பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/658

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

601

இந்தியா


வெளிநாடுகளில் இந்தியர்

இந்தியர் இரண்டு மூன்றாயிரம் ஆண்டுகட்கு முன்பே கிழக்கு மேற்கு நாடுகளுடன் வாணிபம் செய்து வந்தனர் என்பதற்கும், அந்நாடுகளில் குடியேறி அங்கே தமது நாகரிகத்தைப் பரப்பினர் என்பதற்கும் போதிய சான்றுகள் உள்ளன (பார்க்க: தமிழர் — பிற நாடுகளில் தமிழர்).

சென்ற நூற்றாண்டில் இந்திய நாடு பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தமையால், இந்திய மக்கள் அயல் நாடுகளுக்கு முன்னாட்களிற்போலச் சுதந்திர மக்களாகச் செல்லாமல் வேலை தேடிச் செல்லும் நிலைமை உண்டாயிற்று. 1833-ல் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தில் (நீக்ரோ) அடிமை முறை ஒழிக்கப்பட்டது. அதனால் பிரிட்டிஷார் நீக்ரோக்களுக்குப் பதிலாக இந்தியரைத் தங்கள் குடியேற்ற நாடுகளுக்குக் கொண்டுபோய்க் கூலிகளாகப் பயன்படுத்த விரும்பினார்கள். இந்திய அரசாங்கம் அதற்குச் சம்மதித்தது. அதன் பயனாக 1834-ல் எண்ணாயிரம் இந்தியர்கள் 'முறிச்சீட்டு முறை'யில் மோரீசுக்கும் பிரிட்டிஷ் கயானாவுக்கும் சென்றனர். அதன் பின்னர் இந்திய மக்கள் பிரிட்டிஷ் சாம்ராச்சிய நாடுகளுக்கு மட்டுமன்றிப் பிரெஞ்சு, டச்சுக் குடியேற்ற நாடுகளுக்கும் செல்லலாயினர். பலவிதக் கொடுமைகளுக்கும் காரணமாயிருந்த முறிச்சீட்டு முறை காந்தியடிகள், கோகலே, ஆண்ட்ரூஸ், போலக் போன்ற பெரியார்கள் செய்த கிளர்ச்சியால் 1920-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனால் விடுவிக்கப்பெற்ற கூலிகளுள் சிலர் இந்தியாவுக்குத் திரும்பினர். சிலர் அந்த நாடுகளிலேயே தங்கினர். அவர்களுள் வெகுசிலரே பணம் தேடவும் நல்வாழ்வு பெறவும் கூடியவர்களாயிருந்தார்கள். முறிச் சீட்டு முறையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூலிகளாகச் சென்ற காலத்திலேயே இந்திய மக்களில் சிலர் வியாபாரிகளாகவும், மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் அங்குச்சென்று தொழில்செய்து வந்தார்கள்.

இந்த இந்திய மக்களுள் பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகளில் வாழ்ந்தவர்கள் பிற குடியேற்ற நாடுகளில் வாழ்ந்தவர்களைக் காட்டிலும் இழிவாக நடத்தப்பட்டார்கள். அதிலும் தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்படும் விதம் கொடுமையானது.

1. தென் ஆப்பிரிக்கா : இந்தியர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு முறிச்சீட்டு முறையில் முதன்முதலில் சென்றது 1860லாகும். இவர்களுடைய உழைப்பு அந்த நாட்டின் வளத்திற்குப் பெரிதும் காரணமாயிற்று என்பதை அங்குள்ள ஐரோப்பியர்களே பல முறை ஒப்புக்கொண்டுளர். ஆயினும் அவர்கள் பலவிதமான சட்டங்கள் செய்து, இந்திய மக்கரை ஒரு சார்பாக நடத்த முயன்று வந்தார்கள். அதை எதிர்த்துச் சத்தியாக்கிரக இயக்கத்தைக் காந்தியடிகள் தோற்றுவித்தார். இந்தியர்களை வேறுபடுத்தி நடத்தக்கூடாது என்று ஐக்கிய நாட்டு ஸ்தாபனம் 1946-ல் செய்த தீர்மானத்தையும் தென் ஆப்பிரிக்கா அரசாங்கம் புறக்கணித்தது.

தென் ஆப்பிரிக்காவிலுள்ள இந்தியர்களுள் பலர் சொத்துக்கள் வாங்கியுள்ளனர். இந்திய மக்களுக்கெனப் பாடசாலைகள் நிறுவியுள்ளார்கள். மூன்று பத்திரிகைகள் நடைபெறுகின்றன. இந்தியர்களும் ஆப்பிரிக்கக் குடிகளும் நேசபாவத்துடன் ஒத்துழைத்து வருகின்றனர். இப்போது தென் ஆப்பிரிக்காவிலுள்ள இந்தியர் தொகை 2,82,407 (1946).

2. கிழக்கு ஆப்பிரிக்கா: இங்குள்ள இந்தியரின் தொகை 1,69,000 (1946). இந்தப் பகுதியில் கெனியா, டாங்கன்யீக்கா, யுகாண்டா என மூன்று பிரிவுகள் உள்ளன. இங்கு இந்தியர் நிலைமை தென் ஆப்பிரிக்காவிற் போல் அத்துணை இழிவாக இல்லை. இங்குள்ளவர்க்கு வாக்குரிமை உண்டு. ஆயினும், இங்கும் பல சட்டங்களை இயற்றி, இந்தியரை நாட்டைவிட்டு. அகற்ற ஐரோப்பியர் முயன்று வருகின்றனர்.

3. சான்சிபார் : இந்தியர் தொகை 16,000 (1946). இவர்கள் கிராம்பு வியாபாரத்தினால் பிழைப்பவர்கள். அந்த வியாபாரத்தை இந்தியர்கள் மேற்கொள்ளாமலிருக்க ஐரோப்பியர் பலவிதமான சட்டங்களை இயற்றி வருகிறார்கள். இந்தியர் மூன்று பத்திரிகைகள் நடத்தி வருகிறார்கள்.

4. மோரீசு: இந்தியர் தொகை 2,71,635. இந்தத் தீவின் மொத்த மக்கள் தொகையில் 65%. ஆயினும் இவர்களுள் பெரும்பாலோர் பிரெஞ்சுக்காரர்களுடைய கரும்புத் தோட்டங்களிலும் கரும்பாலைகளிலும் வேலைசெய்யும் கூலிகளாகவே இருந்து வருகிறார்கள். ஒருசிலர் மட்டும் சொத்துடையவர்களாக இருக்கிறார்கள். என்றாலும் இவர்கள் நிலைமை அவ்வளவு தாழ்வாக இல்லையென்றே கூறவேண்டும். 1948-ல் நடந்த தேர்தலில் மொத்தம் 19 பேர்களுள் பதினொரு இந்தியர்கள் சட்டசபை உறுப்பினர்கள் ஆனார்கள். இங்கு இந்தியர்கள் ஆறு பத்திரிகைகள் நடத்திவருகிறார்கள்.

5. இலங்கை : இந்தியர் தொகை சுமார் 7 இலட்சம் (1952). இவர்களுள் பெரும்பாலோர் தமிழர்கள். இலங்கை 1802-ல்தான் இந்தியாவைவிட்டுப் பிரிந்து கிரௌன் குடியேற்ற நாடாக ஆயிற்று. அதுமுதல் நூறு ஆண்டுவரையில் தென்னிந்திய மக்கள் அங்கேயுள்ள தேயிலை, ரப்பர், காப்பித் தோட்டங்களில் வேலை செய்வதற்குக் கூலிகளாகச் சென்றனர். இலங்கை அரசாங்கம் இந்தியர்களுக்கு விரோதமாகச் சில சட்டங்களை இயற்றியுள்ளது; இப்பிரச்சினை இந்திய அரசாங்கத்தின் கவனிப்பில் இருந்து வருகிறது.

6. பர்மா: இந்தியர் தொகை 10.17,825 (1952) பர்மா 1935வரை இந்தியாவின் ஒரு பகுதியாயிருந்தது. இந்தியர்கள் அங்குப் பல தொழில்களைச் செய்து, அந்த நாட்டை வளம்படுத்தித் தாங்களும் வாழ்ந்து வந்தனர். ஆனால் பர்மா சுதந்திரம் பெற்றபிறகு அங்கே இவர்கள் அன்னியர் நிலைமையிலேயே இருக்கின்றனர்.

7. மலேயா : இந்தியர் தொகை 5,77,000 (1952). இவர்களே அங்குள்ள மூன்றாவது பெரிய இனத்தார். பெரும்பாலோர் தோட்டக் கூலிகளாகச் சென்றனர். அரசாங்கம் இந்தியர்களுக்குச் சாதகமாக இல்லாமற் போகவே இந்திய அரசாங்கம் இவர்களை அங்குச் செல்லாமல் தடுத்தது.

8. பீஜி: இந்தியர் தொகை 1,48,802(1952). இது மொத்த மக்கள் தொகையில் 47%. தென் ஆப்பிரிக்காவில் உள்ளதுபோல இங்கு இனப் பிரச்சினை இல்லை. இந்திய மக்கள் இங்கு நல்ல நிலைமையில் இருந்து வருகின்றனர். இந்தியாவிலிருப்பதைவிட இங்கு எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அதிகம். இவர்கள் ஐந்தாறு பத்திரிகைகள் நடத்துகிறார்கள்.

9. மேற்கு இந்தியத் தீவுகள்: இங்கு இந்தியர்கள் 1832-ல் முறிச்சீட்டு முறையில் சென்றார்கள். நூறு ஆண்டுகளாக இந்திய அரசாங்கம் அவர்களைக் கவனிக்கவில்லை. அதனால் அங்குள்ள மக்கள் பெரும்பாலும் மேனாட்டு நாகரிகத்தை ஏற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்களிடையே சாதி வேற்றுமை இல்லை. பொருளாதாரத் துறையிலும் அரசியல் துறையிலும் இவர்கள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். கீழ்க்கண்ட இடங்களிலுள்ள இந்தியர்களின் தொகை; ஐமெய்க்கா: