பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர் நல்லந்துவனார்

340

ஆஞ்சைனா பெக்டரிஸ்

கள் நடைபெறுகின்றன. இதுபற்றி ஆராய்ச்சி நிலையங்கள் 1950-ல் ஒரு சங்கமாகச் சேர்ந்து, ஆண்டுதோறும் கூடி, ஆசிரியர் கல்விபற்றிய பிரச்சினைகளை ஆராய்ந்து வருகின்றன. டி. கே. என். மே.

ஆசிரியர் நல்லந்துவனார் கடைச்சங்கப் புலவருள் ஒருவர்; நவ்வந்துவனார் என்றும் கூறப்பெறுவர். இவர் 'மதுரையாசிரியர்' என்று சிறப்பிக்கப் பெறுகிறார் ; கலித்தொகை தொகுத்தவர்; நெய்தற்கலி பாடியவர்.

ஆசிரியவிருத்தம் ஆசிரியப்பாவின் இனம். ஐஞ்சீரடிக்கு மேற்பட்ட அடிகளாகிய கழிநெடிலடிகள் நான்காய்த் தம்முள் அளவொத்து வருவன ஆசிரியவிருத்தம் எனப்படும். ஒவ்வோரடியினும் ஆறு சீர்கள் முதலாக எட்டுச் சீர்கள் வரை வருவன சிறப்பாகும்.

ஆசிரியன் பெருங்கண்ணனார் கடைச்சங்கம் மருவிய புலவர் (குறுந்.239).

ஆசுகவிராஜசிங்கம்: இவரைச் சேறைக் கவிராச பிள்ளை என்பர்; விரைவிற் கவி யியற்றுவார் ; வண்ணக் களஞ்சியமும் ஆவார் ; கருணீகர மரபினர் ; சேயூர் முருகனுலா என்ற நூல் இயற்றியிருப்பதாக அந்தகக்கவி வீரராகவ முதலியார் பாடிய சேயூர் முருகன் பிள்ளைத் தமிழால் தெரியவருகிறது. மற்றும் திருக்காளத்தி நாதர் உலா, திருவண்ணாமலையார் வண்ணம், திருவாட்போக்கிநாதர் உலா முதலியன பாடியிருக்கிறார். வடஆர்க்காடு மாவட்டத்தில் வாலாஜா வட்டத்திலுள்ள சோளங்கிபுரத்திலுள்ள கடிகையூராரைப் பாடியவர். ஒரு பாண்டியனையும் பாடியவர் போலும். திருக்காளத்தி வேங்கடாசல முதலியார் என்பவரால் ஆதரிக்கப் பெற்றவர்.

ஆசுன்சியோன் தென் அமெரிக்காவிலுள்ள பராகுவே குடியரசின் தலைநகரம். 1537-ல் நிறுவப்பெற்ற இந்நகரம் பராகுவே ஆற்றின் கரையில் உள்ளது. மக் : 2,05,6051950). சிறிய நகரமாயினும், இவ்வூர் அழகாக அமைந்திருக்கிறது. ஆற்றின் கரையோரமுள்ள இறக்குமதி ஏற்றுமதித் துறைமுகம் ஜன நெருக்கமுள்ள இடம். இங்கு ஒரு தேசிய நூல் நிலையமும் கல்லூரியும் இருக்கின்றன. இவ்வூர் ஆட்சி ஆறு அங்கத்தினர்கள் கொண்ட ஒரு நகராட்சிக்கழகத்தால் நடத்தப்படுகிறது. மேயர் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார். அங்கத்தினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

16ஆம் நூற்றாண்டில் வட அமெரிக்காவிற்கு வந்த செபஸ்தியன் காபட் என்பவர் தென் அமெரிக்காவுக்கு வந்து, 1526-ல் ஆசுன்சியோனுக்கும் வந்தார். பராகுவே 1811-ல் ஸ்பானியர் ஆட்சியிலிருந்து விடுவித்துக் கொண்ட பிறகு ஆசுன்சியோன் அக்குடியரசின் தலை நகராயிற்று. தென் அமெரிக்கச் சுதேசிகளுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இடையே நடந்த பல பூசல்களின் அடையாளங்கள் இன்னும் இந்நகரின் பல பாகங்களில் காணப்படுகின்றன.

ஆசூர்பானிபல் (கி. மு. 669-626) அசீரியர்களுடைய கடைசிப் பேரரசன் ; இவன் காலத்தில் அசீரியர்களுடைய புகழ் உலகெங்கும் பரவியது. இவன் எகிப்து, பாபிலோன், ஈலம் முதலிய நாடுகளை வென்றான். ஆயினும் இப்போர்களால் பலவீனமடைந்த அசீரியாவைப் பிற்காலத்தில் பிற நாட்டவர்கள் வெல்வது எளிதாயிற்று. இவன் இறந்து 14 ஆண்டுகட்குப் பிறகு அசீரிய சாம்ராச்சியம் முடிவு எய்தியது. இவனுக்கு இலக்கியத்திலும் கலைகளிலும் ஆர்வம் உண்டு. இவனது தலைநகரமான நினேவாவில் பல அழகிய கட்டடங்களைக் கட்டுவித்தான். இவன் அரண்மனையில் ஒரு பெரிய நூல் நிலையம் இருந்தது. பண்டைய பேரரசர்களில் இவன் ஒருவன் என்று கூறலாம். தே. வெ. ம.

ஆசெல்லி, காஸ்பரோ (1581-1626) இத்தாலிய உடற்கூற்று விஞ்ஞானி. பேவியா ஊரில் உடற்கூற்றுப் பேராசிரியராக இருந்தார். குடலிலுள்ள பாற்குழல்களைக் (Lacteals) கண்டுபிடித்தவர். உணவு சிறுகுடலில் செரிமானமாகும்போது அதிலுள்ள கொழுப்புப் பொருள்கள் கூழ்ப்பால்போல ஆகும். அந்தக் கூழ்ப்பால் குடற்பால் (Chyle) எனப்படும். அது பாற்குழல்களில் உறிஞ்சப்பட்டு அவற்றின் வழியாக மார்பறை நாளத்திற்குக் (Thoracic duct) கொண்டுபோகப்படும். இந்த ஆராய்ச்சியை இவர் நாயின் உடலைச் சோதனை செய்து அறிந்து தி லாக்டிபஸ் (De Lactibus) என்னும் நூலில் எழுதினார்.

ஆஞ்சு பிரான்சின் ஒரு பழைய மாகாணம்; பாரிஸிற்கு மேற்பாலுள்ள பிரதேசம். 11. 12ஆம் நூற்றாண்டுகளில் பிரான்சில் ஒரு முக்கியமான படைமானியமாக இருந்தது இங்கிலீஷ் அரசனான I-ம் ஹென்ரி தன் மகள் மாடில்டாவை ஜாப்ரே பிளான்டாஜனட் (GeoffreyPlantagenet)என்பவனுக்குமணம் செய்து கொடுத்தான்; அவர்களுடைய மகனான III-ம் ஹென்ரி இங்கிலிஷ் அரசனானபோது அவன் இங்கிலாந்து, நார்மண்டி, ஆஞ்சு ஆகிய மூன்றிற்கும் அரசனானான். அன்றியும், பிரிட்டனி, அக்விட்டேன் என்னும் பிரதேசங்களும் அவன் இராச்சியத்தில் அடங்கியிருந்தன. இவை முழுவதையும் சேர்த்து 'ஆஞ்சுப் பேரரசு' என்றும் சொல்வதுண்டு. 1203-ல் பிரெஞ்சு மன்னனால் ஆஞ்சு கைப்பற்றப்பட்டு, அரச வமிசத்தவர்களின் சொந்த உரிமையாக இருந்து வந்தது; 1584-ல் இறுதியாகப் பிரெஞ்சு இராச்சியத்தின் பகுதியாயிற்று. ஆஞ்சு இருந்த பிரதேசம் தற்போது 'மெயின் வார்' என்னும் மாகாணமாக இருக்கிறது.

ஆஞ்சைனா பெக்டரிஸ் (Angina Pectoris) : இந்த நோயில் இருதயத்திசுக்களுக்கு இரத்தம் கொண்டு போகும் இதயத் தமனி (Coronary Artery) முழுவதும் அடைபடாமல் திடீரென்று இறுகிக் குறுகுவதால் அவைகளுக்குப் போதுமான அளவு இரத்த ஓட்டம் இல்லாமல் நோயாளிக்கு வலி ஏற்படுகிறது. சாதாரணமாகக் கோபம் வந்தாலோ, சாப்பிட்ட பிறகு வேகமாக நடந்தாலோ, ஓடினாலோ இது ஏற்படலாம். சாப்பிட்டவுடன் அதிக இரத்தம் வயிற்றிற்குச் சென்று விடுகிறது. அந்தச் சமயத்தில் வேகமாய் நடப்பதால் காலுக்கும் இரத்தம் வரவேண்டியிருக்கிறது. அதனால் இருதயத்திற்குப் போதுமான அளவு இரத்தம் போகாமல் அதற்குச் செல்லும் இரத்தக் குழாய் குறுகுகிறது. இதனால் இருதயத்தின் தசைக்கு இரத்தம் குறையவே வலி ஏற்படுகிறது. இந்த வலி தாங்கமுடியாத துன்பத்தைத் தரும். மார்பில் இருதயத்திற்கு முன்பக்கத்திலும் இடத் தோளிலிருந்து இடக்கைச் சிறுவிரல் வரையிலும் வலி ஏற்படும். நடந்துகொண்டிருக்கும் நோயாளி வலி பொறுக்க முடியாமல் அசைவற்றுச் சிலைபோல் நின்றுவிடுவான். சிறு விரலையும்கூட அசைப்பதற்குப் பயப்படுவான். மரணம் எற்படும் என்ற அச்சம் அதிகமாகத் தோன்றும். இம்மாதிரி வலி முதல் தடவை உண்டாகும்போதே மரணம் ஏற்படலாம். அல்லது பலமுறை வலி கண்ட பிறகு மரணம் ஏற்படலாம். எந்தச் சமயத்தில் மரணம் ஏற்படுமென்று சொல்ல இயலாது.