பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/609

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதயம்

558

இதயம்

செல்லும் தமனி குறுகி யிருப்பதால் இதயத்திலிருந்து தூய இரத்தம் நுரையீரலுக்குப் போதுமான அளவு போவதில்லை. அப்போது குறுகிய பாகத்தைத் துண்டித்து விட்டுப் பொருத்தித் தைத்துத் தூய இரத்தம் போகுமாறு செய்கிறார்கள். 3. ஆஞ்சனாபெக்டரிஸ் என்னும் மார்புவலி நோய் ஏற்பட்டால், இதயத்தின் தசைகளுக்கு இரத்தம் போவது சிறிது சிறிதாகக் குறைந்து போகும். இந்த நோயுள்ளவருக்கு முதுகு பக்கம் பரிவு நரம்பு அணுத்திரளின் மேற்பாகத்தை வெட்டும் ரணசிகிச்சை செய்து துன்ப நீக்கம் தரலாம். 4. இதயம் பழுதாய்ப் போனால் செயற்கை இதயம் செய்து, அகத்தே வைத்து, இதய வேலையைச் செய்யுமாறு செய்துவிட்டு, நோயாளியின் இதயத்துக்கு ஓய்வு கொடுக்கவும் பழுதுபார்க்கவும் மேனாடுகளில் வகை கண்டுள்ளனர். இவ்வகைச் சிகிச்சை இந்தியாவில் இன்னும் தொடக்க நிலையிலேயே இருந்து வருகிறது. சீ. ரா.

இதயத் தமனி அடைப்பு (Coronary Thrombosis) : இந்த நோயால் இதயத்துக்கு இரத்தம் கொண்டு செல்லும் தமனியில் இரத்தம் ஓடாமல் இறுகிக் கட்டியாகி வழி அடைத்துப் போகிறது. அதனால் இதயத் தசைக்கு இரத்த ஓட்டமில்லாமல் போவதால், இரத்தம் பாய வேண்டிய இடங்களில் தசைகள் அழிந்து விடுகின்றன. ஆகவே நாளடைவில் அழிந்த தசைப் பகுதிகள் மறைந்து, இதயம் சரியாக வேலை செய்ய முடியாமல் பலவீனப்பட்டுப் போய்விடுகிறது. இந்த நோய் முக்கியமாக நீரிழிவு உள்ளவர்களுக்கும், இரத்த அழுத்தம் அதிகமாயுள்ளவர்களுக்கும் ஏற்படும். சாதாரணமாக நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே இது ஏற்படும். ஆனால் சில சமயங்களில் சிறு வயதிலும் ஏற்படலாம். அப்படி ஏற்படுமாயின் சிறு வயதில் ஓர் இரத்தக் குழாய்க்கும் மற்றோர் இரத்தக் குழாய்க்கும் இணைப்புக் குறைவாயிருப்பதால் நோயாளி பிழைப்பது அரிது. வயது முதிர முதிர இரத்தக் குழாய்களில் கிளைகள் உண்டாகி இணைப்பு மிகுவதால், ஓர் இரத்தக் குழாய் அடைப்பட்ட போதிலும் மற்றோர் இரத்தக் குழாயிலிருந்து இரத்தம் வேண்டிய இடங்களுக்குப் போய்க் கொண்டிருக்கும். ஆகவே, நோயினால் கேடு ஏற்பட்டாலும் மரணம் சீக்கிரமாக ஏற்படுவதில்லை. இந்த நோய் ஒருமுறை கண்டால் மேலும் மேலும் காணலாம்.

நோய்க் குறிகள்: இந்த நோய் கண்டவுடனே அநேகமாக மார்பிலும், இதயத்திற்கு முன்பக்கத்திலும் வலி ஏற்படும்; பொறுக்க முடியாத வலி இருக்கும். ஆனாலும் சிலருக்கு அதிக வலி உண்டாவதில்லை. மிகச் சிலருக்கு வலியே இல்லாமலும் இருக்கலாம். மார்பில் வேதனை அநேகமாக இருந்தாலும், சிலருக்கு இது வலப்பக்கத்திலேயே காணலாம். மற்றும் சிலருக்கு இடக்கையிலே தோளிலிருந்து சிறுவிரல் வரையில் வலி உண்டாகலாம். சிலருக்கு வலக்கையில் வலி இருக்கலாம். சிலருக்கு முதுகிலே வலி இருக்கலாம். சிலருக்கு வயிற்றின் மேல்பாகத்தில் வலி இருக்கலாம். இப்படி வயிற்றின் மேல்பாகத்தில் வலி இருக்கும்போது, இதைக் குடல் சம்பந்தமான நோய் என்று தவறாக எண்ணி ஆப்பரேஷன் செய்ய நேரலாம். அதிலும் வயிற்றில் வலி ஏற்பட்டு, வாந்தியும் குடல் புரட்டலும் இருந்துகொண்டிருந்தால் இம்மாதிரித் தவறு ஏற்பட்டு விடுகிறது. இந்த வலியைப் பொறுக்க முடியாமல் நோயாளி படுக்கையிலே சிறிது நேரங்கூட அமைதியாக இல்லாமல் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்குப் புரண்டு கொண்டே இருப்பான். அவன் இருக்கும் நிலையை அதிர்ச்சிநிலை (State of Shock) என்று சொல்லுவார்கள். அதனுடன் நெற்றியிலும் வியர்வை காணப்படும். நாடியும் பலம் குன்றியிருக்கும். இந்த நிலையில் இரத்தம், இதயம், நுரையீரல், மூளை ஆகிய முக்கியமான அவயவங்களுக்கு மட்டுமே போகிறது. மற்ற அவயவங்களுக்கு இரத்தம் மிகக் குறைவாகப் போகிறது. ஆகவே முக்கியமான அவயவங்கள் பாதுகாக்கப்பட்டு, மற்ற அவயவங்களுக்கு இரத்த ஓட்டம் மிகவும் குறைந்து விடுகிறது. அவற்றில் இரத்த ஓட்டமே இராது எனலாம். நாடியின் துடிப்பு மிகுதியாகி ஒரு நிமிஷத்திற்குச் சாதாரணமாக இருப்பதுபோல் எழுபத்திரண்டு இல்லாமல் நூற்றுக்கு மேற்பட்டே இருக்கும்; வாந்தியும் எடுக்கலாம்; புளி ஏப்பமும் ஏற்படலாம். அதோடு இருபத்து நான்கு மணி நேரத்தில் இலேசான சுரமும் தோன்றலாம். அதே சமயத்தில் நுரையீரல்களில் சிறிது கோழை ஏற்பட்டுக் கபவாத சுரம்போல் காணலாம். மூச்சு விடுவது சிரமமாக இருக்கும். இந்தச் சிரமம் நோய் குணமாகும்வரையில் இருந்துகொண்டே இருக்கும்.

நோய்க் கூறு: திடீரென்று மார்புநோய் கண்டு, அமைதியில்லாமல் இப்படியும் அப்படியும் புரண்டு கொண்டு இருந்தால் இதயத் தமனி அடைப்பு என்று கருதப்படும். அதிலும் இரத்த அழுத்தம் குறைந்து கொண்டே வந்தாலும், வலி கண்டு இருபத்து நான்கு மணி நேரத்திற்கெல்லாம் இலேசாகச் சுரம் கண்டாலும், இரத்த வெள்ளணுக்கள் அதிகரித்தாலும், அதிர்ச்சி ஏற்பட்டாலும் இந் நோய் என்றே கருத வேண்டும்.

இந்த நோயை வயிற்று நோய் என்று தவறாக எண்ணக்கூடும். ஆனால் வயிற்று நோயால் வலியும் வாந்தியும் ஏற்பட்டாலும்கூட, நாடி குறைவதில்லை. இரத்த அழுத்தம் குறைந்து வருவதில்லை. வயிற்றுநோய் என்றால் இரைப்பையில் அல்லது குடலில் புண் ஏற்பட்டுத் துவாரம் உண்டாகி, வயிற்றில் காற்றுச் சேர்வதால் ஈரல் இருக்குமிடத்தைத் தட்டிப் பார்க்கும்பொழுது, ஈரல் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாமற் போய்விடும். அந்தமாதிரி இந்த நோயினால் ஏற்படுவதில்லை. வயிற்று நோயினால் வயிற்றின் மேலிருக்கும் தசைகள் பலகை போல் கெட்டியாகும். அம்மாதிரியும் இந்நோயினால் ஆவதில்லை. நுரை யீரல்களில் ஏற்படும் அறிகுறிகளைக் கொண்டு நோயைக் கண்டுபிடித்து விடலாம்.

இந் நோயைக் கண்டு பிடிப்பதற்கு முக்கியமாக மின்சார இதயங் காட்டி (Electro-cardiograph) என்ற கருவியால் பரீட்சை செய்து, அது தோற்றுவிக்கும் சில மாறுதல்களைக் கண்டு இந் நோயை அறிய இயலும்.

சிகிச்சை: முக்கியமாக நோயாளியைப் படுக்கவே வைத்திருக்க வேண்டும். எவ்வளவு விரைவில் வலியை அடக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் அடக்க வேண்டும். அப்படி வலியை அடக்கிவிட்டால் அதிர்ச்சி ஏற்படாது. அதிர்ச்சி ஏற்படாவிட்டால் மரணமும் ஏற்படாது. இதற்காக மார்பியா ஊசி போட வேண்டும். முதலில் இருபத்து நான்கு மணி வரையில் பார்லி நீர் அல்லது குளூக்கோஸ் நீர் கொடுக்கவேண்டும். ஒரு வாரம் கழிந்த பின்னர் வேண்டுமானால் சோறு முதலிய உணவு கொடுக்கலாம். சீரணசக்தி தரும் மருந்துகளும் கொடுக்கலாம். மூச்சை உட்கொள்ள உதவியாக ஆக்சிஜனைக் கொடுக்கலாம். மலம் போகாவிட்டால் முதல் நாற்பத்தெட்டு மணி நேரம்வரை ஒன்றும் செய்யக்கூடாது. நாற்பத்தெட்டு மணி நேரம்