பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆந்திரர்

375

ஆந்திர ராச்சியம்

ஆந்திரரைப் பற்றிய குறிப்பு முதன்முதல் ஐதரேய பிராமணத்தில் (கி.மு. 700) காணப்படுகிறது. புண்டரர், சபரர், புளிந்தர், மூதிபர் இவர்களைப் போலவே ஆந்திரரையும் விந்தியப்பிரதேசத்தில் வாழும் தஸ்யுக்கள் என்னும் ஆரியரல்லாத இனத்தார் என்று இந்நூல் கூறுகிறது.

அதற்குப்பின் கி. பி. முதல் நூற்றாண்டில் ரோமாபுரியில் வாழ்ந்த பிளினி ஆந்திர சாம்ராச்சியத்தில் அரண்களோடு கூடிய 30 நகரங்களும், 1,00,000 காலாட்படையும், 2,000 குதிரை வீரர்களும், 1,000 யானைகளும் இருந்ததாகக் கூறுகிறார்.

புராணங்களையும் கல் வெட்டுக்களையும் ஆதாரமாகக் கொண்டு ஆந்திர சாம்ராச்சிய வம்ச பரம்பரையைக் காலமுறைப்படுத்தி அறுதியிடலாமாயினும், இப்போது தெலுங்கு நாடென்று கூறிவரும் பகுதியை இவ்வரசர் ஆண்டனரென்று சொல்ல முடியாது. தக்கிணத்தின் வடமேற்குக் கோடி, வடகன்னட மாவட்டத்தின் வட பகுதி, மேலைக் கடற்கரைப் பகுதி, கலிங்க நாட்டின் மேற்கெல்லையை ஒட்டிய தக்கிணத்தின் வடபகுதி, மைசூர், பெள்காம், தார்வார் இவற்றின் சிற்சில பகுதிகள் ஆகிய இந்நிலப்பரப்பில் இம் மன்னரின் ஆட்சி ஓங்கியிருந்ததென்று மட்டும் சொல்லலாம். இவர்கள் பின்னர் பல்லாரியிலும், கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களிலும் தமது ஆட்சியைச் செலுத்தினார்கள். இவர்கள்தாம் இக் காலத்தில் வாழும் தெலுங்கு மக்களின் மூதாதைகள் என்றும், இவர்கள் வழங்கிய ஆந்திர மொழியே இப்போது வழங்கிவரும் தெலுங்கு மொழியின் பழைய வடிவம் என்றும் திட்டமாக அறிவதற்குச் சான்றுகள் இல்லை.

தெலுங்கு மொழியின் ஆதிகவியாகிய நன்னய்யர் (11ஆம் நூ.) தாம் எழுதிய நூலின் மொழிக்குத் தெலு(ங்)கு என்னும் சொல்லை வழங்கினரேயன்றி ஆந்திர என்னும் சொல்லை வழங்கவில்லை. அதற்குப் பின் வந்த நன்னிசோடர் (12ஆம் நூ.) தெலு(ங்)கு என்னும் சொல்லை மொழிக்கும், 'ஆந்திர' என்னும் சொல்லைத் தெலுங்கிலக்கியம் செழித்து விளங்கிய நாட்டுக்கும் வழங்கினார். அது முதற்கொண்டு புலவரும் பாவலரும் 'ஆந்திர' என்னும் சொல்லையே மக்களுக்கும் மொழிக்கும் வழங்கி வரலாயினர். எனினும் தெலுகு, தெனுகு என்னும் சொற்களும் வழக்கில் இருந்து வந்தன.

எனவே, ஐதரேய பிராமணத்தில் குறித்துள்ளபடி பண்டைக்காலம் முதல் ஆந்திரர்கள் விந்தியப் பிரதேசத்தில் இருந்திருக்க வேண்டுமென்றும், அங்கிருந்து கிருஷ்ணா நதியின் முகத்துவாரத்தையடுத்த நிலப்பகுதிவரை பரவியிருக்கலாமென்றும், கி. பி. முதல் நூற்றாண்டில் ஆண்ட மன்னனாகிய ஹாலரின் சப்தசதியில் குறிப்பிட்டபடி அவர் மொழி பைசாச மொழியின் சிதைவா யிருக்கலாமென்றும் தெளியலாகும். தெலுங்கு திராவிட மொழிகளுள் ஒன்று. ஜீ. வீ. சீ.

ஆந்திர ராச்சியம் : இது இந்திய யூனியனின் ஏ. வகுப்பு இராச்சியங்களுள் ஒன்று. இது 1953 அக்டோபர் 1-ல் அமைக்கப்பட்டது. பரப்பு : 63,000 ச. மைல். ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், கி. கோதாவரி, மே. கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர், கர்நூல், அனந்தப்பூர், கடப்பை, சித்தூர் என்னும் மாவட்டங்கள் அடங்கியது. முக்கிய ஆறுகள்

ஆந்திர ராச்சியம்

பெண்ணை, துங்கபத்திரை, கோதாவரி, கிருஷ்ணா. முக்கிய மலைகள் கிழக்கு மலைத் தொடர்கள், நல்லமலைத் தொடர்கள், நிமிகிரி மலைகள். கர்நூல் இதன் தலைநகரம். பல்கலைக் கழகமும் பல துறைக் கல்லூரிகள் பலவும் உள்ளன. துங்கபத்திரை, கிருஷ்ணா, கோதாவரி நதிகளுக்கு அணை கட்டப்பட்டிருக்கின்றன. விசாகப்பட்டினத்தில் கப்பல் கட்டும் தொழில் நடைபெறுகிறது. இவ்வீராச்சியத்தில் கனிப் பொருள்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. கிருஷ்ணா, கோதாவரி, நெல்லூர் மாவட்டங்களில் நெல் உற்பத்தி மிகுதி. கடப்பையில் கம்பளங்கள் நெய்யப்படுகின்றன. பல புண்ணியத் தலங்கள் இவ்விராச்சியத்தில் உள்ளன. மக் : 2,05,07,801 (1951).

வரலாறு: ஆந்திரர்களைப் பற்றிய பிரஸ்தாபம்

கி. மு. ஏழாம் நூற்றாண்டிலெழுந்த ஐதரேய பிராமணத்திலும் புராணங்களிலும் காணப்பட்ட போதிலும், அவர்களுடைய வரலாறு கி. மு. நாலாம் நூற்றாண்டிலிருந்த கலிங்க இராச்சியத்திலிருந்தே தொடங்குகிறது. கி.மு. 302-ல் மௌரிய மன்னர் சபையில் கிரேக்கத் தூதராயிருந்த மெகாஸ்தனீஸ் கலிங்கர்கள் நாகரிகமடைந்தவர்கள் என்று கூறுகிறார். கி. மு. 261-ல் அசோகச் சக்கரவர்த்தி கலிங்கத்தின்மீது படையெடுத்துச் சென்று அங்கிருந்த ஆந்திர அரச வமிசத்தை அடிபணியச் செய்தார். ஆயினும் ஆந்திரர்களுடைய பலம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வந்தது.