பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/616

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியக் கலையும் மதமும்

565

இந்தியக் கலையும் மதமும்


ஹுமாயூன், அக்பர், ஜகாங்கீர் ஆகிய மூன்று மொகலாய மன்னர்களும் ஓவியக் கலைக்கு மிகுந்த ஊக்கமளித்தனர். ஹுமாயூன் பாரசீகத்திலிருந்து ஓவியர்களைக் கொணர்ந்தார். அதனால் அம் முறை பரவலாயிற்று. மொகலாயர் காலத்துக்கு முன்னதாக ஓவியக்கலை இந்தியாவில் செழித்து வளர்ந்து வந்திருந்த போதிலும், அக் காலத்து ஓவியங்களுள் அஜந்தாச் சுவர் ஓவியங்களும், அஜந்தாவுக்கு வடக்கே 300 மைல் தொலைவிலுள்ள பாக் என்னுமிடத்திலுள்ள ஆறாம் நூற்றாண்டுச் சுவர் ஓவியங்களும், வங்காளம், நேபாளம், குஜராத் ஆகிய இடங்களிலுள்ள புத்த ஓவியங்களும், புதுக்கோட்டை அருகிலுள்ள சிற்றண்ணல்வாயில் சுவர் ஓவியங்களும் மட்டுமே எஞ்சியுள்ளன.

அக்பரிடம் பல ஓவியர்களும் வேலை பார்த்தனர். அவர்களுள் பெரும்பாலோர் இந்துக்கள். இவர்கள் அக் காலத்துப் பெருமக்களையும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் சித்திரித்தார்கள். ராஜபுத்திர ஓவியக்காரர்கள் பண்டைய சுவர் ஓவிய முறையைப் பின்பற்றிக் கதைகளையும் புராணங்களையும் சித்திரித்தார்கள். மொகலாய ஓவியமுறை ஒளரங்கசீப் காலத்தில் நலிந்தது. ஆனால் ராஜபுத்திர ஓவிய முறை 18, 19ஆம் நூற்றாண்டுகளிலும் நடைபெற்று வந்தது. அதன் நடுநிலை ஜெயப்பூராக இருந்தது. பிற்காலத்து ராஜபுத்திர ஓவியத்தில் சிறந்தவை பஞ்சாபிலுள்ள பகாரி என்னும் ஊரின் பெயரால் வழங்கும் கலையில் காணலாம். பஞ்சாபிலிருந்த சீக்கிய மன்னர்கள் மக்கள் உருவ ஓவியத்தை ஆதரித்த போதிலும், காங்கிரா ஓவிய முறை 19ஆம் நூற்றாண்டில் நலிவுற்றது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேனாட்டுக் கலைகளின் வரவால் இந்தியக் கலைகளின் தனிச் சிறப்பியல்புகள் மறையத் தொடங்கின. ஆயினும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பண்டை இந்திய முறையைப் புதுப்பிக்கும் இயக்கம் எழுந்தது. இதைத் தோற்றுவித்தவர்களுள் தலையாயவர் தாகூர் குடும்பத்தினர். டாக்டர் அபனேந்திரநாத தாகூர் அஜந்தா ஓவியங்களைப் பின்பற்றி வரைந்தவை மிகுந்த எழிலுடையன. இதே காலத்தில் பம்பாயில் எழுந்த இயக்கம் ஐரோப்பிய முறையை இந்திய முறையுடன் இணைக்க முயன்றது.

19ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் சிறந்த சிற்பம் எதுவும் உண்டாக்கப்படவில்லை. தென் இந்தியா பண்டை முறையை வழுவாது காத்து வருகிறது. இப்பொழுதும் முன்போல் செப்பு விக்கிரகங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதுபோல் கற் சிற்பிகளும் வேலை செய்து வருகிறார்கள். (இந்திய ஓவியம், இந்தியச் சிற்பம், இந்திய இசை, இந்திய நாட்டியம் முதலியவற்றைப்பற்றி ஓவியம், சிற்பம், இசை, நாட்டியம் முதலிய கட்டுரைகளைப் பார்க்க).


இந்தியக் கலையும் மதமும்: இந்தியக் கலை முதலிலிருந்தே இந்து மதத்தொடர்புடனேயே வளர்ந்தது. அத்தொடர்பினாலே தானும் மேன்மைப்பட்டு, மத வழிப்பாட்டையும் வளர்த்து வந்ததாகப் புலனாகிறது. இந்திய இசையின் முதல் தோற்றத்தைச் சாமவேதத்தில் காண்கிறோம். வேள்விகளில் சாமகானம் நிகழ்ந்தது. சாமகானங்கள் ஆன்ம தரிசனத்திற்கு உதவும் யோக உபாயங்களாக உபநிடதங்களில் காணப்படுகின்றன. அறநூல் போதித்தவருள் மனுவிற்கு அடுத்தபடியான யாஞ்ஞவல்கியர், “பாடுவதும், வீணை வாசிப்பதும், சுருதி தாளப் பயிற்சியும் எளிதாக வீடு பெற வழியாகும்” என்கிறார். இதையே பல கிருதிகளில் தியாகராஜரும் விளக்கினார். இசைக் கலையின் முதல் நூலாகக் கருதப்படுவதும் பரதமுனிவர் எழுதியதுமான நாட்டிய சாஸ்திரம் ஓர் உபவேதமாகக் கருதப்படுகிறது. பாட்டினால் போற்றப்படும் பொருளும் பரம்பொருளே என்று உபநிடதமும் சங்கரருடைய பிரம சூத்திர பாஷியமும் (I. 1-20) சொல்லுகின்றன.

இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் முதன் முதலில் நமக்குக் கிடைத்துள்ள ரிக்வேதப் பாக்கள் அனைத்தும் கடவுள் வாழ்த்து வடிவமாகவே இருக்கின்றன, பிருகதாரண்யக உபநிடதத்தில் இலக்கியம் முழுதுமே, அறிவு அனைத்துமே, பெரும்பூதமான பரப்பிரமத்தினிடமிருந்தே அதன் உயிர்ப்பாய் எழுந்தன எனக் காணப்படுகிறது. இராமாயணமும் நன்னெறியை நடத்திக் காட்ட அவதரித்த கடவுளின் புகழையே பாடுகிறது. பின்பு வளர்ந்த காப்பிய நாடகக் கலைகள் முழுதும் பகவத் அவதாரங்களின் வரலாறுகளையோ, பகவானின் அமிசத்தை மிகையாகப் பெற்ற சான்றோர், ராஜரிஷிகள் முதலிய பெரியோரின் சரிதையையோ மக்களுக்கு எடுத்துரைக்கின்றன. வேறு இலக்கிய நூல்களும் மக்களுக்கு நல்லறிவை அறம் பொருள் இன்பம் வீடு என்ற துறைகளில் போதிக்கவே ஏற்பட்டன வென்றும், இந் நோக்கிற்குப் புறம்பான எழுத்தெல்லாம் அசத்துக்காவியம் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆகம புராணங்களை எடுத்துக்கொண்டால், சைவ ஆகமங்களில் சொல்லும் பொருளும் சிவனும் உமையும் ஆகும் என்றும், சீரிய இலக்கியம் அர்த்தநாரி யுருவமே யாகும் என்றும் சொல்லப்படுகின்றன. இதை ஆதரவாகக் கொண்டே காளிதாசன் இரகுவமிச காப்பியத்தைத் துவக்கும்போது இக்கொள்கையை முதல் சுலோகத்திலேயே சொன்னான். விஷ்ணு புராணத்தில் “காவியம், கீதங்கள், அனைத்தும் சப்த மூர்த்தியாயுள்ள விஷ்ணுவின் அமிசங்களே“ எனக் காணப்படுகிறது.

சிலை, கட்டடம் முதலிய வேலைப்பாடுகளின் தொடக்கத்தை நாம் வேதகாலத்தில் யாகங்களுக்காகக் கட்டிய வேதிகளிலும் குண்டங்களிலும் காணலாம். இதற்கெனவே எழுந்த கல்ப சூத்திரங்களிலேயே இந்தியச் சிற்ப, கணிதங்களின் தோற்றம் காணப் பெறும். பிற்காலத்தில் இந்தியச் சிற்பக் கலையின் உயர்வு கோயில்களிலும் மூர்த்திகளின் நிருமாணத்திலும் தெரிகிறது. சிற்ப நூல்கள் பெரும்பாலும் புராண, ஆகம, தந்திர நூல்களின் பகுதிகளாக இருக்கின்றன. ஒவ்வொரு மூர்த்திக்கும் மந்திர சாஸ்திரத்தை அனுசரித்த தியான சுலோகம் உண்டு. இதை மனத்தில் வாங்கி, அதன் நினைவிலேயே ஆழ்ந்து, சிற்பி பிம்பத்தை ஆக்குவதால் இவன் செய்யும் கலைக்கும் யோகத்திற்கும் வேறுபாடில்லை. சிற்பம் என்ற சொல், “சீலஸமாதௌ“ என்ற தாதுவிலிருந்து வந்ததாக வியாகரண சாஸ்திரத்தில் விளக்கப்பட்டிருப்பதால், மனத்தைச் சமாதி நிலையில் அழுத்தச் சிற்பம் தனித்ததோர் ஆற்றலைப் பெற்றிருக்கிறது என்பது தெரிகிறது.

பொதுவாகக் கலைகள் அழகு என்ற தத்துவத்தை வெவ்வேறு உருவ வாயிலாகத் தருகின்றன. இவ்வழகு என்ற தத்துவம் 'நன்மை' என்ற தத்துவத்திலிருந்தும் புண்ணியம் வினையிலிருந்தும் பிரிக்கமுடியாதென்பதும், அழகு பாவத்துடன் சேராதென்பதும் ரிக்வேத மொழிகளிலிருந்து இந்து இலக்கியம் முழுவதிலும் காணப்படும் உண்மையாகும். அழிந்து போவது எப்படி நன்றாயிருக்க முடியும் ? குறையுள்ளது எப்படி நன்றாயிருக்க முடியும்? ஆகையால், பேரழகு என்பது