பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலெக்சாந்திரியா

223

அலெர்ஜி

இவன் 1249-ல் இறந்தான். இவனுக்குப்பின் இவன் மகன் III-ம் அலெக்சாந்தர் பட்டமெய்தினான்.

அலெக்சாந்தர் III (ஆ. கா. 1249-1285) ஸ்காட்லாந்துக்கு மேற்கேயுள்ள தீவுகளை 1263-ல் தன்னாட்சிக்குள்ளடக்கினான். இவன் காலத்தில் அரசாங்க நிருவாக முறை சீர்திருத்தியமைக்கப்பட்டது. இவன் கிங்ஹாரன் மலையிலிருந்து வீழ்ந்து இறந்தான்.

அலெக்சாந்திரியா எகிப்தில் நைல் முகத்துவாரத்தில் அமைந்துள்ள ஒரு பட்டினம். இது கைரோவுக்கு வடக்கே 129 மைல் தொலைவிலுள்ளது. மக் : 9,25,081 (1947). மகா அலெக்சாந்தரால் ஆதியில் இந்நகரம் பாராஸ் (Pharos) தீவுக்கும் எகிப்துக் கடற்கரைக்கும் இடையிலிருந்த திட்டில் நிறுவப்பட்டது. பாராஸ் தீவிலிருந்த கலங்கரை விளக்கம் பண்டை உலக அதிசயங்களுள் ஒன்றாக இருந்தது. அது கி. பி. 300-ல் நிறுவப்பெற்று - 370 அடி உயரமுடையதாயிருந்தது. இப்போது அத்தீவு தீவாக இல்லாமல் அதற்கும் எகிப்துக் கடற்கரைக்குமிடையில் மண் மேடிட்டுத் தீபகற்பமாக இருக்கிறது.

இந்நகரம் மிக விரைவில் வளர்ச்சியுற்றது. கி. பி. 640-ல் காலிப் ஓமார் இதைக் கைப்பற்றிய போது இங்கு 4,000 அரண்மனைகளும் 400 நாடக சாலைகளும் இருந்தனவாம். 10-15ஆம் நூற்றாண்டுவரை இவ்வூரின் பெருமை குன்றிக்கொண்டே வந்தது.1801-ல் நெப்போலியனுடைய பிரெஞ்சுப் படைகளுக்கும் அபர்கிராம்பி யின் தலைமையில் போரிட்ட பிரிட்டிஷ் படைகளுக்கும் இவ்வூர்ப்புறத்தே கடும்போர் நிகழ்ந்தது. 1882-ல் ஆங்கிலேயர்கள் மற்றுமொருமுறை இவ்வூரைத் தாக்கிக் கைப்பற்றி எகிப்தையே ஆக்கிரமித்துக்கொண்டனர். இந்நகரிலிருந்த பண்டைய நூல்நிலையமும் மருத்துவச் சாலையும் புகழ்பெற்றவை. முற்காலத்தில் மேனாட்டிலிருந்த நூல் நிலையங்களுள் இங்கிருந்ததுவே மிகப் பெரியது. இந்த நூல்நிலையத்தை எகிப்து மன்னர் I-ம் டாலமி கி. மு. 3ஆம் நூற்றாண்டில் நிறுவினார். இறுதியில் அதில் ஏழு இலட்சம் நூல்கள் இருந்தனவாம். ரோமானியர் அலெக்சாந்திரியாவைக் கி. மு. 47-ல் தாக்கிய போது இந் நூல்நிலையத்திலிருந்த நூல்களுள் பெரும்பாலனவற்றை எரித்துவிட்டார்கள். எஞ்சியிருந்தவற்றைக் கிறிஸ்தவர்கள் கி. பி. 319-ல் அழித்தனர். மீண்டும் நிறுவப்பெற்ற நூல் நிலையத்தை அராபியர்கள் கி. பி. 640-ல் எரித்தார்கள். இந் நூல்நிலையத்துடன் பொருட்காட்சிச் சாலை ஒன்றும் இருந்தது. அதில் அரசாங்கம் பல அறிஞர்களை வைத்து ஆதரித்து வந்தது. அலெக்சாந்திரியாவில் வாழ்ந்துவந்த அறிஞர்களில் யூக்லிடு, அப்பலோனியஸ் முதலியவர்கள் மிக்க புகழ் பெற்றவர்கள்.

பண்டைக் காலத்து அலெக்சாந்திரியா நகரம் இப்போதுள்ள நகரத்துக்கு அடியிலே புதையுண்டு கிடக்கிறது. அதனால் தோண்டிப் பார்க்க முடியாத நிலையில் உள்ளது. வீடுகளுக்கு அடிநிலையிடத் தோண்டும்போது பண்டை நகரப் பொருள்கள் கிடைக்கின்றன. பாம்பி (Pompey)யின் தூண் என்ற இடத்துக்கு அருகிலுள்ள வெளியிடத்தில் தோண்டிப் பல பொருள்கள் எடுத்துள்ளனர். அங்குப் பூமிக்கு அடியில் பல பெரிய கட்டடங்களும் காணப்படுகின்றன. ஒரு கட்டடத்தின் சுவரில் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. மற்றப்பொருள்களைப் பொருட்காட்சிச் சாலையில் வைத்துள்ளனர். '

அலெப்போ : இதைத் துருக்கி மொழியில் ஹாலெப் என்று கூறுவர். வட சிரியாவில் குவெல்க் ஆற்றங்கரையில் அலெப்போ மாவட்டத்தின் தலைநகரம். முன்னாளில் ஐரோப்பாவுக்கும் ஆசியாவிற்குமிடையில் நடைபெற்ற வியாபாரத்துக்குப் பேர்போன ஊர். 17ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் லெவான்ட் கம்பெனியின் வியாபாரத்தலம் இங்கு நிறுவப்பெற்றது. இங்கிருந்து பட்டு, பருத்தி, உரோமம் ஆகியவற்றால் நெய்த துணிகள் கீழ்நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இப்போது பட்டும் புகையிலையும் நிறைய உற்பத்தியாகின்றன. மக் : 3,62, 541 (1950).

அலெர்ஜி (Allergy) : அரிசி, பால், ஆரஞ்சு போன்ற உணவுப் பொருள்கள் உடல் நலம் தருபவை. அவற்றைப் பெரும்பான்மையான மக்கள் உண்கிறார்கள். ஆயினும் அவை சிலர்க்கு ஒத்துக்கொள்வதில்லை, நோய் உண்டாகிறது. அத்தகைய நோய் நிலையை அலெர்ஜி என்று கூறுவர். அல்லோஸ் (மற்ற), எர்ஜியா (சக்தி) என்னும் இரண்டு கிரேக்கச் சொற்களைச் சேர்த்து, அலெர்ஜி என்ற சொல்லை வான் பிர்க்கெட் (Von Pirquet) என்பவர் உண்டாக்கினார். அலெர்ஜி உண்டாக்கும் பொருள்கள் அலெர்ஜென்கள் எனப்படும். சிலர்க்கு மருந்துகளும், ஊசி குத்துதலும் அலெர்ஜியை உண்டாக்கும். உரோமம், முகப்பவுடர், துணியிலோ செருப்பிலோ ஏற்றியுள்ள சாயம் போன்ற சில பொருள்கள் உடலில் பட்ட மாத்திரத்திலேயே சிலர்க்கு அலெர்ஜியை உண்டாக்கக் கூடும். இந்தப் பொருள்கள் உடம்பில் சிரங்கையோ அல்லது வேறு நோய்களையோ தோற்றுவிக்கும். தூசியோ, சில மலர்களின் மகரந்தமோ காற்றுடன் கலந்து சுவாசிக்கப்பட்டால் சிலர்க்கு அலெர்ஜி உண்டாகலாம். மற்றும் சிலர்க்குச் சில ஜந்துக்களினின்றும் உண்டான புரதவஸ்துக்கள் அல்லது சில தாவரப் புரதங்கள் ஒத்துக்கொள்வதில்லை.

இதுவரை வேறு காரணங்களால் உண்டாகின்றனவாகவோ அல்லது காரணங்கள் அறியாதனவாகவோ இருந்த சில நோய்களுக்கு இப்போது அலெர்ஜியே காரணம் என்று தெரிகின்றது. காசம், கண் அழற்சி, சிலவித வயிற்றுக் கோளாறுகள், தலைவலிகள், காக்கை வலிகள், சரும நோய்கள் ஆகியவை அலெர்ஜி நோய்களுக்குள் அடங்கும்.

அலெர்ஜி எப்படி உண்டாகிறது என்பது இன்னும் தெளிவாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. தொடக்கத்தில் எந்தப் பொருளும் அலெர்ஜனாக இருப்பதில்லை ; நோய் உண்டாக்குவதுமில்லை ; உடம்புக்கு ஒத்துக்கொண்டதாகவே இருக்கிறது. பிறகு சிலகாலம் சென்றதும், அந்தப் பொருள் மிகச் சிறிய அளவில்கூட ஒத்துக்கொள்வதில்லை ; நோயை உண்டாக்குகிறது. ஹிஸ்டமைன் என்பது உடம்பின் உயிரணுக்களில் காணப்படும் பொருள்களில் ஒன்று. அலெர்ஜி உண்டாக்கும் பொருள் ஹிஸ்டமைனை மிகுதியாக உண்டாக்கி இரத்தத்தில் சேர்க்கின்றது. அப்படி அது அளவுக்கு மிஞ்சினால் இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. இதன் காரணமாக அலெர்ஜி நோய்கள் உண்டாகின்றன. ஹிஸ்டமைன் பத்து இலட்சத்தில் ஒன்றாக மிகுதிப்பட்டாலும் போதும், அலெர்ஜி உண்டாகிவிடும். மூளையில் ஹிஸ்டமைன் மிகுதிப்பட்டால் காக்கை வலி (Epileptic fits) அல்லது ஒருத் தலைவலி (Migraine) உண்டாகும் ; மூச்சுக் கிளைக்குழலில் மிகுதிப்பட்டால் காசம் (Asthma) உண்டாகும்.

நோய் ஏற்பட்டதும் அது அலெர்ஜியால் ஏற்பட்டதா அல்லவா என்று கண்டுபிடிப்பது எளிதல்ல. ஆயினும் வைத்தியர்கள் கேள்விகள் கேட்டும், நோயாளியைக் கவனித்து வந்தும் அலெர்ஜியை உண்டாக்கும்