பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/639

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

587

இந்தியா

வறண்ட கடற்கரை மணற் பகுதிகளில் சவுக்கு (சுயரீனா எக்விசெட்டிபோலியா) அதிகமாகப் பயிரிடப்படுகின்றது. ஆனால் இயற்கையாக ஹைட்ரோ பில்லாக்ஸ் மாரிட்டைமா, அடப்பங்கொடி (ஐப்பொ மீயா பைலோபா), சீசாமம் ப்ராஸ்ட்ரேட்டம், இராவணன் மீசைப் புல் (ஸ்பைனி பெக்ஸ் ஸ்குவாரோசஸ்), ஆர்னோட்டியானம் டாப்னோபில்லம் முதலிய பூண்டுகளும் குற்று மரங்களும் நிறைய உள்ளன.

3. கிழக்குக் கடற்கரைப் புதர்க் காடுகள்: கிழக்குக் கடற்கரை உலர்ந்த பகுதி. இதற்கு வடகிழக்குப் பருவக் காற்றுத்தான் மழை தருகிறது. கிழக்கு மலைத்தொடர் கோதாவரியிலிருந்து கன்னியாகுமரி வரை பரவியுள்ளது. இந்தத் தொடர் தாழ்வாகவும், நடுநடுவே நிரம்பத் தொடர்பற்றும் உள்ளது. ஆகையினால், 3,000 அடிக்கு மேற்பட்டுள்ள பகுதிகளில் மட்டும் அடர்த்தியான இலையுதிர் காடுகள் உள்ளன. மற்ற இடங்களிலெல்லாம் அடர்த்தியில்லாத புதர்க்காடுகள் காணப்படுகின்றன.

மொத்தமாகத் தாவர வளத்தைப் பற்றி ஆராய்கையில் கருநாடகப் பகுதியிலுள்ள மரவடையில் இனவளமுமில்லை; வேறுபாடுகளுமில்லை. ஏனென்றால், இங்கு வடகிழக்குப் பருவக்காற்றுக் காலங்களைத் தவிர மற்றக் காலங்கள் எல்லாம் உலர்ந்து வறண்டனவாகவே உள்ளன. ஆகையினால் ஈரப்பதம் மிகுந்த இடங்களில் வளரும் தாவரங்கள் இங்குக் கொஞ்சமும் கிடையா. உயரமான மலைச் சரிவுகளில் தவிர மற்றெங்கும் காடுகள் இல்லை. சமவெளிகளில் தொரட்டி, ஆதொண்டை, வீழி முதலிய கப்பாரிடேசீ, இலந்தை, சூரை முதலிய ராம்னேசீ, காரை போன்ற முட்களுள்ள ரூபியேசீ முதலிய குடும்பங்களின் இனங்களும், அழிஞ்சில் (அலான்ஜியம்), அசீமா, களா (காரிஸ்ஸா), எருக்கு, எரிஷியா பக்சிபுளோரா, குமிழ் (மிலைனா), சால்வடோரா, ஆன்டி டெஸ்மா, பைசோனியா முதலிய குற்றுத் தாவரங்களும் நிறைய உள்ளன. பனை வகைகளுள் பிரம்பு (கலாமஸ்), ஈச்சமரம் (பீனிக்ஸ்) ஆகியவை தாமே வளர்கின்றன. தென்னை (கோக்கோஸ்), பனை (பொராசஸ்), பாக்கு (அரீக்கா) பயிரிடப்படுகின்றன.

கருநாடகப் பகுதியிலுள்ள மலைகளில் காணப்படும் தாவரங்களில் சிறப்பாகக் குறிக்கத்தக்க பண்புடையது யாதும் இல்லை. இவை மிகத் தாழ்ந்த குன்றுகளேயாதலால் இங்குத் தட்பவெப்ப நிலை சமவெளிகளைவிட அதிகமாக மாறுதல் இல்லாமல் இருக்கின்றது. ஆதலால் தாவர வளர்ச்சியும் அதிகமாக மாறுதலடையவில்லை. இவை பெரும்பாலும் புல்லும் மூங்கிற் புதரும் போர்த்துள்ளன. மலை இடுக்குக்களிலே மட்டும் இலையுதிர் மரக் காட்டைப் போன்ற சிறு காடுகள் உண்டு.

மேற்குக் கடற்கரைப் பகுதியைப் போலவே, கிழக்குக் கடற்கரையிலுள்ள ஆறுகளின் கழிமுகங்களிலும், கன்னியாகுமரியின் அருகிலுள்ள பவளத் தீவுகளிலும் மாங்குரோவ் சதுப்புத் தாவரங்களைக் காணலாம்.

4. சிந்து -கங்கைத் தாவரங்கள்: இவை இந்த இரண்டுபெரு நதிகளின் வடிநிலங்களிலுள்ள மரவடையாகும். சிந்துப் பள்ளத்தாக்கு, சிந்துவிலிருந்து இமயம் வரைக்கும், ஆப்கானிஸ்தானத்திலிருந்து கங்கைச் சமவெளியின் எல்லை வரைக்கும் உள்ள பகுதி. இதில் பெரும்பாலும் பஞ்சாப் அடங்கும். சிலசில இடங்களில் சிந்துவின் உபாதிகளுக்கு இடையிலுள்ள 1,000 அடி உயரத்திற்கு மேற்படாத மலைத்தொடர்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் தட்பவெப்ப நிலை வறண்டதாகவே உள்ளது.

பஞ்சாபில் தாவர வளம் தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு மாறுகிறது. இந்த மாகாணத்தின் தெற்கே, மழையின்மையால் அங்குச் சிந்துவில் காணப்படும் தாவரங்களே உள்ளன. வடக்கே போகப்போக வெப்ப நிலை குறைவதனால், அங்கே உள்ள தாவரங்கள் மத்தியதரைக் கடற் பிரதேசத்திற்குரிய தாவரங்களைப் போல் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தானத்தில் இதை நன்றாகக் காணலாம். இவைகளில் முக்கியமானவை குளிர்காலத்தில் பூக்கும் ஒருபருவத் தாவரங்கள். உதாரணம் : கோல்டுபக்கியா லீவிகேட்டா, பிரான்கீனியா ஹீலியோஸ்கோப்பியா, கார்த்தமஸ் ஆக்சியக்காந்தா என்னும் குசும்பாச் சாதி, வெரோனிக்கா அக்ரெஸ்டிஸ், போவா அன்னுவா. நதிகளின் ஓரங்களில் கப்பாரிஸ் அபில்லா, கருவேல், வெள்வேல் (அக்கேசியா லூக்கோபிளியா), வன்னி (பிராசாப்பிஸ் ஸ்பைசிஜெரா), சிசிபஸ் லோட்டஸ், சால்வடோரா இண்டிகா,காக்குலஸ் இனங்கள், கோடைச் சவுக்கு (தாமாரிக்ஸ் காலிக்கா) முதலிய குறுமரக் காடுகள் உள்ளன.

இமயமலையின் அருகே தட்பவெப்ப நிலை ஈரமாக இருக்கிறது. ஆகையினால் தாவரங்களும் மாறுபடுகின்றன. பாலைத் தாவரங்கள் மறைந்து கங்கைச் சமவெளியின் தாவரங்கள் காண்கின்றன. அப்படியிருந்தபோதிலும், ஜீலம் நதிக்கு மேற்கில் தாவரங்கள் மிகவும் வேறுபட்டுள்ளன. அக்கேசியா மாடெஸ்ட்டா, முள்ளுள்ள ஒருவகை செலாஸ்டிரஸ் மரங்கள் உள்ள காடுகள் நிரம்பியிருக்கின்றன. குன்றுகளின் தாழ்ந்த பகுதிகளில் ரஜியா ஸ்டிரிக்டா தோதோனியா, ரெப்டோனியா, டெல்பீனியம் மரங்களும், காரியோபில் லேசீ, கிராமினீ, சிக்கோர், லேபியேட்டீ, போராஜினி முதலியகுடும்ப இனங்களும்நிறையக்காணப்படுகின்றன.

கங்கைச் சமவெளியின் தாவரம் பூமியின் ஈரத்திற்கும், மழையின் அளவிற்கும் தகுந்தாற்போல் மாறுபாடடைகிறது. மழை ஆண்டுக்கு 20-50 அங்குலம் வரை வேறுபடும். மலையின் அடிவாரத்தைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் புதர்க் காடுகள் இருக்கின்றன. அப்புதர்க்காடுகளில் புரசு பிளாகோர்ஷியா செப்பியேரியா, கப்பாரிஸ் செப்பியேரியா, இலந்தை சூரை (சிசிபஸ் ஈனோபிலியா, ஆடாதோடை, பெருங்களா (காரிஸ்ஸா எடூலிஸ்) முதலிய குற்று மரங்கள் நிறைய உள்ளன. போகப் போகத் தட்பவெப்ப நிலை வறட்சியாக இருப்பதால், தாவர வளமும் பஞ்சாபிலுள்ளது போல் ஆகிறது. இங்குச் சாதாரணமாக டெக்கோமா அண்டுலேட்டா. பெர்த்கிளாட்டியா லான்சியோலேட்டா மரங்கள் வளர்கின்றன.

இமயமலை அடிவாரத்தில் எப்பொழுதும் நிரம்ப அகலமான காடு இருக்கின்றது. இதைப்பற்றி மேலேசொல்லியிருக்கிறது.

5. விந்தியத் தாவரங்கள்: விந்திய மலைகளில் இணையான இரண்டு மவைத்தொடர்கள் மத்தியில் 4,500 அடி உயரம் உள்ள உமர்க்கந்து என்ற மேட்டுச் சமவெளியில் இணைக்கப்பட்டிருக்கின்றன. மற்ற இடங்களில் மேற்கே பாயும் நருமதை, கிழக்கே செல்லும் சோணை ஆறுகளால் இந்த மலைத்தொடர்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. தென்பகுதி உயரமாக இருந்த போதிலும் 3,000 அடிக்கு மேல் உயரம் இல்லை.

மலைச்சரிவுகளில் உள்ள காடுகள் மிக அடர்ந்தவை. ஆயினும் மேற்குக் கடற்கரைக் காடுகளைப் போலச் செழிப்பாகவோ, நிறைய வேறுபாடுகள் உடையனவாகவோ இல்லை. இங்கு இஞ்சிக் குடும்ப இனங்கள், அரெங்கா சக்கரிபெரா, கூந்தற்பனை (காரியோட்டா