பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/734

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

669

இந்தியா

அகமத்நகரின் அமைச்சராக இருந்த மாலிக் ஆம்பரின் மகன், காஞ்சகான் லோடி என்னும் ஆப்கானியரின் உதவியைக் கொண்டு மொகலாயரைத் தாக்கினார். ஷாஜகான் காஞ்சகானைப் போரில் முறியடித்து 1637-ல் இராச்சியம் முழுவதையும் கைப்பற்றினார்.

1600-ல் இரண்டாம் இப்ராகீம் ஆதில்ஷா பிஜாப்பூரை ஆண்டு வந்தார். அவர் எல்லாச் சமயத்தினர்க்கும் சலுகை காட்டினார். போர்ச்சுக்கேசியருடன் நட்புக்கொண்டார். பெரிஷ்டா என்னும் பிரசித்தி பெற்ற வரலாற்று ஆசிரியர் இவர் காலத்தில் விளங்கினார். 1656-57-ல் ஒளரங்கசீபு பிஜாப்பூரைத் தாக்கினார். 1685-ல் நகரம் முற்றுகையிடப்பட்டு மொகலாயரால் கைப்பற்றப்பட்டது. இராச்சியமும் மொகலாயர் ஆட்சிக்குட்பட்டது.

1580 முதல் 1611 வரை முகம்மதுகுலீ கோல்கொண்டா நாட்டை ஆண்டார். அவருக்குப்பின் தனி இராச்சியம் என்ற சிறப்பைக் கோல்கொண்டா இழந்தது. 1687-ல் ஒளரங்கசீபு இந்நகரை முற்றுகையிட்டு, அபுல் ஹசன் குதுப்ஷா என்னும் மன்னனைச் சிறைப்படுத்திச் சென்றார். இவ்விராச்சியமும் மொகலாயர் ஆட்சிக்குட்பட்டது.

மகாராஷ்டிரர் : ஷாஜி போன்சலே என்பவர் சிறந்த வீரர். அகமத்நகரிலும் பிஜாப்பூரிலும் இவர் அமைச்சராயிருந்தார். இவர் ஜீஜாபாயை மணந்தார். சிவாஜி இவர் மகன். தாதாஜி கொண்டதேவர் சிவாஜியின் ஆசிரியர். ஜீஜாபாய் குழந்தைக்குச் சிறந்த பயிற்சி அளித்தார். சிவாஜிக்குப் பரமகுருவாயிருந்து ஞானோபதேசம் செய்தவர் இராமதாசர். சிவாஜி ஓர் இந்துப் பேரரசை அமைத்து, அறத்தை வளர்த்து ஆட்சிபுரிய விரும்பினார். சிறந்த மகாராஷ்டிர வீரர்களைக் கூட்டிப் பயிற்சி அளித்து, அவர்களைத் துணைகொண்டு, ராஜ்கர், புரந்தர் முதலிய மலைக்கோட்டைகளைப் பிடித்தார். பிஜாப்பூரின் தளகர்த்தர் அப்சல்கானைக் கொன்று, ஒளரங்கசீபால் அனுப்பப்பட்ட ஷாயிஸ் தகானைப் புறங்காட்டியோடச் செய்தார். பின் சூரத்துநகர் சென்று அதைத் தாக்கினார். புரந்தரில் மொகலாயருடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். ஆக்ராவுக்குச் சென்ற சிவாஜியை ஒளரங்கசீபு சிறைப்படுத்தினார். சிவாஜி சிறையினின்றும் தப்பி, மீண்டும் கான்தேசத்தைத் தாக்கினார். 1674-ல் சிவாஜி சத்திரபதி என்னும் பட்டத்துடன் முடிசூட்டிக்கொண்டார். இந்து இராச்சியம் ஒன்று மேற்குத்தக்காணத்தில் நிறுவப்பட்டது.

பிறகு, சிவாஜி கருநாடகத்துள் நுழைந்து, வேலூர், செஞ்சி முதலிய 100 கோட்டைகளடங்கிய பெரிய பிரதேசத்தைக் கைப்பற்றிக் கொள்ளிடம்வரை தம் ஆட்சியைப் பரவச்செய்தார். தஞ்சைக்குத் தம் தம்பி ஏகோஜியை அரசராக்கினார். கடற்படையைப் பலப்படுத்தி, மொகலாய வியாபாரக் கப்பல்களையும் யாத்திரிகர்களையும் தாக்கினார்.

மகாராஷ்டிரர் மொகலாய நாட்டிலும் சென்று கொள்ளையடித்து வந்தனர். நிலவரியில் நான்கில் ஒரு பங்காகிய சௌத்தைச் சில இடங்களிலும், பத்தில் ஒரு பங்காகிய சர்தேஷ்முக்கியைச் சில இடங்களிலும் வசூலித்துக்கொள்ளும் உரிமையை மகாராஷ்டிரர் பெற்றனர்.

1679-ல் சிவாஜி தம் சேனையைப் பிஜாப்பூருக்கு உதவியாக மொகலாயருடன் போர் செய்ய அனுப்பினார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. சேனை அதிக சேதமின்றித் திரும்பியது. 1680 ஏப்ரல் மாதம் சிவாஜி மரணமடைந்தார்.

சிவாஜி ஆட்சியின் கீழ்ப் பல கோட்டைகள் பலப்படுத்தப்பட்டன. காலாட் படைக்குச் சிறந்த பயிற்சி அளிக்கப்பட்டது. நாயக், ஹவில்தார், ஜும்லாதார், ஹசாரி, சேனாபதி என்னும் அதிகாரங்களை வகுத்தார். அவரிடம் சிறந்த குதிரைப் படையும் இருந்தது.

அவருக்கு உதவி செய்த அஷ்டப்பிரதானி சபை எட்டு மந்திரிகள் கொண்டது. மூன்று மாகாணங்களிலும் அவருடைய பிரதிநிதிகள் ஆண்டு வந்தனர். கிராமங்களில் பஞ்சாயத்துக்கள் அமலில் இருந்தன. நிலங்களை அளந்து, மகசூலில் ஐந்தில் இரண்டு பங்கு வரி வசூலிக்கப்பட்டது. சர்க்காரே நிலவரியை வசூலித்து வந்தனர். அதிகாரிகள் கொடுமையின்றி மக்கள் இனிது வாழ்ந்தனர். இந்து மத தருமத்தை ஒட்டியே அரசியல் நடைபெற்றது. சிவாஜி பவானிதேவியின் சிறந்த பக்தர். இவர் துக்காராம், இராமதாசர் ஆகியோரின் ஆசியைப்பெற்று, மகாராஷ்டிர மக்களை ஒன்று கூட்டித் தரும ராச்சியத்தை நடத்தினார். இவர் குர்ஆன் என்னும் முஸ்லிம் சமய நூலை மிகவும் கௌரவித்தார். சிறையாகப் பிடிபட்ட மகளிரைத் தக்க பாதுகாப்புடன் அவர்களின் உறவினர்களிடம் அனுப்பி வைத்தார். தேகவன்மை, அறிவு நுட்பம், தீர்க்க தரிசனம், விடாமுயற்சி, கருணை, அறத்தில் பெருநம்பிக்கை, கடவுளினிடம் பக்தி முத லிய சீரிய குணங்களுடன் விளங்கிய சிவாஜி மன்னர் உலக வரலாற்றில் ஒரு சிறந்த இடம் பெற்றிருக்கிறார்.

சிவாஜிக்குப்பின் மகாராஷ்டிரர் : இவருக்குப்பின் 1680-ல் இவர் புதல்வர் சாம்பாஜி சத்திரபதி ஆனார். இவர் உறுதி இல்லாதவர்; சிற்றின்பத்தில் திளைத்தவர். கவிகுலேஷ் என்னும் பிராமணன் இவருடைய நெருங்கிய நண்பன். அவன் எல்லாத் தீய குணங்களுக்கும் உறைவிடம். அரசர் அவன் சொற்படி நடந்துவந்தார். பிரபுக்களின் பகையைப் பெற்றார். பிஜாப்பூர், கோல்கொண்டாவுக்குத் துணை புரிந்து, மொகலாயர் செல்வாக்கை அடக்க முயலாமல் கோவா, ஜாஞ்சீரா முதலிய இடங்களை முற்றுகையிட்டு வீணாகப் பணத்தைச் செலவு செய்தார். ஔரங்கசீபு கோல்கொண்டா, பிஜாப்பூர் இவற்றை வென்று, சாம்பாஜியைத் தந்திரமாகச் சிறையிலிட்டுக் கொன்றார். சாம்பாஜியின் தம்பி ராஜாராம் செஞ்சிக்குச் சென்றார். அங்கும் மொகலாயர் சென்று முற்றுகையிட்டனர். 1698-ல் ராஜாராம் மகா ராஷ்டிர நாடு சென்று, இழந்த கோட்டைகளைக் கைப்பற்றினார். ராஜாராம் இறந்தபின் அவர் மனைவி தாராபாய் அரசை நடத்தினார். 1707-ல் ஒளரங்கசீபு இறந்த பின் சாஹு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு அரசை ஏற்றுக்கொண்டார்.

விஜயநகர ராச்சியம் : ஆரவீடு வமிசத்தைச் சேர்ந்த விஜயநகர மன்னர் I-ம் ஸ்ரீரங்கன் 1685-ல் இறந்ததும், அவர் தம்பி II-ம் வேங்கடன் பட்டத்துக்கு வந்தார். தக்கணத்தில் முஸ்லிம்களின் செல்வாக்கை அடக்கிக் கிருஷ்ணா நதி வரையிலுள்ள நாடுகளைத் தம் வசப்படுத்தினார். கோலார், நந்தியால் முதலிய இடங்களிலுள்ள சிற்றரசர்களின் கலகத்தை அடக்கி வேலூரைக் கைப்பற்றினார். குடிகளின் வரியைக் குறைத்தார். நாட்டின் வளத்தைப் பெருக்கினார். 1614-ல் II-ம் ஸ்ரீரங்கன் அரசரானார். நாட்டில் கட்சிக்கலகம் உண்டாயிற்று. அதில் அரசர் இறந்தவுடன் அவர் மகன் இராமன் அரசரானார். அவருக்குப்பின் III-ம் வேங்கடன் ஆட்சியைப் பெற்றார். வேங்கடன் 1642-ல் இறந்தார். அவருக்குப்பின் வந்த III-ம் ஸ்ரீரங்கன் நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்து 1681-ல் மரணமடைந்தார். இவரோடு விஜய நகர சாம்ராச்சியம் முடிவுற்றது.