பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/740

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

675

இந்தியா

யார் ஒப்புவித்தார். மருது சகோதரர்கள் பாஞ்சாலங்குறிச்சி மன்னர்களோடு சேர்ந்து போரிட்டதால், ஆங்கிலேயர் அவர்களைத் தூக்கிலிட்டுக் கொன்று, சிவகங்கையையும் தமது ஆட்சியில் சேர்த்து, அதை ஜமீன்தாரியாக்கினர்.

புதுக்கோட்டை : ஆவுடைத் தொண்டைமான் என்பவர் அம்புக்கோவில் என்னும் அழம்பில் நாட்டினை ஆண்டு வந்தார். அவர் புதல்வர் இரகுநாதராயத் தொண்டைமான், கிழவன் சேதுபதியிடமிருந்து புதுக்கோட்டையைப் பெற்றார். திருமயம், ஆலங்குடி முதலியவற்றைச் சேர்த்துக்கொண்டு அவர் புதுக்கோட்டையை ஆண்டார். அவர் திருச்சியில் நாயக்கருக்கு உதவி செய்து, மேற்கிலும் வடமேற்கிலும் சில பாளையங்களைக் கைப்பற்றினார். நாயக்க வமிசம் முடிவடைந்ததும் விஜயரகுநாதராயர் (1730-60) தமது நாட்டைச் சுற்றிலுமுள்ள தஞ்சாவூர், இராமநாதபுரம் முதலிய இராச்சியங்கள் தமக்குப் பகையாக இருந்தபடியால் நவாபுவின் நட்பை நாடினார். அவர் மூலமாகக் கம்பெனியாரின் நட்பையும் பெற்றார். அவர் பிரெஞ்சுப் போர்களில் ஆங்கிலேயருக்கு உதவி புரிந்தார். நவாபுவின் சண்டைகளெல்லாவற்றிலும் அவர் உதவி புரிநதார். பின் அரசாண்ட இராயரகுநாதரும் (1769-89) விஜயரகுநாதரும் (1789-1807) மைசூர் யுத்தங்களிலும், பாளையக்காரருடன் நடந்த யுத்தங்களிலும் ஆங்கிலேயருக்கு உதவி புரிந்தார். கருநாடகத்தைத் தமது ஆட்சிக்கு கொண்டுவந்தபோது ஆங்கிலேயர் புதுக்கோட்டையை ஒரு பாதுகாப்பு இராச்சியமாகப் பாவித்து, இம் மன்னர்களுக்குச் சில மரியாதைகளையும் வழங்கினார்கள்.

திருநெல்வேலி பாளையக்காரர்களின் எதிர்ப்பு : தமிழ்நாட்டு இராச்சியங்கள் இப்படி அழிந்து மறைவதைப் பொறாமல், ஆங்கிலேயரை நாட்டைவிட்டு விரட்ட வேண்டுமென்னும் நோக்கத்துடன், திருநெல்வேலிச் சீமையிலுள்ள பாளையக்காரர்கள் ஒன்றுகூடித் தாங்கள் கொடுக்கவேண்டிய பேஷ்கஷ் தொகையைக் கொடுக்க மறுத்து, ஆங்கிலேயரின் சேனையைத் துன்புறுத்தி எதிர்த்தார்கள். பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு நாயக்கரும், நாகலாபுரம் நாயக்கரும் இப்பாளையக்காரர்களின் எதிர்ப்புக்குத் தலைமை வகித்தார்கள். மைசூர் யுத்தம் முடிந்ததும் ஆங்கிலேயர் படை பாஞ்சாலங்குறிச்சியைத் தாக்கிற்று. கட்டபொம்மு தம் கோட்டையினின்றுத் தப்பிச் செல்கையில், எட்டயபுரம் பாளையக்காரரால் துரத்தப்பட்டுச் சிவகங்கை சென்று, பிறகு, தொண்டைமான் சீமைக்கடுத்த காட்டிலுள்ள காலியாப்பூர் என்னுமிடத்தில் ஒளிந்து கொண்டார். கலெக்டர் லஷிங்க்டன் கட்டளைப்படி தொண்டைமானின் ஆட்கள் அவரைப் பிடித்தனர். காப்டன் ஸ்மித் அவரைக் கயத்தாருக்குக் கூட்டிச் சென்று, அங்குப் போலி விசாரணை ஒன்றை நடத்தி அவரை 1799-ல் தூக்கிலிட்டார். கட்டபொம்முவின் இரண்டு சகோதர்களும் (இருவர்களுள் இளையவரை ஊமையன் என்றும் வழங்குவர்), மற்றப் பாளையக்காரர்களும் சிறையினின்றும் தப்பி, வெளிவந்து, பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைப் புதுப்பித்துப் பலப்படுத்தினர். ஆங்கிலேயர் சேனாபதி ஆக்னியூ (Agnew) 1801-ல் கோட்டையைக் கைப்பற்றினார். ஊமையன் தப்பிச் சிவகங்கையை அடைந்தார். அங்கு மருது சகோதரர்கள் அவருடன் சேர்ந்துகொண்டார்கள். ஆங்கிலேயர் காளையார்கோயில் முதலிய இடங்களைப் பிடித்தனர். முடிவில் ஊமையனும் மருது சகோதரர் களும் பிடிபட்டுத் தூக்கிலிடப்பட்டனர். தமிழ் நாட்டின் சிறிய விடுதலைப்போர் இவ்விதம் முடிவடைந்தது.

மலையாள இராச்சியங்கள் : கோழிக்கோடு தம்பிரானும் கொச்சி மன்னனும் போர்ச்சுக்கேசியரின் ஆட்சிக்குட்பட்டிருந்தனர். இந்நாட்டின் பல கிராமங்கள் போர்ச்சுக்கேசியரின் கையில் இருந்தன. கோழிக் கோட்டுக்கும் கொச்சிக்கும் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. இந்நாட்டு மன்னர்கள் போர்ச்சுக்கேசியரின் உதவியை நாடினர். 1650-ல் தானூர் வமிசத்தைச் சேர்ந்த இராமவர்மனைப் போர்ச்சுக்கேசியர் கொச்சி நாட்டின் அரசராகப் பட்டஞ்சூட்டி, அவருக்குப் போர்ச்சுக்கேசிய மன்னரின் துணைவீரர் (Brother in-arms to the King of Portugal) என்னும் பட்டத்தையும் அளித்தனர். 1661-63-ல் டச்சுக்கார் போர்ச்சுக்கேசியரைத் துரத்திவிட்டுக் கொல்லம், கொச்சி, கொடுங்கோளூர், கண்ணனூர் முதலிய துறைமுகங்களைப் பிடித்துக்கொண்டார்கள். டச்சுச்காரர் தமது வியாபாரத்தை மட்டும் கவனித்தார்கள். சுதேச மன்னர்களின் விஷயங்களில் தலையிடவில்லை. அவர்கள் சுயேச்சையாக ஆண்டுவந்தனர். டச்சுக்காரர் நாட்டினரைக் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபடவில்லை.

1759-ல் கோழிக்கோடு தம்பிரான் கொச்சியின்மீது படையெடுத்தார். திருவிதாங்கூர் மன்னர் கொச்சிக்கு உதவிபுரிந்தார். அதற்காகக் கொச்சி மன்னரிடமிருந்து சில பகுதியைத் திருவிதாங்கூர் மன்னர் பெற்றார். 1776-ல் ஐதர் அலி கொச்சியிற் பிரவேசித்தார். மன்னர் கப்பம் கட்டுவதாக ஒப்புக்கொண்டு, 1791 வரை மைசூருக்குப் பணிந்து நடந்துவந்தார். பிறகு அவர் ஆங்கிலேயரின் பாதுகாப்புக்கு உட்பட்டார். 17ஆம் நூற்றாண்டில் பல குறுநில மன்னர்கள் திருவிதாங்கூரில் ஆண்டுவந்தனர். தென்பகுதி மதுரை நாயக்கர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. 1698-ல் இராணி மங்கம்மாளின் படை திருவிதாங்கூரைத் தாக்கியது. 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மார்த்தாண்டவர்மன் சிறு நாடுகளையெல்லாம் வென்று ஒன்று கூட்டினார். பிறகு திருவனந்தபுரத்துக்கு வடக்கேயுள்ள காயங்குளம், அம்பலப்புழை, சங்கனாச்சேரி முதலிய நாடுகளைச் சேர்த்துக்கொண்டார். 1759-ல் கொச்சியில் சில பகுதிகளும் சேர்ந்தன. இவர் காலத்தில்தான் திருவிதாங்கூர் இப்போதுள்ளபடி பூர்ணமாக அமைந்தது. ஆகையால் இவரைத் ‘தற்காலத் திருவிதாங்கூரைப் படைத்தவர்’ (Maker of Modern Travancore) என்று அழைப்பதுண்டு. இவர் பிளாண்டர்ஸ் தேசத்தினரான தெ லென்னாய் (De Lennoy) என்ற ராணுவ வீரரைத் தம் சேனையில் அமர்த்திப் படைகளுக்குச் சிறந்த பயிற்சியளித்துக் கோட்டைகளைப் பலப்படுத்தினார்.

அவருக்குப்பின் ஆண்ட இராம வர்மன் மற்றுமுள்ள சில மன்னர்களை அடக்கினார். கொடுங்கோளூர் காயங்கரையிலிருந்து மேற்குத்தொடர்ச்சி மலைவரையில் ஒரு பலமான அரணைக் (Travancore Lines) கட்டினார். 1766, 1776 ஆண்டுகளில் ஐதர் இச்சீமைக்கு வர முயன்றபோது இவ்வரணும், டச்சுக்காரர் அனுப்பிய படையுந்தான் அவரைத் தடுத்துத் திருவிதாங்கூரைக் காப்பாற்றின. 1778-ல் ஆங்கிலேயர் கட்சியில் சேர்ந்து கொண்டு, 1789-90-ல் திப்புவின் படையை முறியடித்தார். 1795-ல் ஆங்கிலேயரின் பாதுகாப்பு விதியை அவர் அங்கீகரித்தார்.

18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொகலாய ஆட்சியின் வீழ்ச்சியால் பலமடைந்தது மகாராஷ்டிர-