பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆகமம்

306

ஆகமம்

யும் இந்திய மதக் கொள்கைக்கு ஒன்று சேர்ந்து உதவியுள்ளன என்பதையும் அறிவிக்கின்றன. வைணவ ஆகமங்கள் இன்றும் தென் இந்தியக் கோவில்களிலும் சடங்குகளிலும் நிலைத்து நிற்கின்றன.

வைணவக் கோயில்களில் நடைபெற வேண்டிய வழிபாட்டுமுறை பாஞ்சராத்திர முறை என்றும் வைகானச முறை என்றும் இரு வகைப்படும். இரண்டு முறைகளுக்கும் அடிநிலையாகவுள்ள தத்துவசாஸ்திரம் ஒன்றே. வைகானச முறை கோயில் வழிபாட்டை மிக விரிவான வகையில் வகுத்துள்ளது. அதனால் அதைத் தந்திரம் அல்லது பிரயோகம் என்று கூறுவர். இந்த முறைப்படி வழிபாடு செய்ய எல்லா ஸ்ரீ வைணவர்க்கும் உரிமை கிடையாது. எல்லோரும் வீட்டிலும் கோவிலிலும் பாஞ்சராத்திர முறைப்படி வழிபாடுசெய்யவே உரிமை உடையயவர்கள். வைகானச முறையை அனுஷ்டிக்க உரிமை உடையவர்கள் அதற்கென்று மிக்க தகுதி பெற்ற வைகானச அருச்சகர் அல்லது வைகானச விப்பிரர் மட்டுமே ஆவார். வைகானச அருச்சகர்கள் தனிக்குழுவினராவர். வைகானச அருச்சகர் ஆகிறவர் முதலில் விரிவான தீட்சையும் பயிற்சியும் பெறவேண்டும். வைணவக் கோயில்களுள் சில பாஞ்சராத்திர முறையையும், சில வைகானச முறையையும் கையாள்கின்றன. வைகானச முறையைக் கையாளும் கோயில்களில் வைகானச அருச்சகர்கள்தான் வழிபாடு நடத்தலாம். வைகானச விப்பிரர்களும் தனிச் சாதியினர்போல் இருந்து வருகிறார்கள். மை. ய.

சாக்தம் : சக்தி சம்பந்தமான கொள்கைக்குச் சாக்தமென்று பெயர். ஈசுவர தத்துவத்தைச் சக்தியாகவும், அதனையே உலகமாதாவாகவும் வழிபடும் சாக்த மதம் மிகப் பழமையானது ; சக்தி வழிபாடு வேதங்களில் கூறப்பட்டிருக்கிறது. மொகஞ்சதாரோவில் பூமியின் கீழ் அகப்பட்ட தாய்த் தெய்வத்தின் விக்கிரகங்களாலும் இதன் பழமை வலியுறுகின்றது.

தாய்த் தெய்வ வழிபாடாகும் சாக்த மதம் இந்தியாவிலன்றி ஐரோப்பாவிலும் கிறிஸ்தவ மதம் ஏற்படுவதற்கு முன்பே இருந்ததாகப் பல பிரமாணங்களால் தெரிகின்றது. தனது பெண் வடிவத்தால் எல்லா உலகத்தையும் பிரகாசிக்கச் செய்து, தனது அபார சக்தியால் உலகிலுள்ள எல்லா நலன்களையும் ஓங்கச் செய்யும் மகத்தான பெண் தெய்வம் ரோம ராஜ்யத்திலுள்ள யாவராலும் வணங்கப் பெற்றிருந்தது என்றும், அந்தத் தாய்க்கடவுளுக்குச் சந்திர கலையோடு கூடிய சிரசில் நீண்ட கூந்தல் ஒரு பெரிய மாலைபோல் தொங்கிக் கொண்டிருந்த தென்றும் கூறுகின்றனர். இஃதன்றியும் அந்தப் பெண் தெய்வம் கீழ்வருமாறு தனக்குத் தானே கூறுவதாகவும் கூறுகின்றனர்:

“உலகில் சராசரமான எல்லாவற்றிற்கும் நானே தாய். எல்லாத் தத்துவங்களையும் நானே இயக்குகின்றேன். நானே தலைவி. நானே சிருஷ்டி கர்த்தா. தெய்வீக சக்திகளுக்கெல்லாம் நானே நாயகி. சுவர்க்கத்திற்கு அரசியும் நானே. ககோளத்திலுள்ள கிரஹ நக்ஷத்திர தேவதைகளுக்கெல்லாம் முதன்மையானவள் நானே. எனது நாமமும் தெய்வீக சக்தியும் உலகெங்கும் பிரகாசித்து அலங்கரிக்கின்றன. என்னை உலகத்தில் பல தேசங்களில் பற்பல வேற்றுமைகளோடு கூடிய பற்பல ஜாதியார் பற்பல விதமாகக் கூறுகின்றனர். பிர்ஜியர் தெய்வங்களின் தாய் என்றும், அதேனியர் மினர்வா என்றும், ஐப்ரியர் வீனஸ் என்றும், காண்டியர் டையனா வென்றும், ஸிஸிலியர் ட்ரோஜர் பினா என்றும், எலூஷியர் ஸிரெஸ் என்றும், சிலர் ஜூனோ என்றும், மற்றும் சிலர் பெல்லோனாவென்றும், வேறு சிலர் ஹிகேட் என்றும் என்னைக் கூறுகின்றனர். பழைமையான சன்மார்க்கப் பழக்க வழக்கங்களையுடைய எகிப்தியர்களும், கீழ்க்கரையிலுள்ள இத்தியோப்பியர்களும் என்னை ஐசிஸ் ராணி என்று அழைக்கின்றனர்.”

மேலும், பிரான்ஸ் தேசத்தில் சில பெண் தெய்வ உருவங்களைக் கண்டுபிடித்ததாகத் தெரிகின்றது. இதனால் தாய்த் தெய்வ வழிபாடு, பிரான்ஸ் தேசத்திலும், கிறிஸ்து மதம் உண்டாவதற்கு முன் இருந்ததாக ஏற்படுகிறது. பிரிட்டனிலும் இவ்வழிபாடு அக்காலத்திலேயே உண்டென அறிகிறோம்.

யூதர்களும். இந்துக்களின் தாந்திரிக சக்தி வழிபாட்டைப் போலவே தாய்க் கடவுளை வழிபட்டு வந்தனரென்பதில் ஐயமில்லை. சீனர் ஜப்பானியர்களுடைய தந்திர சாஸ்திரங்களை ஆராய்ச்சி செய்ததிலிருந்து புத்த மதத்திலும் சக்தி வழிபாடு மிகப் பழைய காலந்தொட்டு நடந்தேறி வந்ததாகக் கூறுகின்றனர். இதன் உண்மை ஸர் ஜான் உட்ராப் என்பவர் வெளியிட்டுள்ள பௌத்த தந்திர நூலாகிய ஸ்ரீசக்ரஸம்பாரம் என்பதனாலும் விளங்கும். இதனால் சாக்த மதம் சீனா, ஜப்பான், திபெத்து முதலிய கீழ்நாடுகளிலும் பரவியுள்ள விஷயம் விளங்குகின்றது.

சாக்தம் சிலருக்குத்தான் உரிமையுள்ளது என்று இந்தியாவில் கருதப்படவில்லை. சைவர், வைஷ்ணவர், பௌத்தர், ஜைனர், சீக்கியர் முதலிய எல்லா மதத்தினர்களுக்கும் சக்தி வழிபாட்டில் உரிமையுண்டு. அன்றியும் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, ஆண், பெண் என்னும் வேற்றுமைகள் யாவுமின்றி யாவரும் இந்த சாக்த மதத்தைத் தழுவி ஒழுகிப் பெறுதற்கரிய பெரும் பேற்றைப் பெறலாம் என்று தந்திரங்கள் கூறுகின்றன.

சைவம், வைஷ்ணவம், பௌத்தம் முதலிய ஆகமங்களுக்குப் பொதுவாயுள்ள சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பெரும் பிரிவுகள் சாக்த ஆகமதத்திற்கும் உண்டு. இவற்றுள் சரியை-கிரியைகள் கரும காண்டத்திற் சேர்ந்தன. இவற்றுள்தான் யந்திரங்கள், மந்திரங்கள், புறமுக ஆராதனைக் கிரமங்கள், ஆசார பேதங்கள், இந்திர ஜாலாதிகள், வசியம், ஸ்தம்பனம், உச்சாடனம், மாரணம் முதலிய தீய கருமங்கள் கூறப்பட்டுள்ளன. இவை மிக மிகத் தாழ்ந்த மனோபாவமுள்ள அதமாதிகட்குரிய விஷயங்களாகும். யோக மென்பது பிண்டமாகும் சரீரத்தில் மூலதாரம், சுவாதிஷ்டானம் முதலிய சக்கரங்களில் பற்பல சூட்சும தேவதைகளையும் பீஜாட்சரங்களையும் உள்முகமாகப் பாவனை செய்து ஜீவ சக்தியாகும் குண்டலினியை விழிப்படையச் செய்து, சுழுமுனை வழியாகச் சிரசிலுள்ள ஆயிரவிதழ்க் கமலத்தில் விளங்கும் செம்பொருளோடு சேர்த்து, அச்சேர்க்கையால் பெருகும் அமிர்தத்தைப் பருகி ஆனந்தமாக இருக்கும் நிலையை யுணர்த்துகின்றது.

ஞானபாகமோவெனின் உலகமாகும் அண்டத்திலும் பிண்டமாகும் சரீரத்திலும் தோன்றும் சக்திகள் யாவும் அண்ட பிண்டங்களுக்குச் சம்பந்தப் பட்டவையாதலின் சட சக்திகள் என்றும், அவை உற்பத்தி,

விகாரம், நாசம் முதலியவைகளற்ற சிற்சத்தியினின்றும் கற்பிதமாய்த் தோன்றினவாதலின் உண்மையல்லவென்றும், அருளாநந்த வடிவ சிற்சக்தி ஒன்றே உண்மையானதென்றும், இந்த அருட் சக்தியின் அருளால்தான் செம்பொருளை உணராமல் உணரலாமென்றும், இதனால் சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகிய பேரொளி வடிவப் பேரின்பமாகலாமென்றும் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.