பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/700

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

635

இந்தியா

களை வகித்து வந்தனர். காலநிலையை ஒட்டி அக்பர் கையாண்ட இக்கொள்கை மிகவும் பாராட்டற்குரியதாகும்.

அக்பரின் பிற்காலத்தில் இளவரசன் சலீம் தனது தந்தையின் ஆயுள் நீடிப்பதைக் கண்டு பொறுமையிழந்து அடிக்கடிக் கலகம் செய்தான். அக் கலகங்கள் எல்லாம் எளிதில் அடக்கப்பட்ட போதிலும் தனது வாழ்நாளின் இறுதியில் அக்பர் மிகுந்த மனக் கவலையோடு இருந்தான். 1605-ல் அக்பர் இறந்தவுடன் இளவரசன் சலீம் ஜகாங்கீர் என்னும் பெயரோடு பட்டம் பெற்றான் (ஆ. கா. 1605-1627).

அக்பருக்குப் பின் முடி சூடுவதில் ஜகாங்கீருக்கும் அவன் பிள்ளை குஸ்ருவுக்கும் போட்டயேற்பட்டது. குஸ்ரு தோற்கடிக்கப்பட்டு, மற்றொரு பிள்ளையான இளவரசன் குர்ரம் என்பவனிடம் ஒப்படைக்கப்பட்டான். குர்ரம் 1622-ல் அவனைக் கொன்றான். எதிர்ப்பை முறியடித்து ஜகாங்கீர் சக்கரவர்த்தியானான்.

பிரதாபசிம்மனுக்குப் பிறகு முடி சூடிய அமரசிம்மனுக்கும் மொகலாயருக்கும் போர் ஏற்பட்டது. இப் போரில் இளவரசன் குர்ரம் மிகவும் திறமையோடு போர் புரிந்தான். இறுதியில் அமரசிம்மன் மொகலாயப் பேரரசின் தலைமைக்குக் கீழ்ப்படிந்தான். உள்நாட்டு விஷயங்களில் மொகலாயர் தலையிடுவதில்லை யெனவும், அமரசிம்மன் ஜகாங்கீரின் சபைக்கு நேரில் வரவேண்டியதில்லை எனவும் முடிவுசெய்யப்பட்டது. இவ்வாறு ராஜபுதனம் முழுமையும் வேறு சில புதிய பிரதேசங்களும் ஜகாங்கீர் வசம் வந்தன.

ஜகாங்கீர் எல்லா அலுவல்களையும் தன் மனைவியான நூர்ஜகானிடம் ஒப்படைத்துவிட்டுக் கவலையற்றிருந்தான். அவனுக்கு எதிர்க் கட்சியொன்று மகபத்கான் தலைமையில் ஏற்பட்டது.

தக்கணத்தில் மாலிக் ஆம்பர் அகமது நகரில் மீண்டும் வலுப்பெற்றுப் பல பகுதிகளைக் கைப்பற்றினான். இளவரசன் குர்ரம் மீண்டும் அவைகளைக் கைப்பற்றினான். அவன் அருஞ்செயல் காரணமாக ஷாஜகான் என்னும் பட்டம் பெற்றான்.

ஜகாங்கீரின் உடல்நிலை அளவுக்கு மிஞ்சிய மதுபானத்தாலும் அபினியாலும் கேடுற்றது. நூர்ஜகான் தனது அதிகாரத்தை இழப்பதற்கு விரும்பவில்லை; முதல் கணவனால் தனக்குப் பிறந்த பெண்ணை ஜகாங்கீருடைய மூத்த மனைவியின் மகனான ஷாரியர் என்ற அரச குமாரனுக்கு மணம் செய்வித்து, அவனை அரசனாக்குவதற்கு முயன்றாள். தன் சிற்றன்னைக்கு ஷாரியர் பணிய நேரிட்டது. பிறகு மகபத்கான் அவனோடு சேர்ந்ததால் நூர்ஜகானின் வலிமை குறைந்தது. 1627-ல் ஜகாங்கீர் இறந்த பின்னர் அவளுடைய அதிகாரம் அழிந்தது. ஷாரியர் கொல்லப்பட்டான். நூர்ஜகான் ஷாஜகானிடம் ஆண்டொன்றுக்கு 2 இலட்சம் ரூபாய் பெற்று, 1645 வரை உயிர் வாழ்ந்தாள்.

ஷாஜகான் (ஆ. கா. 1627-1658) தன் மனைவியாகிய மும்தாஜ் மகால் எனப்படும் அர்ஜுமண்ட் பானுவிடம் மிகவும் அன்பு கொண்டவன். தாரா, ஷூஜா, ஒளரங்கசீபு முதலியவர்கள் மும்தாஜ்மகாலின் பிள்ளைகள்; 1631-ல் அவள் இறந்ததனால் ஷாஜகான் மனமுடைந்து, அழகிய உடைகள், அணிகள் முதலியவற்றை வெறுத்தான். மும்தாஜ் மகாலின் சமாதிமீது உலகில் வேறு எந்தப் பெண்ணுக்கும் அமைக்கப் பெறாத சிறந்த ஞாபகார்த்தமாக 1632-ல் தாஜ் மகால் கட்டடம் எழுப்பினான்.

தக்கணத்தில் பிஜாப்பூர், கோல்கொண்டா இராச்சியங்கள் மொகலாயர் ஆதிக்கத்தை ஒப்புக் கொண்டன. அகமதுநகர் மொகலாயர் வசமாகியது. அங்கே பழைய மன்னர்களின் ஆட்சியை ஏற்படுத்த ஷாஜி செய்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. இரு முறை ஒளரங்கசீபு தக்கணத்தில் அரசப் பிரதிநிதிப் பதவி வகித்து மொகலாயப் பேரரசைப் பரப்பினான்.

ஷாஜகான் தன் மூத்த புதல்வன் தாராவிடத்தில் அளவிறந்த அன்பு காட்டியதை மற்றப் பிள்ளைகள் பொறுக்கவில்லை. சக்கரவர்த்தி 1657-ல் கொடிய நோயால் வாடியபோது எல்லாப் புதல்வர்களும் அரசுரிமைக்காகப் போராட ஆரம்பித்தனர். அவர்களுள் ஒளரங்கசீபு பேராசை மிக்கவன்; தனது நோக்கத்தை மறைத்துக்கொண்டு, தன் சகோதரனான முராதுக்காகப் போர் புரிந்து, அவனை மன்னனாக்கித் தான் துறவு பூணப் போவதாக முராதிடம் கூறி அவனை நம்புமாறு செய்தான். உஜ்ஜயினிக் கருகில் டார்மத் என்னுமிடத்தில் நிகழ்ந்த கடும்போரில் ஔரங்கசீபு வெற்றியடைந்தான். இதற்கு முன்னால் தாராவின் குமாரன் சுலைமான்ஷுக்கோ ஷாஜுவைக் காசிக்கருகில் பகதூர் பூரில் தோற்கடித்திருந்தான். ஔரங்கசீபு ஆக்ராவை நோக்கி முன்னேறி, சாமுகார் என்னுமிடத்தில் தன் மூத்த சகோதரனாகிய தாராவுடன் கடும் போர் புரிந்து வெற்றி பெற்றான். உடனே ஆக்ரா முற்றுகையிடப் பெற்றது. முற்றுகையைத் தாங்கமுடியாமல் ஷாஜகான் கோட்டையை ஒளரங்கசீபிடம் விட்டான்; அரண்மனையில் சிறை வைக்கப்பட்டான். இது வரையில் முராதும் ஔரங்கசீபும் ஒத்துழைத்தே தம் சகோதரருடன் போர் புரிந்து வந்தனர். விரைவில் இருவருக்குள்ளும் மன வேறுபாடு ஏற்பட்டது. ஒளரங்கசீபு உடனே முராதைக் கைது செய்து குவாலியரில் சிறை வைத்தான். அங்கேயே 1661-ல் முராத் கொல்லப்பட்டான். ஒளரங்கசீபின் முன்னேற்றத்தைக் கண்ட தாரா டெல்லியை விட்டு லாகூருக்குச் சென்றான். பின்னர் ஔரங்கசீபு டெல்லியை அடைந்து, ஆலம்கீர் காசி என்ற பட்டத்துடன் முடி சூட்டிக் கொண்டான் (ஜூலை 1658). ஷாஜகானுடைய ஆட்சி முடிவுற்றது. அவன் 1666-ல் இறக்கும்வரை ஆக்ராவிலேயே சிறையிலிருந்தான்.

மொகலாயர் ஆட்சிக் காலத்தில் ஷாஜகான் ஆண்ட காலம் பொற்காலம் எனக் கருதப்படுகிறது. ஷாஜகான் கலை வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவன். அவன் தனது ஆட்சிக்காலத்தில் பல கட்டடங்களைக் கட்டியுள்ளான். டெல்லி, ஆக்ரா இரு நகரங்களிலும் அவன் கட்டுவித்த கட்டடங்கள் புகழ் வாய்ந்தவை. ஷாஜகானாபாத் என்ற புதுநகரை அவன் டெல்லியில் 1638-48-ல் கட்டுவித்தான். அந்நகரில் பெரியதோர் அரண்மனையையும் அவன் கட்டினான். ஆக்ராவில் மோத்தி மசூதி (முத்து மசூதி), ஜம்மா மசூதி, தாஜ் மகால் முதலிய கட்டடங்களைக் கட்டினான். இந்து சங்கீதக் கலைஞனாகிய ஜகன்னாதன் மகா கவிராய் என்னும் பட்டம் பெற்றுச் சிறப்புற்றான். ஓவியம், கல்வி முதலியவை அரசவையில் வளர்க்கப்பட்டன. ஷாஜகான் தாராளமான மனப்போக்குடன் இந்துக்களை ஆதரித்து, அவர்கள் கலை, மதவுண்மைகள் முதலியவற்றை அறிந்து பாராட்டி வந்தான்.

ஒளரங்கசீபு (ஆ. கா. 1658-1707) வாரிசுரிமைப் போரைத் தொடர்ந்து நடத்தித் தாராவையும் ஷூஜாவையும் முறியடித்து இரண்டாம் முறை முடி சூட்டிக் கொண்டான்.

ஒளரங்கசீபு சிறந்த கல்விமான். இஸ்லாம் மதத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவன். இந்துக்களைக் கொடுமையாக நடத்தி அவர்கள் பகையைத் தேடிக்கொண்டான்.