பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அளவையியல்

248

அளவையியல்

தனிநிலைப் பதங்கள். (10) பெற்றோர், ஆசான், அரசன் போன்றவை அவாய்நிலைப் பதங்கள் ; மக்களைக் குறிக்காமல் பெற்றோரின் பொருளையும், சீடனைக் குறிக்காமல் ஆசானின் பொருளையும், குடிகளைக் குறிக்காமல் அரசனின் பொருளையும் அறிய இயலாது. இவை யொன்றை யொன்று தழுவி நிற்கின்றன.

பதங்களின் இருவகைக் கருத்து : ஒவ்வொரு பதமும் இருவகைக் கருத்துக்களையுடையது. ஒவ்வொரு பதமும் ஒரு பண்டத்தையோ, பல பண்டங்களையோ குறிப்பதோடு, அவற்றின் குணங்களையும் அறிவிக்கிறது. உதாரணமாக, செம்மறியாடு என்னும் பதம், சில விலங்குகளைக் குறிப்பதோடு, கம்பளிபோன்ற போர்வை, இரட்டைக் குளம்புகள், சாதுவான செய்கை, அசை போடுதல், மனிதன் உண்ணத்தகுதி போன்ற குணங்களையும் குறிக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு பதமும் பண்டங்களைக் குறித்தல் (Denotation), குணங்களைக் குறித்தல் (Connotation) என இரண்டு கருத்துக்களை உடையதாகும். ஆனால் சில பதங்களில் குணங்களைக் குறிக்கும் அமிசம் முக்கியமாகவும், சில பதங்களில் பண்டங்களைக் குறிக்கும் அமிசம் முக்கியமாகவும் தோன்றலாம். உதாரணமாக, டெல்லி என்னும் பதத்தில் ஓரிடத்தைக் குறித்தல் சிறப்பாகவும், தைரியம் என்னும் பதத்தில் குணத்தைக் குறித்தல் சிறப்பாகவும், மனிதன் என்னும் பதத்தில் இரண்டமிசங்களும் சமமாகவும் தோன்றுகின்றன வென்னலாம்.

இலக்கணமும் சாதிப் பிரிவினையும்: குணத்தைக் குறிப்பது இலக்கணம் ; பண்டங்களைக் குறிப்பது சாதிப் பிரிவினை. சாதாரணமாக ஒரு பொருளின் இலக்கணம் கூறும்போது அதன் மேல்சாதியையும் அப் பொருளின் சிறப்பியல்பையும் உரைக்கிறோம். உதாரணமாக முக்கோணம் மூன்று நேர்கோடுகளால் அடைக்கப்படும் உருவம் என்று முக்கோணத்துக்கு இலக்கணம் கூறும் போது, முக்கோணம் உருவங்களில் ஒன்று என்று உருவமாகிய மேல் சாதியையும், மூன்று நேர்கோட்டுச் சிறை என்று சிறப்பியல்பையும் கூறுகிறோம்.

சிந்தனையின் மூலத்தத்துவங்கள் : சிந்தனையனைத்தும் சில மூலத்தத்துவங்களை அளவை வேண்டாமலே, அதாவது மெய்ப்பிக்காமலே ஒப்புக்கொள்ளுகிறது. அவையாவன : 1. ஒவ்வொரு பொருளும் ஒருமைப்பட்டிருக்கும். 2. முரண்படாதிருக்கும். 3. நடுவின்மை நியமமுடையதாயிருக்கும். உதாரணமாக, இது ஓர் இரும்புத் துண்டு என்னும் கருத்து ஒருமைப்பாடுடையது ; இரும்புத் துண்டாக இருப்பது அதே வேளையில் வேறு பொருளாக இராது. இரும்பு இது அல்லது இரும் பன்று இது என்று கூறலாமேயன்றி, இரண்டுமல்லாத வேறொன்று இது என்று கூற இயலாது. இவை சிந்தனையின் மூலத்தத்துவங்களாகும்; பொருள்களின் மூலத் தத்துவங்களுமாகும்.

வாக்கியங்களின் வகைகள் : 1. நிபந்தனையற்ற வாக்கியம் (உ-ம். புல் பசுமையானது ; வௌவால் பறக்கும்). இங்கு ஒரு பொருள் ஏனைய பொருளைச் சார்ந்ததாக உரைக்கப்படவில்லை. 2. நிபந்தனையுற்ற வாக்கியம். (உ-ம். மழை பெய்தால் விளையாட்டு இராது). இங்கு ஒன்றை யொன்று சார்ந்திருக்கிறது; காரணகாரியத் தொடர்பு கூறப்படுகிறது. 3. விகற்ப வாக்கியம். (உ-ம். அது கானலோ நீரோ). குறிப்பிட்ட பொருள் இரண்டு பொருள்களில் ஒன்றாகும் என்று இவ்வாக்கியம் கூறுகிறது.

நிபந்தனையற்ற வாக்கியங்களின் வகைகள் : நிபந்தனையற்ற வாக்கியங்களைத் (1) தன்மையற்றி, உடன்பாட்டு வாக்கியமென்றும் எதிர்மறை வாக்கிய மென்றுங் கூறுவர். குதிரை நான்குகால் பிராணி உடன்பாட்டு வாக்கியம். குதிரைக்குக் கொம்பில்லை எதிர்மறை வாக்கியம். (2) அளவுபற்றிப் பொது வாக்கியமென்றும் சிறப்பு வாக்கியமென்றும் பிரிப்பர். எல்லாக் குதிரைகளும் ஒற்றைக் குளம்புடையவை-பொது வாக்கியம். சில குதிரைகள் பந்தயக் குதிரைகள்-சிறப்பு வாக்கியம். (3) தன்மை, அளவு இவ்விரண்டையும் சேர்த்து, வாக்கியங்களை நால்வகைப்படுத்தி, ஏ, ஈ, ஒ, ஓ என்ற குறியீடுகளை வழங்குவர்.