பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆப்பிள்

387

ஆப்பிள்

சாதாரணமாகப் பயிராகிறது. உதாரணமாக இந்தியாவில் காச்மீரத்தில் விளைகிறது. தென்னிந்தியாவில் நீலகிரியிலும் பெங்களூரிலும் ஓரளவுக்கு உண்டாகிறது. ஆப்பிள் வளமாக வளரவேண்டுமானால் ஆண்டுதோறும் மிகக்குளிரான ஒரு பருவம் இருக்கவேண்டும். அதில் இந்த மரம் இலை, தளிர் ஒன்றுமின்றிச் செயலற்று ஒடுங்கி உறங்கினதுபோல இருக்க வேண்டும்.

சில ஆப்பிளிலே ஆயிரக்கணக்கான வகைகள் இருக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் ஏழாயிரம் வகைகளுண்டு. ஆயினும் சுமார் முப்பது முப்பத்தாறு வகைகளே மிகுதியாகப் பயிராவன. அவற்றுள்ளும் பத்துப் பன்னிரண்டு மிகச்சிறந்தவை. இவ் வகைகள் பழத்தின் வடிவம், அளவு, நிறம், மணம், சுவை, சாறு, மென்மை, நெசவு முதலிய பல பண்புகளில் வேறுபடும். செடியின் தோற்றம், இலையின் வடிவம், விளிம்பு, பூக்குங் கிளைகள் முதலியவற்றிலும் இவை சிறிது மாறுபடும். வகைகள் தமக்கு வரும் நோய்களைத் தடுக்கும் ஆற்றலுள்ளவை. கனிந்த ஆப்பிள் பச்சை, சிவப்பில் பல சாயைகள், மஞ்சள், இந்நிறங்கள் கலந்தவையாகப் பல வர்ணமாக இருக்கும். சில அழுத்தமாகவும் புளிப்பாகவும் இருக்கும். அவற்றை வேகவைத்தே உண்பார்கள். அல்லது அவை மது வகைகள் செய்யவுதவும். சில வகைகள் மெதுவாகவும் மென்மையான மணமுடையனவாகவும் இருக்கும். அவற்றைப் பச்சையாக உண்ணலாம்.

ஆப்பிள் பயிர் செய்வதற்கு நல்ல மண் வேண்டும். அது நிரம்ப ஆழமாக இருக்கவேண்டியதில்லை. ஆயின், நீர் விரைவில் வடிந்துவிடக்கூடியதாக இருக்க வேண்டும். விதையிலிருந்து இதைப் பயிர் செய்யலாம். சற்று எச்சரிக்கையாக வளர்க்க வேண்டும். பழம் தர நாள் செல்லும். பழம் தாய்ச்செடியின் பழத்தை ஒத்திருக்கலாம். அதற்கு நிரம்ப வேறாகவும் இருக்கலாம். தாய்ப்பழத்தை ஒத்திருந்தாலும் அளவில் சிறிதாகவும், மற்றப் பண்புகளில் குறைவுடையதாகவும் இருக்கும். ஆதலால் ஒட்டுச் செடிகளிலிருந்தே அப்பிளைப் பயிர் செய்வர். எப்போதாவது விதையிலிருந்து நல்ல பண்புகளுள்ள பழம் விளையுமானால், அந்தச் செடியை முதலாகக்கொண்டு ஒட்டுச்செடிகளை உண்டாக்கி ஒரு புதிய வகையை ஏற்படுத்தலாம். காட்டுச்செடி வகைகளிலும் வேறு வகைகளிலும் வேரிலிருந்து செடிகள் உண்டாகும். அவற்றை வளர்த்து, அவற்றிற்கு நல்ல வகைச் செடிகளின் குருத்துக்களை ஒட்டிப் புதிய செடிகளை உண்டாக்குவதுதான் வழக்கமாகப் பயிர்செய்யும் முறை. நன்றாக வளரும் நாடுகளில் செடிகளை 30, 40 அடிக்கு ஒன்றாக, வரிசையாக நடுவர். தென்னிந்தியாவில் 10, 12 அடிக்கு ஒன்றாக நடுகின்றனர். இங்கு இவை சிறு குற்றுச் செடிகளாகத்தான் பெரும்பாலும் வளர்கின்றன. மரம் 7,8 ஆண்டு வளர்ந்து பழம் தரத்தொடங்கும். 30 ஆண்டுகள் நல்ல பலன் கொடுக்கும். பெங்களூரில் 4, 5 ஆண்டுகளில் பழம் கொடுக்கத் தொடங்குகிறது. 10, 12 ஆண்டுகளுக்கப்புறம் குன்றிவிடுகிறது. நன்றாக வளர்ந்த மரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை சுமார் இலட்சம் பூப்பூக்கலாம். அவற்றிலிருந்து 2,000, 3,000 பழம் உண்டாகலாம். தென்னிந்தியாவில் அப்படி ஏராளமாகப் பழுப்பதில்லை. 4-5 வயதில் 4, 5 டசன் பழம் உண்டாகலாம். நன்றாகக் காய்த்தால் 300, 350 பழம் உண்டாகலாம். பொதுவாக ஆப்பிள் ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும். சில வகைகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே பூக்கும். பெங்களூரில் மரத்தைச் சுற்றிலும் சற்றுத்தொலைவில் குழி வெட்டி, அதன் வேர்கள் சிறிதளவு வெட்டுப்படச்செய்து, ஆண்டுக்கு இருமுறை பூக்கச்செய்கின்றனர். ஆப்பிள் செடிக்கும் கனிக்கும் பலவித நோய்கள் பற்றுவதுண்டு. எங்கெங்கு அது விளைகிறதோ அங்கெல்லாம் ஒருவகை விட்டிலின் புழு உண்டு. அது பழத்தினுள்ளே வளர்ந்து அதைப் பாழாக்கும். அசுகுணி, செதில் பூச்சி; பூஞ்சணம் முதலியவற்றாலும் தீங்கு நிகழும். சிலகாலங்களில் பூக்கள் மிகுதியாக உதிர்ந்து விடும். இவற்றிற்கெல்லாம் பலவித மருந்துகளை நீராகவும் தூளாகவும் தெளிக்கின்றனர்.

மரத்தை விதையிலிருந்து பயிர் செய்யாவிடினும் விதைகள் உண்டானால்தான் பழம் பெருக்கும். சுவையுடையதாகும். மகரந்தச் சேர்க்கையும் சூல்கள் கருவுறலும் நிகழ்ந்த பிறகே பழம் வளரத் தொடங்கும். இல்லாவிட்டால் கரடாக நிற்கும்; அல்லது உதிர்ந்து விடும். ஒரு பழத்திலேயே விதையுள்ள பாகம் நன்றாக வளர்ந்திருக்கும். விதை வளராத பக்கம் அப்படி வளர்ந்திராது. ஒரே வகையின் அயல் மகரந்தச் சேர்க்கை நிகழ்வதினும் வேற்றுவகைச் செடிகளின் மகரந்தம் சேருமானால் காய் மிக நன்றாக வளர்கின்றது.

ஆப்பிள் 1. கிளை, 2. பூ-நெடுக்கு வெட்டு. 3. கனி-நெடுக்கு வெட்டு

ஆதலால் ஆப்பிள் தோட்டங்களில் ஒரே வகையான செடியை நடாமல் பலவகையானவை அருகருகே இருக்குமாறு நடுகின்றனர்.

ஆப்பிள் சிறு மரமாக அல்லது குற்றுச் செடியாக வளர்வது. இதன் இலைகள் தனியானவை; மாறியமைந்தவை ; விளிம்பில் பற்களுள்ளவை; இலையடிச்-