்தவர்கள் கிரான்ட் வுட் (1892-1942) என்பவரும், எட்வர்டு ஹாப்பர் என்பவருமாவர்.

இக்காலத்து அமெரிக்க ஓவியக்கலையானது தனி அமெரிக்க இயல்புடன் அமெரிக்காவையும் அங்குள்ள மக்களையும் சித்திரித்து வருகின்றது. அந்த இயல்பை வேறு எந்த நாட்டிலும் காண இயலாது.

அமெரிக்கச் சிற்பக்கலை 19 ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது. அதுவரை செதுக்குவேலை மட்டுமே நடந்து வந்தது. அந்தச் சிற்பிகளுடைய வேலை, கலை மதிப்புடையதாக இருந்தபோதிலும், அவர்கள் அதை உணரவில்லை.

சிற்பக்கலை, தொடக்கத்தில் ஐரோப்பிய முறைகளையே தழுவி வந்தது. அவ்வாறு செய்தவர்களுள் பங்கர் குன்று நினைவுச் சின்னம் அமைத்த ஹொரேஷியோ கிரீனோ என்பவர் ஒருவர். அவரே வாஷிங்டன் நகரத்திலுள்ள வாஷிங்டனுடைய பிரமாண்டமான சிலையைச் செய்தவர். பிரடெரிக் ரெமிங்க்டன் (1861-1909) என்பவர் அமெரிக்காவின் மேற்குப்பகுதி மக்களுடைய வாழ்வைச் சித்திரிக்கும் அழகான வெண்கலச் சிற்பங்கள் பல செய்தனர்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்கச் சிற்பிகள் ஐரோப்பாவுக்குச் சென்று வரவே அங்குள்ள முறையையே தழுவலாயினர். அவர்களுடைய சிற்பங்கள் தொழில் நுட்பத்தில் சிறந்திருப்பினும், கற்பனா சக்தித் திறன் மிகவும் குறைந்தனவாகும். அக்காலத்துச் சிற்பங்கள் சிறந்தனவாக இல்லாதிருந்தமைக்கு ஒரு காரணம் அவற்றை வாங்கியவர்களுக்குக் கலைப் பண்பு தெரியாதிருந்ததும், உள்ளது உள்ளபடியே எழுதுவதே சிறப்புத் தரும் என்று அவர்கள் எண்ணியதுமாகும்.

இக்காலத்துச் சிற்பிகள் புதுப்பொருள், புது விஷயங்கள், புது முறைகள் ஆகியவற்றைக்கொண்டு சோதனைகள் செய்துள்ளனர். அவர்களுடைய சிறந்த வேலைகளுள் ஒன்று சிற்பக்கலையைக் கட்டடக் கலைக்குத் துணையாகக்கொண்டதாகும். இக்காலத்து அமெரிக்கச் சிற்பிகளுள் சிறந்தவர்கள் டேவிட்ஸனும், மான்ஷிப்புமாவர். வில்லியம் ஜோரக் என்பவருடைய 'தாயும் குழந்தையும்' என்னும் சிற்பம் சிறந்ததாகும். ராபர்ட் லாரன்ட் என்பவர் பல உலோகங்களிற் சிலைகளை வார்க்கின்றார். அவருடைய 'முத்து' என்னும் சிலை அலுமினியத்தில் வார்த்ததாகும்.