பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/723

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

658

இந்தியா

1016, 1033, 1077 ஆண்டுகளில் வணிகர்களின் கூட்டங்கள் சென்று மீண்டன.

இதற்குப்பின் பாண்டிய கேரள நாடுகளில் ஏற்பட்ட கலகங்களை இளவரசன் இராசாதிராசன் அடக்கினான். அவனே இலங்கை I-ம் விக்கிரமபாகுவுக்கு விரோதமாக அத்தீவின்மீது 1041-ல் படையெடுத்தான். ஆயினும் இலங்கையில், முக்கியமாகத் தென்பகுதியில் சோழருக்கு எதிர்ப்பு இருந்துகொண்டேயிருந்தது. இராசேந்திரன் ஆட்சியின் கடைசி ஆண்டுகளில் வேங்கி காரணமாக மறுபடியும் போர் ஆரம்பித்தது. சாளுக்கிய இராச்சியத்தில் II-ம் ஜயசிம்மனுக்குப் பின் அவன் மகன் I-ம் ஆகவமல்ல சோமேசுவரன் 1042-ல் சிம்மாசனமேறினான். அவன் தன் தலைநகரை மானியகேடத் திலிருந்து கலியாணி நகருக்கு மாற்றினான் ; அங்கே பல அழகிய கட்டடங்களை அமைத்தான். மாளவநாட்டுத் தலைநகரான தாராநகரைத் தாக்கிப் போஜராஜனிடம் கப்பம் பெற்றான். சக்கிரகூடம் (தற்காலத்துப் பஸ்தர்) என்ற நாட்டை ஆண்டுவந்த நாகவமிச அரசன் தாராவர்ஷனைத் தனக்குக் கீழ்ப்படியுமாறு செய்தான். அவன் மக்களான I-ம் புரோலன் பேதன் என்ற காகதீயத் தலைவர்களோடு சோமேசுவரன் யுத்தங்களை நடத்தி, அவர்களிடமிருந்து அனுமகொண்ட விஷயம் என்னும் பகுதியைத் தன்னாடாகப் பெற்றான். சோமேசுவரன் மற்றொரு பக்கம் வேங்கியைத் தாக்கிச் சோழப்போரை ஆரம்பித்தான். அதேசமயத்தில் விஜயாதித்தன் வேங்கியைத் தாக்கி இராசராசனை விரட்டித் தானே அரசு புரிய ஆரம்பித்தான் (1031). 1035-ல் இராசராசன் மீண்டு வந்து விஜயாதித்தனை மேலைச் சாளுக்கிய நாட்டுக்கு விரட்டினான். இதற்குள் இராசேந்திரன் இறந்து I-ம் இராசாதிராசன் பட்டமெய்தினான் (1044). உடனே தானே தெலுங்கு நாட்டுக்குச் சென்று, தானிய கடகம் என்னும் தன்னாடையில் சாளுக்கிய சைனியத்தை முறியடித்து, விஜயாதித்தனையும் சோமேசுவரன் மகன் விக்கிரமாதித்தனையும் வெருண்டோடச் செய்து, கொள்ளிப்பாக்கை என்னும் சாளுக்கியக் கோட்டையைத் தீக்கிரையாக்கினான். இந்நிகழ்ச்சிகளால் கீழைச்சாளுக்கிய அரசனான இராசராசனுக்குச் சிறிது நிம்மதி ஏற்பட்டது. மேற்குப்பாகத்திலும் சோழப் படைகள் கம்பிலி நகரிலுள்ள சாளுக்கிய மாளிகையைத் தகர்த்துக் கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள பூண்டூரில் பெரு வெற்றி பெற்று, அவற்றைக் கடந்து அப்பாலுள்ள ஏதகிரியில் புலி பொறித்த ஒரு ஜயத்தம்பத்தை நாட்டின. பிறகு கலியாணபுரத்தையே தாக்கி, அங்கே வீராபிஷேகம் செய்து கொண்டு, இராசாதிராசன் விசயராசேந்திரன் என்னும் பட்டமெய்தினான். திரும்பும்போது கலியாணபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஓர் அரிய துவார பாலகனுடைய சிலை இன்றும் தாராசுரம் கோயிலின் முன் புறமிருக்கிறது. சோமேசுவரன் தன் விடாமுயற்சியால் சுமார் கி. பி. 1050-ல் சோழப்படைகள் தன்னாட்டை விட்டகலச் செய்தான். வேங்கியிலும் இராசராசனைச் சோழரை விட்டுப் பிரித்துத் தனக்குள்ளடங்கிய சிற்றரசனாக்கிக் கொண்டான். ஒரு சமயம் சாளுக்கியப் படைகள் சோழநாட்டிற் புகுந்து காஞ்சீபுரம் வரை சென்றன. இவையெல்லாம் இராசாதிராசனது இரண்டாம் போர் முயற்சிக்குத் தூண்டுகோலாகவிருந்தன. யாது காரணம் பற்றியோ கலிங்கத்திலும் வேங்கியிலும் தன் ஆட்சியை மறுபடியும் நிறுவ அவன் முயற்சி செய்யவில்லையெனினும், அவனும் இராசாதிராசனும் அவன் தம்பியும் இளவரசனுமான II-ம் இராசேந்திரனும் 1053-54 சாளுக்கிய நாட்டிற் புகுந்து கொப்பத்தில் பெரும்போர் தொடுத்தனர். இராசாதிராசன் களத்தில்பட்டு வீழ்ந்தான். ஆயினும் இராசேந்திரன் ஓடப்புகுந்த படைகளை நிறுத்தி வெற்றிபெற்றான். களத்திலேயே இராசேந்திரன் பட்டாபிஷேகம் செய்துகொண்டு, பிறகு கொல்லாபுரம் சென்று, அங்கு ஒரு ஜயத்தம்பத்தை நாட்டினான். இத் தோல்வியினால் ஏற்பட்ட அவமானத்தைத் தீர்க்க எண்ணிய சோமேசுவரன் மறுபடியும் போர் வேண்டினான். வேங்கியில் இராசராசன் 1061-ல் இறந்தான். சோமேசுவரன் விஜயா தித்தன் மகன் II-ம் சக்திவர்மனை அந்நாட்டுக்கு அரசனாக்குமாறு கட்டளையிட்டுச் சாமுண்டராஜன் என்னும் படைத்தலைவனை அனுப்பினான். தன் மக்கள் விக்கிரமாதித்தனையும் ஜயசிம்மனையும் கங்கவாடியின் மேற் படையெடுக்கச் செய்தான். இராசேந்திரன் பின் வாங்கவில்லை. அவன் தம்பி வீரராசேந்திரனும், மகன் இராசமகேந்திரனும் போரில் கலந்துகொண்டனர். வேங்கியில் சாமுண்டராஜனும் சக்திவர்மனும் தோற்றுக் கொலையுண்டனர். கங்கவாடிமீது படையெடுத்த அரசகுமாரர்களைக் கூடல்சங்கமத்துப் போரில் வென்றான். சோமேசுவரன் நினைவு கைகூடவில்லை (1061-62), அடுத்த ஆண்டு இளவரசன் இராசமகேந்திரனும் இராசேந்திரனும் இறந்தனர். வீரராசேந்திரன் அரசனானான் (1063).

சோமேசுவரன் மறுபடி போருக்குத் தயார் செய்தான். தாராவர்ஷனும், கலிங்க கங்க அரசன் 111-ம் வச்சிரகஸ்தனும் அவனுக்கு உதவியாக நின்றனர். ஜனநாதன் என்ற பரமார அரசகுமாரனும் அவனுக்குப் படைத்தலைவனாகி, விஜயவாடாவின் அருகில் சேனையுடன் தயாராக நின்றான். மேற்கே விஜயாதித்தன் சாளுக்கிய சேனைகளைச் சோழராச்சியத்தின்மீது படையெழுச்சிக்காகத் தயாரித்தான். யுத்தம் ஆரம்பித்ததும் முதலில் சோழருக்குப் பெருவெற்றியொன்றும் ஏற்படாவிட்டாலும், 1066-ல் முடக்காற்றில் (துங்கபத்திரையாயிருக்கலாம்) சோமேசுவரன் படைகள் தோற்றுப் போயின. ஆனால் அவன் மறுபடி கடல் சங்கமத்தில் குறித்த நாளில் போர் நிகழவேண்டுமென வீரராசேந்திரனுக்குத் தூது அனுப்பினான். அந்நாளில் வீரராசேந்திரன் சாளுக்கியப் படைகளை அவ்விடத்தில் சந்தித்தானேயொழியச் சோமேசுவரன் வரவில்லை. ஒரு மாதகாலம் அவன் வரவிற்காகக் காத்திருந்து பின் சாளுக்கியப் படைகளை முறியடித்தான். பிறகு வேங்கிக்குச் சென்று, அங்கே அவனுக்கு முன் வந்திருந்த விசயாதித்தனையும் ஜனநாதனையும் விஜயவாடாப் போரில் தோற்க வைத்துப் பின் கிருஷ்ணா நதியைக் கடந்து, கலிங்கநாட்டிலும் நாக வமிச தாராவர்ஷனுடைய சக்கரகூட நாட்டிலும் போர் புரிந்தான். இப்போர்களில் சாளுக்கியர் பக்கம் வச்சிரகஸ்தன் மகன் இராசராசனும் விக்கிரமாதித்தனும் போர்புரிந்தனர். சோழர் பக்கம் வேங்கி இராசராசன் மகன் இராசேந்திரன் (பிறகு இவனே முதற் குலோத்துங்கனெனப் பட்டான்) சேர்ந்தான். இதனிடையில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த சோமேசுவரன் நீரில் மூழ்கி உயிர் துறந்தான் (1068). சாளுக்கிய மன்னரில் சோமேசுவரன் பெரிய இராசதந்திரம் வல்ல ஓர் அரசன். அவன் கல்யாணி நகரை மிகவும் சிறப்பாக அழகுபடுத்தினான்.

அவனுக்குப் பின் அவன் மூத்த மகன் II-ம் சோமேசுவரன் பட்டமெய்தினான். ஆனால் அவன் தம்பி விக்கிரமாதித்தனுக்கு ஆதிமுதலே தான் ஆள வேண்டுமென்ற எண்ணமுண்டு. வீரராசேந்திரன் குத்திக்கோட்டையை முற்றுகையிட்டுக் கம்பிலி நகரத்தையும் தாக்கினான். இதுதான் தனக்கு ஏற்ற சமயமென்று விக்கிரமாதித்தன் பல சிற்றரசரின் உதவியை