பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/733

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

668

இந்தியா

1570-ல் விஜயநகர மன்னனாகப் பட்டமெய்திய ஆரவீடு வமிசத்தைச் சேர்ந்த திருமலைராயர் தென்னாட்டில் அமைதியை நிறுவினார். இவருக்குப்பின் முதல் ஸ்ரீரங்கனும், முதல் வேங்கடனும் (இவரைச் சிலர் இரண்டாம் வேங்கடன் என்பர்) பட்டமெய்தினர். இவர்களில் வேங்கடன் ஆரவீடு வமிசத்தினரில் தலைசிறந்த மன்னராக 1586 முதல் 1614 வரை ஆண்டார். வேங்கடன் தமது தலைநகரத்தைச் சந்திரகிரிக்கு மாற்றிக் கொண்டார். இவர் ஐரோப்பியர்களோடு, முக்கியமாகப் போர்ச்சுக்கேசியருடன் சிறந்த முறையில் பழகினார்; கல்வியை ஆதரித்தார்; ஐரோப்பியரது ஓவியக் கலையை விரும்பினார். இவர் காலத்திற்குப் பிறகு, விஜயநகர சாம்ராச்சியம் பட்டம் பற்றிய உரிமைப் போர்களால் பலவீனமுற்றது. இவ்வமிசத்தின் கடைசி அரசர் மூன்றாம் ஸ்ரீரங்கன் என்பவர்; அவர் காலத்தில் உண்டான உள்நாட்டுப் போர்க் குழப்பம், துரோகச் செயல்கள் முதலியவற்றால் விஜயநகர ராச்சியம் மறைந்து போயிற்று.

விஜயநகரத்தில் கிருஷ்ணதேவராயருடைய ஆட்சி முடிவுற்ற காலத்தில் தெற்கே மதுரையில் நாயக்கர் ஆட்சி தொடங்கியது. பாண்டிய நாட்டைக் காப்பாற்றுவது இவர்களுடைய முக்கியமான கருத்தாயிருந்தது. மதுரை நாயக்கர் மன்னர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவர். கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப் பள்ளி ஜில்லாக்களும், தெற்கே குமரிமுனை வரையுள்ள பிரதேசங்களும் அடங்கிய நாடு இவருடைய இராச்சியமாயிருந்தது. தம்முடைய நாட்டை இவர் பல பாளையங்களாகப் பிரித்துப் பாளையக்காரர்கள் நாயக்க மன்னருக்குக் கப்பம் கட்டிவிட்டுச் சுயேச்சையாகப் பாளையங்களையாண்டு வரலாமென்று நிருவாக ஏற்பாடு செய்திருந்தார். சாம்ராச்சியமுறையில் அமைக்கப்பட்ட இவ்வேற்பாடு அக்காலத்தில் நன்கு நடைபெற்றது. தளவாய் அரியநாத முதலியார் இவருடைய பிரதம மந்திரியாயிருந்தார். இவர் 1565-ல் தலைக்கோட்டைப் போரில் ராமராயருக்கு உதவியாக ஒரு சிறுபடை கொண்டு சென்றார். இந்நாயக்க மன்னர்களுக்கும் விஜயநகரப் பேரரசர்களுக்குமிடையே திருமலை நாயக்கர் காலம் வரையில் நல்லுறவு இருந்து வந்தது.

1540ஆம் ஆண்டையொட்டித் தஞ்சை, செஞ்சி, இக்கேரி என்ற இடங்களைச் சார்ந்த மூன்று நாயக்கராட்சிகள் நிறுவப்பட்டன. கேசவப்பர் தஞ்சை வமிசத்தையும், முதல் கிருஷ்ணப்பர் செஞ்சி வமிசத்தையும், சதாசிவர் இக்கேரி வமிசத்தையும் ஆரம்பித்து வைத்தனர். 1549-ல் சின்னபொம்ம நாயக்கர் என்பவர் வேலூர் நாயக்கர் வமிசத்தைத் தொடங்கி வைத்தார்.

அக்காலத்தில் அனேக தனி இராச்சியங்களும் நிறுவப்பட்டன. அவற்றுள் மைசூரில் ராஜ உடையார் என்பவர் ஏற்படுத்திய இராச்சியம் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கது. அவர் கன்னட நாடு முழுவதிலும் ஆதிக்கத்தை நிலைநாட்டினார். பிஜாப்பூராலும் இவரது ஆட்சியை அசைக்க முடியவில்லை. 1610-ல் அவர் விஜயாகர மன்னர்களிடமிருந்து ஸ்ரீரங்கப்பட்டணத்தைக் கைப்பற்றிக் கொண்டார். 1612-ல் முதல் வேங்கடர் அவருடைய ஆட்சியை ஒப்புக் கொண்டார்.

1300லிருந்து 1600 வரையுள்ள மூன்று நூற்றாண்டுகளில் தென் இந்தியாவில் விஜயநகரப் பண்பாடே பரவிற்று; முக்கியமாக இதை இந்துப் பண்பாடெனவே கருதலாம். ஆயினும் அப்பண்பாடு இந்து மதவெறியன்று. அக்காலத்தில் அவர்கள் பிற மதங்களை வெறுத்தவர்களில்லை. கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இந்துக்களோடு சமமாகப் பழகினர். “மூர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், பிறராயினும் சுதந்திரமாகவும் மதக் கோட்பாடுகளை மாற்றிக் கொள்ளாமலும் விஜய நகரத்தில் வாழ்ந்துவர முடிந்தது” என்று துவார்ட் பார்போசா (Duarte Barbosa) கூறுவது ஈண்டுக் கருதத்தக்கது. இந்து மதத்தை மக்கள் விருப்பத்தோடு போற்றுவதற்கான முயற்சிகள் பல கையாளப்பட்டன என்பதில் ஐயமில்லை. பக்தி மார்க்கத்தை வற்புறுத்தும் விட்டோபா தத்துவம்பரவியது இக்காரணத்தாலேயே. வித்தியாரணியர், வேதாந்த தேசிகர், வியாசராயர், அப்பய்ய தீட்சிதர், தாதாசாரியர் முதலிய தத்துவஞானிகள், இவ்வகை இந்து மறுமலர்ச்சிக்கு முக்கியமான காரணர்கள் எனலாம். தென்கலை வைணவம் போன்ற மத ஏற்பாடுகளும் இக்காலத்தில் அதிகமாகப் பரவத் தொடங்கின.

விஜயநகர மன்னர்களுடைய பேராதரவின் கீழ்த் தெலுங்கு இலக்கியம் மிகச்சிறந்த நிலையை யடைந்தது; ஆயினும் அம்மன்னர்கள் வடமொழி, கன்னடம், தமிழ் முதலிய மொழிகளையும் ஆதரித்தார்கள். பொது மக்களின் கல்வியிலும் மன்னர்கள் கருத்தைச் செலுத்தி வந்தனர். கோயில்களிலும் மடங்களிலும் பண்டைய முறைக் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. இது தவிரச் சோதிடம், வானசாஸ்திரம், மருத்துவம் முதலிய கலைகளும் கற்பிக்கப்பட்டன. மதுரையில் பதினாயிரம் மாணவர்களுக்குமேல் ஆசிரியர்களிடம் கல்வி கற்று வந்தனர் என்று நொபிலி (1610) என்னும் பாதிரியார் கூறியுள்ளார். கிறிஸ்தவப் பாதிரிமார்களுடைய முயற்சிகளால் ஏட்டுச்சுவடிகளை எழுதும் பழக்கம் சிறிது சிறிதாக மறைந்து வந்தது; 1577-ல் மலையாள நாட்டிலுள்ள அம்பலக்காடு என்னுமிடத்தில் முதல் தமிழ் அச்சு எந்திரசாலை ஏற்படுத்தப்பட்டது.

விஜயநகர மன்னர்கள் தமது நகரிலும், சாம்ராச்சியம் முழுவதிலும் பல கோயில்களை எழுப்புவதிலும், விசாலமான அரண்மனைகளைக் கட்டுவதிலும், காரியாலயங்கள், நீர்ப்பாசன வேலைகள் முதலியவற்றை நிருமாணிப்பதிலும் மிகுந்த ஊக்கம் காட்டி வந்தனர். ஹம்பெயில் உள்ள பாழடைந்த கட்டடங்கள் முதலியவை முற்காலத்திய விஜயநகரத்தின் பெருமையை நமக்கு நினைவூட்டுகின்றன. விஜயநகரச் சிற்பக் கலையின் சிகரமாகக் கருதத்தக்கது விட்டலசுவாமி கோயில் என்பது அறிஞர் கொள்கை. ஹஸ்ரா இராமசுவாமி கோயிலும் கிருஷ்ணர் கோயிலும் இக்காலத்தில் விஜயநகரத்தில் கலைக்கட்டடங்களில் முக்கியமானவை. ஆயினும் விஜயநகர மன்னர்களுடைய ஆதரவில் கட்டப்பெற்ற கட்டடங்கள் பெனுகொண்டா, சந்திரகிரி, வேலூர், செஞ்சி முதலிய ஊர்களிலும் காணப்படுகின்றன. சிதம்பரம், திருவண்ணாமலை, மதுரையாகிய நகரங்களில் உள்ள கோயில் கோபுரங்களும், மதுரையிலுள்ள பெரிய அரண்மனைகளும் இவ்வகைகளைச் சார்ந்தவையே. கும்பகோணத்தில் உள்ள இராமசுவாமி கோயிலின் உட்பிராகாரத்தில், இராமாயணத்தில் கண்ட செய்திகள் பல பொறிக்கப்பட்டுள்ளன. இதனால் விஜய நகர மன்னர்கள் சித்திரக் கலையில் எவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதும் புலனாகும். மு. ஆ.

1600 - 1800: 17ஆம் நூற்றாண்டில் மொகலாயரின் ஆட்சிக்கு உட்படாமல் தக்கணத்தில் சுதந்திரமாயிருந்த இராச்சியங்கள் அகமத்நகர், பிஜாப்பூர், கோல் கொண்டா என்னும் மூன்றுமே. பிறகு அகமத்நகரை ஆண்ட சாந்த் பீபீ இறந்ததும் அதன் பெரும்பகுதியை மொகலாயர் கைப்பற்றிக் கொண்டமையால், மற்ற இரண்டும் அக்பரின் ஆட்சிக்குள் அடங்கின.