பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/504

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்கள்

456

ஆழங்காணல்

குக் கருவியாகவுள்ள தண்டம், சக்கரம் முதலானவை துணைக்காரணம். உலகத் தோற்றத்திற்கு இறைவன் இம்மூன்று காரணங்களாகவும் இருக்கிறான். யாங்ஙனம் எனின், சித்தும் அசித்தும் சூக்குமமாக இருக்கும் நிலையில் உலகம் உண்டாவதற்குமுன் அவற்றுக்குள் இறைவன் அந்தர்யாமியாக நிற்கும் நிலை முதற்காரணம் ; சூக்குமநிலையில் இருக்கும் சித்து அசித்துக்களை வெளிப்படுத்தி உலக உற்பத்தி செய்வோம் என்று இறைவன் எண்ணுகின்ற நிலையே நிமித்த காரணம்; இறைவனுடைய ஞானம், சக்தி முதலானவை துணைக்காரணம். இம்முறையில் இறைவன் உலகிற்கு மூன்று காரணங்களுமாக இருக்கின்றான். ஆயின், இறைவன் உலகிற்கு முதற்காரணமாகும்போது 'முதற்காரணமாவது-காரியமாக மாறுவது' என்ற விதிப்படி இறைவனே உலகமாக மாறவேண்டுமே! அப்பொழுது இறைவனுடைய சொரூபத்தில் விகாரம் உண்டாக மாட்டாதோ? என்னில், உண்டாகமாட்டாது. அதுதான் இறைவனுடைய ஆற்றல். “தானே ஜகத்தாய்ப் பரிணமிக்கையாலே உபாதானமுமாயிருக்கும். ஆனால், நிர்விகாரன் என்னும்படி ஏன் என்னில், சொரூபத்திற்கு விகாரமில்லாமையாலே நிர்விகாரன் என்னக் குறையில்லை. ஆனால் பரிணாமம் உண்டாம்படி ஏன் என்னில், விசிஷ்ட விசேஷண சத்வாகாரமாக “ஒரு சிலந்திக்கு உண்டான சுபாவம் சர்வசக்திக்குக் கூடாதொழியாதிறே“ என்றார் தத்துவத்திரய நூலுடையாரும். “நினைந்த எல்லாப் பொருட்கும் வித்தாய் முதலிற் சிதையாமே“ என்பது ஆழ்வார் திருவாக்கு.

நாராயணன் என்னும் பெயருள்ளவனே பரம்பொருள் என்பது. இப்பெயர்க்கு நீரை இடமாக உடையவன் என்று பொருள் கூறுவதுண்டு. அப்பொருளினைக் கொண்டிலர் பெரியோர். நாராயணன் என்பது நாரம் அயனம் என்ற இரண்டு சொற்களாலாய தொடர். இதற்கு இரண்டு வகையாகப் பொருள் அருளிச் செய்துள்ளனர். நாரம்-அழிவில்லாப் பொருள்களின் கூட்டம்; அவையாவன: மூலப்பகுதியின் விகாரமாயுள்ள எல்லாப் பொருள்களும், எல்லா உயிர்களும், மோட்சத்திலுள்ள எல்லாப் பொருள்களுமாம். அயனம்-இடம். நாராயணன் என்னும் இத்தொடர் அழிவில்லாப் பொருள்களின் கூட்டத்திற்கு இடமாக உடையவன் என்றும், அழிவில்லாப் பொருள்களின் கூட்டத்தை இடமாக உள்ளவன் என்றும் இருபொருள் கொள்ளுதற்குரியது. அழிவில்லாப் பொருள்களின் கூட்டத்திற்கு இடமாக உள்ளவன் என்பது, இறைவன் எல்லாப் பொருள்களையும் தனக்குள் அடக்கிக் கொண்டு எங்கும் நிறைந்துள்ள நிலைமையையுணர்த்தும். இப்பொருளால் அவனுடைய பரத்துவம் வெளியாம். அழிவில்லாப் பொருள்களை இடமாகவுடையவன் என்பது, இறைவன் எல்லாப் பொருள்கட்கும் அந்தர்யாமியாக உள்ள நிலையை உணர்த்துவதோடு அவனுடைய சௌலப்ய குணத்தையும் காட்டும். ஆக, பரம்பொருளுக்குரிய இலக்கணம் இப்பெயரில் அமைந்திருத்தல் காண்க.

மற்றும், கருமம், ஞானம், பக்தி, பிரபத்தி என்னும் நான்கனுள் பிரபத்தி நெறியே இறைவனையடைதற்குரிய சிறந்த நெறி என்பதும், இறைவனை அடையும்போது பெரிய பிராட்டியார் புருஷகாரமாக அடைய வேண்டும் என்பதும், மோட்சம் என்பது ஒரு தனித்த உலக விசேடமே என்பதும், அவ்வுலகத்தில், களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்பு மூப்பு இறப்பு அற்று, ஒளி கொண்ட சோதி வடிவாய், நித்திய முக்தர்களோடு இறைவனுக்கு அவனுகந்த அடிமையைச் செய்துகொண்டிருத்தலே பேறு என்பதும் அப்பெரியோர்கள் கொண்ட முடிபொருள்களாகும். பு. ரா. பு.

ஆழ்வார்திருநகரி தென்கரை என்றும் பெயர் பெறும். அதன் காரணம் ஊர் தாமிரபருணி ஆற்றின் தென்கரையிலிருப்பதேயாம். பாளையங்கோட்டையிலிருந்து திருச்செந்தூர் போகும் சாலையில் உள்ளது. இங்குள்ள கோவில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெரிய கோவில்களுள் ஒன்றாகும். கோவிலின் இடது பக்க மண்டபத்தில் ஒரே கல்லில் 48 மெல்லிய தூண்களைச் செதுக்கிய பெருந்தூண்கள் உள. நம்மாழ்வார். தோன்றிய ஊர். அவர் பிறப்பதற்குமுன் திருநகரி என்பதே ஊரின் பெயர். இங்கு நடைபெறும் வைகாசித் திருவிழா மிகப்பெரியது. அப்பொழுது மாட்டுச் சந்தையும் நடைபெறும். மக். 6.654 (1951).

ஆழ்வாரப்பப் பிள்ளை (1839-1924): இவர் முருகதாச சுவாமிகள் எனவும் பெறுவர். திருநெல்வேலி மாவட்டத்தினர். ரெவினியூ இன்ஸ்பெக்டராயிருந்தவர். சைவசிந்தாந்தி. வள்ளியூர்த் தலப்புராணம், வள்ளியூர்க் காவடி வைபவம் (பலவகைச் சந்தங்களால் ஆகியது) என்னும் நூல்களையும் கிருகஸ்த தர்மம் என்னும் கட்டுரை நூலையும் எழுதியிருக்கிறார். அளவற்ற கீர்த்தனைகளையும் இயற்றி யிருக்கிறார்.

ஆழங்காணல் (Sounding) என்பது கடலின் ஆழத்தை அளத்தல் என இங்குப் பொருள்படும். கடல் ஆழங்காணும் முறைகள் நெடுங்காலந்தொட்டு மாலுமிகளால் கையாளப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் கடல் தந்தியனுப்பும் முறை தோன்றிய பிறகுதான் கடலின் அடித்தரையிலுள்ள மேடுபள்ளங்களை அறிய முடிந்தது. குறைவான ஆழங்களை அளக்க ஒரு சணல் கயிற்றின் முனையில் காரிய உருளையொன்றைக் கட்டி அதைக் கடலுக்குள் விடுவார்கள். உருளை தரையை அடைந்தவுடன் கீழேசென்றிருக்கும் கயிற்றின் நீளத்தை அளவிட்டுக் கடலின் ஆழத்தை அறியலாம். தற்காலத்தில் கயிற்றிற்குப் பதில் கம்பியைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆழங்காணும் கருவிகள் பலவகைப்படும். அவைகளுள் பெரிதும் உபயோகத்திலிருப்பது லூகாஸ் (Lucas) கருவியாகும். இதில் 36,000 அடி நீளமுள்ள கம்பி ஓர் உருளையின்மேல் சுற்றப்பட்டிருக்கும். உருளையைச் சுழற்றிக் கம்பியின் முனையிலுள்ள எடையைக் கீழே அனுப்பலாம். கடலடியை அடைந்தவுடன் ஒரு தடை தானாகவே இயங்கிக் கம்பிச் சுருளை நிறுத்தும். உருளையிலிருக்கும் கம்பி ஒரு சக்கரத்தின்மேல் செல்லுமாறு அமைந்திருக்கும். கம்பி எவ்வளவு ஆழம் விடப்பட்டிருக்கிறது என்பதை இச்சக்கரத்திலுள்ள அளவையிலிருந்து அறியலாம்.

சுமார் 6,000 அடியைவிட அதிகமான ஆழங்களை அளவிட, பெய்லி தண்டு (Baille Rod) என்ற கருவி பயனாகிறது. இது இரண்டடி நீளமுள்ள ஒரு குழாய். இதற்குள் ஓர் எஃகுத்தடி மேலுங்கீழும் நகருமாறு அமைந்திருக்கும் குழாயின் அடியில் ஒரு வால்வு இருக்கும். சுமார் 25 ராத்தல் நிறையுள்ள இரு எடைகள் இதன் முனைகளில் செலுத்தப்பட்டிருக்கும். இவை கம்பியிலிருந்து தொங்கவிடப்படும். இவை தரையை அடைந்தவுடன் கம்பி தளரும். குழாய்க்குள் இருக்கும் தண்டு நகர்ந்து மேலே செல்லும். குழாய்க்குள் அடித்தரையிலுள்ள மண் நிரம்பும். அதை மேலே இழுக்கும் போது வால்வுகள் மூடிக்கொண்டு இம்மண் வெளியே செல்லாது தடுக்கும். ஆகையால் குழாய் தரையை அடைந்ததா என்றும், தரையின் தன்மை எத்தகையது என்றும் அறிய இது உதவும். கம்பி கீழே இறங்கும்