பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/646

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

594

இந்தியா

இவைகளினால் உண்டான வெண்ணிறப் பாறைகளை வெகு சாதாரணமாகக் காணலாம். இப்பாறைக் கற்கள் வீடுகட்டவும் பயன்படுகின்றன. இன்னொருவகை விசிறி போன்று விரிந்து, தம்முள்ளே ஒருவித நிறக் குச்சிகளை உண்டாக்கி, அவற்றின் உதவியினால் நிமிர்ந்துவளர்கின்றன. மற்றொரு வகை, சிவந்த குச்சிகளை உண்டாக்குகின்றன. இவைகளே நற்பவளம் என வழங்குகின்றன.

புழுக்கள்: புழுக்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று உடம்பு வளையம் வளையமாகக் கட்டங்கட்டமாக (Segmented) உடையது. மற்றொன்று இக்கட்டங்கள் இல்லாதது. பின்கூறப்பட்ட வகைகளில் பல ஒட்டுண்ணிகளாக இருக்கின்றன. மனிதனது குடலிலுள்ள நாகப்பூச்சி, கீரிப்பூச்சி, நாடாப்பூச்சி, கொக்கிப்புழு, இரத்தத்திலுள்ள யானைக்கால் முதலிய நோய் உண்டாக்குகின்ற பூச்சிகள், தசையில் வளர்கிற நரம்புச் சிலந்தி (Guinea-worm) முதலியவை இவ்வகையில் அடங்கும். சில நீரில் சுதந்திரமாகத் த்னித்து வாழ்கின்றன. வளையங்கள் கட்டங்கட்டமாக அமைந்துள்ள புழுக்களிலும் பல வகைகள் இருக்கின்றன. பெரும்பான்மையானவை கடலில் மணலிலும், கற்பாறைகளின் இடுக்கிலும், இவைபோன்ற இடங்களிலும் வாழ்கின்றன. கடற்கரை யோரங்களில் நீர் தங்கியிருக்கும் குட்டைகளில் பலூன் போன்ற வெண்ணிறமான பொருள்கள் மிதந்து இருப்பதைக் காணலாம். ஒவ்வொரு பலூனும் கீழே வேர்போலச் சென்று மணலில் புதைந்திருக்கும். இவை ஒருவகைக் கடல் புழுவின் முட்டைக் கூண்டுகள். முட்டைகளைச் சிறு அணுக்களாக அப் பலூனின் உள்ளே காணலாம். அட்டைகளும் வளையப்புழுத்தொகுதியைச்சேர்ந்தவை.

சங்குத்தொகுதி : நத்தை, மட்டி, பலகறை, சங்கு முதலியவை இவ்வினத்தைச் சேர்ந்தவை. இவைகள் கூட்டுக்குள்ளே வாழ்கின்றன. இக்கூடுகள், மட்டி முதலிய சாதிகளில் இரண்டு சிறு முறங்கள் சேர்ந்தவை போன்றிருக்கும். மற்றச் சாதிகளில் சங்கு, பலகறை போன்றிருக்கும். 'கடல்நுரை' சங்குத் தொகுதியைச் சேர்ந்த கணவாய் என்னும் ஒரு பிராணியின் உள்கூடு ஆகும். முத்து ஒருவித மட்டியினத்தினின்றும் உண்டாகிறது. மட்டிகளின் கூடுகளைச் சுட்டால் சுண்ணாம்பு உண்டாகும்.

கணுக்காலிகள் (Arthropoda) : இத் தொகுதியில் பலவகை உயிர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 1. ஓட்டு மீன்கள், கிரஸ்டேஷியா (Crustacea), நண்டு, இறால், சென்னக்கூனி முதலிய வகைகள். இன்னும் பல இனங்கள் இதில் அடங்கியிருக்கின்றன. 2. தென் ஆப்பிரிக்காவிலும் வடஇந்தியாவிலும் காணப்படுகின்ற பெரிபதஸ் என்னும் உயிர். 3. மரவட்டை, பூரான் முதலியன அடங்கிய வகுப்பு. ஒவ்வொன்றிலும் அநேக விதங்கள் இருக்கின்றன. ஜல மண்டலம் என்று சொல்லும் பூரான் வகை இவ்வினத்தைச் சேர்ந்தது. 4.பூச்சிகள், வண்டுகள், பட்டுப்பூச்சி, எறும்பு, கரப்பான்பூச்சி, தும்பி, குளவி, வெட்டுக்கிளி, பிள்ளைப்பூச்சி முதலியன இவ் வகுப்பில் அடங்கும். இவைகளின் உடலில், தலை, மார்பு, வயிறு என மூன்று பாகங்களைக் காணலாம்; ஆறு கால்கள் உள்ளன. 5. தேள், எட்டுக் கால் பூச்சிகள், உண்ணி முதலியன அடங்கிய வகுப்பு. இவைகளுக்கெல்லாம் எட்டுக்கால்கள் உள்ளன. இவற்றில் தலையும் மார்பும் ஒன்று சேர்ந்து தலை- மார்பு (செபலதோராக்ஸ்) என்னும் ஒருபாகம் வயிற்றுக்கு முன்பாகமாக இருக்கிறது.

முள்தோலிகள் (Echinodermata) : இவை கடலிலே வாழ்கின்றன. நட்சத்திர மீன் (Star fish), ஒடி நட்சத்திர மீன் (Brittle star), கடல் முள்ளெலி (Sea urchin), கடல் வெள்ளரி (Sea-cucumber), கடல் லில்லி (Sea-lily) முதலியன இவ்வினத்தில் அடங்குகின்றன. ஐந்து கைகளையுடைய நட்சத்திர மீனும், அதைப்போன்று நடுத் தட்டுடன் ஐந்து பலவிதமாக வளையக்கூடிய கைகளையுடையதுமான ஒடி நட்சத்திர மீனும் சாதாரணமாகச் செம்படவர்களால் ஒதுக்கப்பட்ட மீன்களினிடையே கடற்கரையோரங்களில் காணலாம். அலைகளாலும் சில சமயங்களில் இவை ஒதுக்கப்பட்டிருக்கும். கடல் முள்ளெலி பந்துபோல் உருண்டு, உடல் முழுவதும் முட்களால் மூடப்பட்டிருக்கும். இம்முட்களைச் சிறுவர் பலகையில் எழுதும் பலப்பம்போல் உபயோகப்படுத்தலாம். கடல் வெள்ளரி கடலின் தரையில் படுத்து வாழ்வதினால் அதைக் கரைகளில் காண்பதரிது. கடல் லில்லியும் வேர்களால் மணலில் ஊன்றி வாழ்கின்றது. இதில் ஒரு சிறிய இனம் கடற் பாறைகளினிடையே வாழும். எஸ். ஜீ. ம.

மானிடவியல்: பண்டைத் தமிழ் நூல்கள், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலப் பாகுபாடு செய்து, அவற்றில் வாழ்ந்த மக்களையும் அவர்களுடைய வாழ்க்கை முறைகளையும் பற்றிக் கூறுகின்றன. வேதகால நூல்கள், நிஷாதர், கிராதர் போன்ற ஆரியரல்லாத மக்களைப்பற்றிக் கூறுகின்றன. இமயமலையிலிருந்த மக்கள் கற்களைக்கொண்டு செய்து பயன்படுத்திய அம்பு முனைகளைப்பற்றிய வருணனை காளிதாசருடைய நூல்களில் காணப்படுகின்றது.

ஆயினும் பிரிட்டிஷ் அரசாங்கம் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மக்கள் தொகைக் கணக்கு முறை வகுத்த பின்னரே இந்திய மானிடவியல் ஆராய்ச்சி தொடங்கியது. சர் டெனிஜில் இபெட்சன் 1881ஆம் ஆண்டு மக்கள் தொகை கணித அறிக்கையில் பஞ்சாபில் காணப்படும் பழக்க வழக்கங்களைப்பற்றி எழுதினார். ஆனால் 1891ஆம் ஆண்டு சர் ஹெர்பர்ட் ரிஸ்லி எழுதிய மக்கள் தொகைக் கணித அறிக்கையே இந்திய மானிடவியல் ஆராய்ச்சியின் தொடக்கமாகும். இதன் பின்னர் வந்த அறிக்கைகள் சாதி, இனம் பற்றிய விவரங்கள் தந்தன.

தர்ஸ்டனும் ரங்காச்சாரியும் 1909-ல் எழுதிய தென் இந்திய சாதிகளும் இனங்களும் என்னும் நூலும், அனந்தகிருஷ்ண அய்யர் எழுதிய கொச்சி, மைசூர் சாதிகளும் இனங்களும் என்ற நூலும் தமிழ்நாட்டு மானிடவியல் ஆராய்ச்சிக்குப் பெரிதும் துணை செய்வன. இதன்பின் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் அலுவலாளர்கள் அஸ்ஸாமிலிருக்கும் மலைச் சாதிகள் ஒவ்வொன்றையும் பற்றி விரிவான குறிப்புக்கள் அடங்கிய நூல்கள் வெளியிட்டனர். அதன்பின் ஆராய்ந்தவர்களுள் சிறந்தவர்கள் வங்காளத்திலிருந்த சரத்சந்திர ராயும், மத்திய இந்தியாவிலிருந்த டாக்டர் வெரியர் எல்வினுமாவர். உடல் தோற்றத்தைப் பற்றிய ஆராய்ச்சியைப் பலவாறு நடத்தியவர் இந்திய அரசாங்கத்தின் மானிடவியல் இலாகாவின் முதல் டைரக்டராயிருந்த டாக்டர் பீ. எஸ். குஹா ஆவர்.

சிந்துப் பள்ளத்தாக்கில் கண்டுபிடித்த ஹாரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகச் சிதைவுகள் இந்திய மானிடவியல் ஆராய்ச்சியில் மிகச் சிறப்பான ஒரு கட்டமாகும். பார்க்க: ஆசியா-மானிடவியல். யூ. ஆர். ஏ.

மக்களினங்கள்

இந்திய மக்களிடம் ஆதிக் குடி இனங்களின் அமிசங்கள் பல காணப்படுகின்றன. இவ்வினங்கள் ஆறு