பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலம்

318

ஆங்கிலம்

பல வகைகளில் தாக்கரேக்கு நேர் எதிரான இலக்கியப் பண்புகள் கொண்ட சார்லஸ் டிக்கன்ஸ் அமரத்துவம்பெற்று விளங்கும் பல கதாபாத்திரங்களை உருவாக்கினார். தாக்கரேயின் நுண்ணிய நகைச்சுவையைப் போலன்றி, இவரது நகைச்சுவை தீமையைச் சாட்டை கொண்டு அடிப்பதுபோல் சீறி எழுந்து சமூகத்தைத் திருத்த உதவியது. தாமஸ் ஹார்டி ஒற்றுமையில்லா இல்வாழ்க்கையையும், இயற்கையோடு முரண்பட்ட சமூகத்தையும், சாவிலும் நாசத்திலும் நாட்டமுள்ள மனித உள்ளத்தையும் கண்டு, அவற்றைத் தம் கதைகளில் மனக்கசிவுடன் சித்திரித்தார். அகந்தையை நாணச் செய்யப் புகழ் பெற்ற பல நாவல்களை மெரிடித் கடினமான நடையில் இயற்றினார்.

பிரான்டி (Bronte) சகோதரிகள் மனித உள்ளத்தை அடிப்படையாகக் கொண்ட கதைகளை அமைப்பதில் பிறருக்கு வழிகாட்டிகளாக அமைந்தார்கள். ஷார்லட்பிரான்டி எழுதிய ஜேன் அயர் (Jane Eyre) என்ற நாவலும், எமிலி பிரான்டி எழுதிய வுதரிங் ஹைட்ஸ் (Wuthering Heights) என்ற நாவலும் உலக இலக்கியத்தில் இடம் பெறத் தக்கவை. ஸ்ரீமதி காஸ்கெல் (Mrs. Gaskell) தொழிற் புரட்சியால் தோன்றிய பிரச்சினைகளைத் தம் நாவல்களில் திறமையுடன் ஆராய்கிறார். படிப்போர்க்குச் சலிப்பு ஏற்படாமலும், தேவையற்றவைகளைப் புகுத்தாமலும், நீண்ட கதைகளைப் புனையும் வித்தையில் ஜார்ஜ் எலியட் கைதேர்ந்து விளங்கினார்.


இக்காலத்திய உரைநடை ஆசிரியர் பலர் புகழ்பெற்று விளங்குகிறார்கள். கடினமானதும், படிப்போரை விளித்துரைப்பதுமான புதிய நடையில் தாமஸ் கார்லைல் அக்கால அரசியல், பொருளாதார, விஞ்ஞானக் கருத்துக்களைக் கண்டித்தார். மெக்காலேயின் ஆங்கில வரலாறு குறிப்பிடத்தக்கது. இவருடைய கருத்துக்களை ஏற்காதவரும் இவருடைய சரளமான நடையையும், சம்பவங்களை விவரிக்கும் தெளிவான முறையையும் புகழாமல் இருக்க முடியாது. மாத்தியு ஆர்னல்டு பண்பாட்டுக்காகப் போராடுவதையே நோக்கமாகக்கொண்டு ஆத்திரம் ததும்பும் நடையில் தம் உரைநடை நூல்களை எழுதினார். கலையுணர்ச்சியற்ற அக்காலத்தை இடித்துரைக்கும் பணியை ஜான் ரஸ்கின் மேற்கொண்டார்.

தற்காலம்: 20ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானவளர்ச்சியினால் சமூக, பொருளாதார அரசியல் அமைப்புக்களில் தோன்றிய பெரு மாறுதல்களாலும், இரு உலகப் போர்களினாலும் சிந்தனையின் போக்கே மாறிவிட்டது.

விஞ்ஞான உண்மைகளையும், உளவியல் உண்மைகளையும், புது அரசியற் கருத்துக்களையும் அடிப்படையாகக்கொண்டு எழுந்த ஏராளமான நாவல் இலக்கியம் இக்காலத்திற்கே சிறப்பானது. இத்தகைய தன்மை நவிற்சி (Realistic) இலக்கியத்திற்கு ஜார்ஜ் மூர் அடிகோலினார். ஹென்ரி ஜேம்ஸ் என்ற நாவலாசிரியர் மானிட உணர்ச்சியின் சிறு வேறுபாடுகளையும் திறமையுடன் விவரித்தார்.

எந்திர நாகரிகத்தின் விளைவுகள் அனைத்தையும் விஞ்ஞானக் கண் கொண்டு ஆராய்ந்த நாவலாசிரியருள் எச். ஜி. வெல்ஸ் முக்கியமானவர். தொழில் நாகரிகத்தினால் விளைந்துள்ள பிரச்சினைகளையும் தம் நாவல்களில் ஆராய்ந்தார். நடுத்தர வகுப்பினரை வெல்ஸ் சித்திரித்ததுபோல் உயர்தர வகுப்பினரை கால்ஸ்வொர்த்தி (Galsworthy ) தம் நாவல்களில் நேர்மையான இரக்கத்துடன் உருவாக்கினார். இவர் நாவல்கள் நாடகப் பண்பு நிறைந்தவை.

தமது 21ஆம் வயதில் தம் தாயகமான போலந்திலிருந்து வந்து இங்கிலாந்தை அடைந்த ஜோசப் கான்ராடு (Joseph Conrad) ஆங்கில மொழியைக் கற்றுக் கவிதைப் பண்பு நிறைந்த சிறு கதைகளையும் நாவல்களையும் எழுதினார். அதுபோலவே தொழில் வளர்ச்சி மிக்க தமது பிரதேசத்தின் சமூக அமைப்பு ஆர்னல்டு பென்னட் என்ற ஆசிரியரின் கதைகளுக்கு அடிப்படையாகியது.

சர் ஹியூ வால்போல் (Sir Hugh Walpole) ஆன்தனி ட்ராலப்பின் முறையைப் பின்பற்றி நல்ல கதையமைப்புக்கொண்ட நாவல்களை எழுதினார். வால்போலைப் போலவே புகழ் பெற்ற இன்னொரு நாவலாசிரியர் டீ. எச். லாரன்ஸ். இவர் தமது விவரணைத் திறனின் உதவியால் தம் கருத்துக்களை அனைவரும் ஏற்குமாறு செய்ய முடிந்தது.

தற்காலத்தில் விரும்பிப் படிக்கப்பெறும் நாவல்களில் சமர்செட் மாம் (Somerset Maugham) எழுதியவை முக்கியமானவை. இவர் கதை சொல்வதிலும் சம்பாஷணையிலும் திறமை பெற்றவர்; சிறு கதைகளையும், நாடகங்களையும், பிரயாணப் புத்தகங்களையும் எழுதி உள்ளார்.

தற்கால மக்களது கருத்தைக் கவர்ந்துள்ள நாவலாசிரியர்களுள் பார்ஸ்டர் (Foster) குண அமைப்பில் வல்லவர். இலக்கண விதிகளுக்கும், மொழி வழக்குக்களுக்கும் புறம்பான புது நடையில் ஜாய்ஸ் (Joyce) தமது யுலிசீஸ் என்ற நூலை எழுதினார். வர்ஜினியா வுல்ப் அம்மை (Virginia Woolf) அழகிய நடையில் அகக்கண் முன் தோன்றும் தோற்றங்களைச் சித்திரித்தார்.

வேறு பல பெண் நாவலாசிரியர்களுள் ரோஸ் மெக்காலே கிளெமென்ஸ் டேன் (Clemence Dane), வினிபிரடு ஆஷ்டன் (Winifred Ashton), மார்கரெட் கென்னடி (Margaret Kennedy), எலிசபெத் பவன் (Elizabeth Bowen) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

அமெரிக்க ஆசிரியருள் சின்க்லேர் லூயிஸ் (Sinclair Lewis), பாபிட் (Babbitt) என்ற நாவலில் அமெரிக்க வியாபாரி யொருவனை மறக்க முடியாதவகையில் சித்திரிக்கிறார். போர்க்கள விவரணையில் ஹெமிங்வே சிறப்புடன் விளங்குகிறார். பிரடரிக் புரோகாஷ் கற்பனை மிகுந்த தம் கதைகளில் ஆசிய நாடுகளைச் சித்திரிக்கிறார். சோஷலிசக் கருத்துக்களின் அமெரிக்கப் பிரதிநிதியாக அப்டன் சிங்க்ளேர் விளங்குகிறார். அண்மையில் அவர் எழுதிய தொடர் நாவல்களில் தற்காலத்தின் சர்வதேச வரவாறு கவர்ச்சிகரமான வகையில் சித்திரிக்கப்படுகிறது. சீன வாழ்க்கையைக் கனிவும் இரக்கமும் மிகச் சித்திரிப்பதில் பொல் பக் இணையற்று விளங்குகிறார்.

நகைச்சுவை எழுத்தாளரில் ஜேகப்ஸ் மாலுமிகளின் வாழ்க்கையை உள்ளவாறே சித்திரித்தார்; எச். எச். மன்ரோ நகைச்சுவையுடன் படிப்பினையையும் கலந்து தந்தார். பி. ஜீ. வோட்ஹவுஸ் கற்பனைப் பாத்திரங்களை நகைச் சித்திரப் பாணியில் உருவாக்கி யுள்ளார். (தற்கால ஆங்கிலக் கவிதைபற்றித் தனிக்கட்டுரை பார்க்க).

19ஆம் நூற்றாண்டு நாடக இலக்கியம் தேக்கமுற்றிருந்த காலம். அந்நூற்றாண்டின் இறுதியில் தோன்றி அக்காலத்தவரது நயவஞ்சகமான போலிக் கௌரவங்களையும் அறநெறிகளையும், தகர்த்தெறிய ஆஸ்கர் வைல்டு என்ற ஆசிரியர் முற்பட்டார். இவர் எழுதிய விண்டர்மியர் சீமாட்டியின் விசிறி (Lady Winder- mere's Fan) என்ற நாடகம் இலக்கிய உலகத்தில்,