பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரிசி

194

அரிசிற்கரைப் புத்தூர்

சிலர் நீரில் வேகவையாமல் நீராவியில் வேகவைப்பார்கள். வேகவைக்கும் முறை வேறுபாட்டினால், சில முறைகளில் வேகவைத்துக் கிடைக்கும் அரிசி நிறம் குன்றியதாயும் நாற்றமுடையதாயுமிருக்கும். இந்தக்கெட்ட குணங்கள் உண்டாகாதவாறு புழுக்குவதற்காகச் சில புது முறைகளை வகுத்துள்ளனர். ஆயினும் ஒருமுறை நெல் ஊறிய நீரை மறுபடியும் ஊறவைக்க பயன்படுத்தாதிருந்தால் போதும்; இந்தக் கெட்ட குணங்கள் தோன்றா. எந்திரத்தால் அரைத்த அரிசிக்கு வைட்டமின்களும் தாதுக்களும் ஊட்டிப் போஷணை உடையதாகச் செய்யலாம்.

அரிசியை வேகவைத்துச் சோறாக்கி உண்பதுடன், அவல், அரிசிப்பொரி, நெற்பொரி முதலிய வகையாகவும் செய்து உண்பதுண்டு.

(1) அவல்: நெல்லைப் பத்து நிமிஷம் கொதிநீரில் ஊறவைத்து எடுத்து,10 மணிநேரம் குளிர்ந்த நீரில் ஊற வைத்துப் பின் நீரை வடித்துவிட்டு மண் சட்டியில் போட்டு வறுத்தால் நெல் வெடிக்கும். அதை உரலில் போட்டு இடித்துப் புடைத்தால் அவல் கிடைக்கும். அவல் மெல்லியதாக இருந்தால் எளிதில் ஊறும்; உண்ண உதவும். அவல் செய்ய வெள்ளை அரிசியையும் சிவப்பு அரிசியையும் பயன்படுத்தலாம். அவலைப் பலவிதமாக உண்ணலாம்; நல்ல சத்துள்ள உணவு.

(2) நெற்பொரி: பெருநெல்வகையில் பழைய நெல்லை நன்றாக உலர்த்தி எடுத்து, அடுப்பில் காயும் சட்டியிலுள்ள மணலில் சிறிது சிறிதாக இட்டுக் கிளறினால் நெல் வெடித்து, அரிசி பருத்து வெளியே சிதறும். அதைப் புடைத்துச் சுத்தம் செய்தால் பொரி கிடைக்கும். ஒரு படி அரிசி கிடைக்கும் நெல்லிலிருந்து 8 படி பொரி கிடைக்கும். இதைக் கொண்டு செய்யும் கஞ்சி நோயாளிகளுக்கு ஏற்றது.

(3) அரிசிப்பொரி : நன்றாகப் புழுக்கிய நெல்லிலிருந்து கிடைக்கும் அரிசியுடன் சிறிது உப்புச் சேர்த்து நெற்பொரி செய்வதுபோல் செய்தால் அரிசிப்பொரி கிடைக்கும். இது அரிசி உருவமாகவும் உப்பிக்கொண்டு மிருதுவாகவும் இருக்கும். ஒரு படி அரிசி எட்டுப்படி பொரியாகும்.

அரிசியின் ஊட்டம்: அரிசியானது கோதுமை, சோளம் முதலிய தானியங்களைப் போலவே ஊட்டமுடையதேயாயினும், தவறான முறையில் நெல்லை அரைப்பதாலும், அரிசியை வேகவைப்பதாலும் ஊட்டச் சத்துக்களில் பெரும்பகுதி கெட்டுப்போகிறது. அரிசியைத் தீட்டும் அளவுக்கும் அதன் ஊட்டம் குறைந்துவிடுகிறது.

புழுங்கலரிசியைக் கைக்குத்தல் முறையில் தயார் செய்தால் ஊட்டங் குறைவதில்லை. அந்த அரிசியை நீரில் களையும்போதும் ஊட்டங் கெடுவதில்லை. அரிசியை வேகவைத்துக் கஞ்சியை வடித்தாலும் வைட்டமின் பீ கெட்டுவிடும். பருமனாயும் சிவப்பாயுமுள்ள அரிசி வகைகள் மற்ற வகைகளைவிட மிகுந்த ஊட்டம் உடையன.

நெற்பயிர் நோய்கள் பல காளான்களால் உண்டாவன. அவற்றுள் முக்கியமானவை இரண்டு.

1. கொள்ளை நோய்: பிரிகுலேரியா (Piricularia) மிகுந்த கேடு விளைக்கும். சென்னை இராச்சிய விவசாய இலாகா ஆராய்ச்சியின் பயனாக இந்நோயை எதிர்க்கக் கூடிய இரண்டுவகை நெல் (Co. 25; Co.26) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

(2) ஹெல்மிந்தோஸ்போரியம் (Helminthosporium) நோய் விளைவைக் குறைத்துவிடும். 1% போர்டோ கலவையைத் தெளித்து நோயைத் தடுக்கலாம்.

நெற்பயிரில் பூச்சிகள் விழுந்தும் கேடு செய்கின்றன. இவற்றுள் பலவற்றை டீ.டீ.டி. (D. D. T.) மருந்தைத் தெளித்துக் கொன்று சேதத்தைக் குறைக்கலாம். இவை தவிர, எலியும் நண்டும் நெற்பயிருக்குக் கேடு விளைக்கும்.

நெல்லை வண்டும் அந்தும் கெடுத்துவிடும். அதனால் அதை அடிக்கடி உலர்த்தவும், அதைப் போட்டிருக்கும் குதிர்களில் டீ.டீ.டி. மருந்து தெளிக்கவும் வேண்டும்.

அரிசி வியாபாரம்: உலகத்தில் விளையும் பத்தரைக் கோடி டன் அரிசியில் ஒரு சிறு பகுதியே வியாபாரமாகின்றது. உலகத்தில் அரிசி உண்பவர்க்குப் போதுமான அரிசி வேண்டுமானால் இன்னும் ஆண்டு தோறும் 136 இலட்சம் டன் கூடுதலாக விளைவிக்கப்பட வேண்டும்.

உலகத்தில் நெல் விளையும் நாடுகளுள் இந்தியாவிலேதான் அது மிகுந்த நிலப்பரப்பில் விளைவிக்கப்படுகிறது. ஆயினும், உண்பதற்குப் போதுமான நெல் கிடையாதிருக்கும் நாடுகளுள் பெரியது இந்தியாவே. அதனால், இந்தியா வேண்டிய நெல்லை அன்னிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவேண்டியதாக இருக்கிறது. ஆனால் இறக்குமதி செய்யாமல் இந்தியாவிலேயே விளைவிப்பதே நல்லது. ஆண்டுதோறும் 32 இலட்சம் டன் அரிசி கூடுதலாக விளைவிக்கவேண்டும். அதற்காகக் கூடுதலான நிலத்திலும் பயிர் செய்யவேண்டும்; கூடுதலாக விளையும்படியும் செய்யவேண்டும். கூடுதலான நிலத்தில் விளைவிக்க விரும்பினால், பாசன வசதிகளைப் பெருக்கவும் டிராக்டர்களைக் கொண்டு தரிசுகளைப் பண்படுத்தவும் வேண்டும். கூடுதலாக விளையச் செய்ய விரும்பினால், பாசன வசதி செய்வதுடன், சிறந்த வகை நெல்லை உண்டாக்கிக் கொடுக்கவும் உரங்களை மிகுதியாகப் பயன்படுத்தவும் வேண்டும். என். பா.

அரிசில் கிழார் கடைச்சங்கத்துப் புலவருள் ஒருவர். அரிசில் என்னும் ஊர் கொள்ளிட வடபாலுள்ள அரியலூர் என்பதன் மரூஉவாக இருக்கலாம். இவர் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறையைப் பாடி (பதிற்றுப்பத்து-எட்டாம்பத்து) ஒன்பது லட்சம் பொற்காசும் அரசாட்சியும் பரிசிலாகப் பெற்றார். எனினும் அவன் கொடுத்த அரியணையை அவனுக்கே கொடுத்து அமைச்சுரிமை பெற்றார்; வையாவிக்கோப் பெரும்பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியை அவனுடன் சேர்த்தல்வேண்டி அவனைப் பாடினார். அதிகமான் தகடூர் எறிந்து வீழ்ந்த எழினியின் பிரிவாற்றாது புலம்பினர். இவர் செய்தனவாக இப்பொழுது பதினெட்டுச் செய்யுட்கள் இருக்கின்றன. (பதிற்றுப்பத்து எட்டாம்பத்து ; புறம். 146, 230, 281, 285, 300, 304; குறுந்தொகை 193).

அரிசிற்கரைப் புத்தூர் தஞ்சாவூர் ஜில்லா, கும்பகோணத்துக்குத் தென் கிழக்கே 41 மைலில் அரிசிலாற்றங்கரையில் உள்ளது; அழகார் புத்தூர் என வழங்குகின்றது ; பெரிய புராணத்தில் செருவிலி புத்தூர் என்று அழைக்கப்படுகிறது; உண்மையானந்த முனிவர் பூசித்த தலம் ; புகழ்த்துணை நாயனார் தொண்டு

செய்து முத்திபெற்ற இடம். பஞ்சத்தால் ஏற்பட்ட பசியினால் மிகவும் தளர்வெய்தியிருந்த அவர் சுவாமிக்குத் திருமஞ்சனமாட்டும்போது குடத்தைச் சுவாமி தலையில் போட்டுவிட்டார். அவருக்குப் பஞ்சம் தீருமளவும் நாள்தோறும் ஒரு காசு படியாகச் சுவாமி அளித்து வந்தார். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் தேவாரமும் இவ்வூருக்கு உண்டு. சுவாமி படிக்காசளித்த ஈசுவரர். அம்மை அழகாம்பிகை.