பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரை

424

ஆரோக்கியம்-சுகாதாரம்

அங்கே பெருங்கொடிகளும், தொற்றுச் செடிகளும், தரையில் வாழும் சிறு செடிகளும், பெருந்தொகையில் பல இனங்களாகவும் பலவேறு இயல்புடையனவாகவும் தழைத்திருக்கின்றன. இக்குடும்பத்துச் செடிகளில் சில மருந்துக்கு உதவும். வசம்பு நல்ல மூலிகை. மற்றும் சில சிறந்த உணவுப்பொருள்களைத் தரும். சேப்பங்கிழங்கு தாரோ என்ற பெயருடன் வெப்ப வலயத்தில் வாழும் பல நாட்டுக் குடிகளுக்கு முக்கிய உணவாகிறது. கருணைக் கிழங்கு 4-8 ராத்தல் எடையுள்ளது. இது சேனைக் கிழங்கு என்றும் வழங்கும். சில வகைகள் 10-12 ராத்தலும் இருக்கும். இவற்றிலுள்ள முக்கிய உணவுப்பொருள் மாப்பண்டம், ஸ்டார்ச்சு. பல செடிகளைத் தோட்டங்களிலும் வீடுகளில் தொட்டி களிலும் நிழலில் வைத்து இலையின் அழகுக்காக வளர்க்கிறார்கள். இக்குடும்பம் ஆராய்டீ எனவும் படும்.

கருணை, சேம்பு, வசம்பு முதலியவற்றைப்பற்றித் தனிக்கட்டுரைகள் உண்டு.

ஆரை சிறிய நீர்ப்பூண்டு. இலைகள் நீரின்மேல் மிதக்கும். இது சதுப்பு நிலத்திலும் வாழ்வது. வாய்க்கால், வரப்பு, வயல் முதலிய இடங்களிலும் முளைத்திருக்கும். இந்தச் செடியை ஒருகால் நாலிலைப் பந்தல் என்று நயம்படச் சொல்வதுண்டு. புளியாரைக் கீரையைப்போலத் தோன்றும். ஆயின் புளியாரை மூன்று சிற்றிலைகளுள்ளது; மஞ்சட் பூப் பூக்கும். இதில் அம்மாதிரியான பூ உண்டாவதில்லை; நான்கு சிற்றிலைகளுண்டு. இது பெரணி வகையைச் சேர்ந்தது. நீர்ப்

ஆரை

1. செடி : a. ஸ்போரொகார்ப்பு.
2. a. ஸ்போரொகார்ப்பு மேலோடு. b. உள்ளேயிருக்கும் கோழையிழை கீரை உறிஞ்சிப் பெருத்து. மேலோட்டைப் பிளந்து கொண்டு வெளியே வந்துள்ளது. c. அக் கோழையிழையில் காணும் சோரஸ் அறைகள்.
3. முதிராத சோரஸ். a. பெண் அணு உண்டாகும் மாக்ரோஸ்போராஞ்சியம். b. ஆண் அணுக்கள் உண்டாகும் மைக்ரோஸ்போராஞ்சியம்.
4. மாக்ரோஸ்போர். a. பெண் அணு உண்டாகும் பாகம்.

5. ஆண் அணு.

பெரணி. இதில் தரையோடு கிடந்து படர்ந்து செல்லும் மெல்லிய பசிய தண்டு உண்டு. அதிலிருந்து கணுக்களிலே மேலே இலைகளும் கீழே வேர்களும் உண்டாகும். இலைக்காம்பு நீண்டு மெல்லியதாக இருக்கும். அதன் முனையில் ஆப்பு வடிவுள்ள இரண்டு ஜதைச் சிற்றிலைகள் நெருங்கி வளர்ந்திருக்கும். இலை வளர்ந்து வரும்போது, பெரணிகளில் காணும் நுனியடிச்சுருளாக (Circinate) அது அமைந்திருக்கும்.

இலைக்காம்புகளின் அடியில் சிறுபயறு போன்ற உறுப்புக்கள் இருக்கும். இவை ஸ்போரொகார்ப்பு எனப்படும் விதைத்தூள் பெட்டிகள். இவற்றினுள்ளே சோரஸ் என்னும் பை போன்ற பாகங்கள் 14-18 இரண்டு வரிசையாக அமைந்திருக்கும். சோரஸ் ஒவ்லொன்றிலும் ஆண், பெண் அணுக்கள் உண்டாகும். ஸ்போரொகார்ப்பு உண்டாகிச் சிலநாள் சும்மா இருக்கும். அது கோடைகாலம் என்று வைத்துக்கொள்வோம். திரும்ப நீர் வரும்போது, அதில் நீர் ஊறி, உள்ளே இருக்கும் பாகம் கோழைபோல உப்பிக் கொள்ளுவதனால் பெட்டி வெடிக்கும். சோரஸ்களிலிருந்து பாலணுக்கள் வளர்ச்சியுறும், ஆணணு இயங்கக்கூடியது. அதற்கு மெல்லிய மயிர்போன்ற இழைகள் உண்டு. அவற்றின் உதவியால் அது அசைந்து சென்று பெண்ணணுவுடன் கலக்கும். கருவுற்ற அணுவிலிருந்து புதிய செடி வளரும். ஆரைக் கீரையைக் கறி சமைப்பார்கள். அது மருந்துமாகும்.

ஆரோக்கியம் - சுகாதாரம் :ஆரோக்கியம் என்பது நோயில்லாமல் இருப்பது மட்டுமன்று. உடம்பும் உள்ளமும் நலத்துடன் இருப்பதுமாகும். ஆரோக்கிய முடையவரே வாழ்க்கையில் இன்பம் காண்பர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இத்தகைய பெரும் பேற்றை அடைவதற்கும் பாதுகாப்பதற்கும் அனுசரிக்க வேண்டிய விதிகளைப் போதிப்பது சுகாதாரவியல்.

தனிப்பட்ட ஒருவரது நலத்தை மட்டும் கருதினால், சுகாதாரம் என்பதில் உணவு, நீர், பானங்கள், தூய்மை, உறக்கம், உடற்பயிற்சி,உடை, வேலை, விளையாட்டு, இலாகிரிப்பொருள்கள், உள்ளக்கிளர்ச்சிகள் முதலியவை அடங்கும். சமூகத்தின் நலம் முழுவதையும் கருதிப் பார்த்தால் சுகாதாரம் என்பதில் தட்பவெப்பநிலை, மண்வளம், வீடுகள், தெருக்கள், நீர்நிலைகள், சாக்கடை, நோய்வராமல் தடுக்கும் முறைகள் போன்றவை அடங்கும்.

தனிப்பட்டவர் சுகாதாரம்: உடல் நலத்தைப் பாதுகாப்பதற்கான சாதனங்களுள் தலைசிறந்தது உணவு. உடலுக்கு இன்றியமையாது வேண்டப்படும் மாப்பொருள், ஊன் சத்து, கொழுப்பு, உப்புக்கள், வைட்டமின்கள் ஆகிய ஐந்தும் போதிய அளவில் உள்ளனவாயும், எளிதில் செரிக்கக் கூடியனவாயும் உள்ள உணவுப்பொருள்களை உண்ணவேண்டும். உடலுக்கு நீரும் தேவையாதலால் நாடோறும் பல முறை நீர் குடித்தல் வேண்டும். உடலிலுள்ள அழுக்குக்களை நீர் அப்புறப்படுத்தும். பால் மிகவும் நல்ல உணவு. வளரும் குழந்தைகளுக்கு இதைத் தவறாமல் கொடுக்கவேண்டும். காப்பியும் தேநீரும் ஊட்டந்தருவன அல்ல. வெறுங் கிளர்ச்சிப் பொருள்களே. அவற்றை மிகச் சிறிய அளவில் பயன்படுத்தினால் பெரியவர்களுக்குக் கேடு உண்டாகாது; ஆனால் குழந்தைகளுக்குக் கொடுக்கவே கூடாது.

தட்பவெப்ப நிலைக்கும் செய்யும்தொழிலுக்கும் ஏற்ற உடைகளையே உடுத்த வேண்டும். வெப்ப நாட்டினர் மிகக்குறைவாக உடையணிவதே நல்லது. அவர்கள் ஆடையைத் தளர்த்தியாக அணியவேண்டும். அரையில் இறுக்கிக்கட்டி, இரத்த ஓட்டத்துக்குத் தடை ஏற்படுத்தலாகாது. காலில் செருப்பு அணிதல் வேண்டும். பூட்ஸ் நல்லதன்று.