பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/770

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

705

இந்தியா

பீகாரும் நேபாளமும் சேர்ந்து கோசித் திட்டத்தையும், உத்தரப்பிரதேசமும், பீகாரும், ரீவாவும் சேர்ந்து சோன் பள்ளத்தாக்குத் திட்டத்தையும் மேற்கொண்டுள்ளன.

மேற்கூறிய நீர்ப்பாசனத் திட்டங்களால் வேறு நன்மைகளும் உண்டு. கால்வாய்களின் மூலம் நீர் செல்வதற்குமுன் அதை டர்பைன்கள் வழியாகச் செலுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றனர். மீன் பண்ணைகளையும் பலவகை நீர்விளையாட்டு வசதிகளையும் ஏற்படுத்துவதற்கு இவை அனுகூலமாக உள்ளன. கால்வாய்களின் மூலம் படகுகள் செல்லுகின்றன.

கிணறுகள்: கிணற்று நீரை மேலேகொண்டு வருவதற்கு உடலுழைப்பு அல்லது எந்திர உதவி அவசியமாகிறது. இக்கிணற்று நீர்ப்பாசன முறையைத்தான் இந்திய ஏழைக்குடியானவன் வெகு காலமாகக் கையாண்டு வந்திருக்கிறான். இதற்குச் செலவு அதிகம் இல்லை. அரசாங்க உதவியையும் குடியானவன் எதிர்பார்க்காமலே கிணற்றை எளிதில் வெட்டிக்கொள்ள முடியும். வட இந்தியாவில் உள்ள வண்டல்மண் சமவெளிகள் கிணற்றுப் பாசனத்துக்கு மிகவும் ஏற்றவை. ஜீவநதிகள், மழை மிகுதி, நீர் ஊறாத களிமண் படைகள் ஆகியவை உள்ள இடங்களில் தோண்டப்படும் கிணறுகளில் நீர் எளிதிற் குறைவதில்லை. ஆனால் சிறிது தோண்டிய உடனே, ஊற்றுப்பெருக்குண்டாகும் கிணறுகள் சிறிது காலத்தில் தூர்ந்துவிடும். இந்தியா முழுவதிலும் கிணற்று நீர்ப்பாசனத்தால் பயிரிடப்படும் நிலங்களில் பாதிக்குமேல் உத்தரப்பிரதேசத்தில் உள்ளன. மழை இல்லாக் காலங்களில் இக்கிணறுகளின் தொகை அதிகரிக்கும். தென் இந்தியாவில் கிணறுகளை மிக ஆழமாகத் தோண்டிய பின்னரே பல இடங்களில் ஊற்றுப்பெருக்குண்டாகும். சிலவிடங்களில் பாறைகளை வெடிமருந்து கொண்டு உடைத்தும் கிணறுகளைத் தோண்டுகின்றனர். கிணறுகள் பெரும்பாலும் உறுதியாகவும் நிலையாகவும் கட்டுப்பட்டுள்ளன. கூர்ஜரத்திலும், சென்னைக் கடற்கரைப் பிரதேசங்களிலும் வண்டல் நிலங்களில் கிணறுகள் அதிகமாக வெட்டப்பட்டுள்ளன.

குழாய்க் கிணறுகள் சென்ற சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளன. பெரும்பாலும் உத்தரப் பிரதேசத்தில் அரசாங்க உதவி பெற்றுப் பலர் இக்குழாய்க் கிணறுகளை அமைத்து வருகின்றனர். 1950-ல் உத்தரப் பிரதேசத்தில் 7,000 குழாய்க்கிணறுகள் மூலம் சாகுபடி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு கிணற்றின் நீரைக் கொண்டும் 500 ஏக்கர் நிலம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. கங்கைச் சமவெளியில் புதிதாக அமைத்த இக்குழாய்க் கிணற்று நீரைக்கொண்டு சுமார் 20 இலட்சம் ஏக்கர் நிலம் சாகுபடி செய்கிறார்கள்.

ஏரிகள்: பெரியாறு போன்ற சில பெரிய நீர்த்தேக்கங்கள் ஏற்பட்டிருப்பினும் ஏரிகளினால் சாகுபடியாகும் நிலத்தின் பெரும்பாகம் பழைய ஏரிகளையே ஆதாரமாய்க் கொண்டுள்ளது. இவற்றையும் அரசாங்கமே கவனித்து வருகின்றது. சாதாரணமாக மழை காலத்தில் அதிகமாகப் புரண்டோடும் நீரை ஏரிகளில் தேக்கி, அதைக் கோடை காலத்தில் பயன்படுத்துகின்றனர். மழை பெய்யாமற்போமாயின், ஏரிகளிலும் தண்ணீர் இராது. தக்கணக் கரிசல்மண் பிரதேசத்திற்கும் கிழக்குக் கடற்கரைச் சமவெளிக்கும் இடையே கருங்கற்பாறைகளும் மணற்பாறைகளும் அமைந்துள்ள பாகங்களில் ஏரிப் பாசனம் நடைபெறுகிறது. இங்கு நிலம் மேடு பள்ளமாக இருப்பதனால் பள்ளங்களின் குறுக்கே அணைகளை அமைத்து மழை நீரை எளிதில் தேக்கலாம். செங்கற்பட்டு, சித்தூர், வட ஆர்க்காடு சேலம் மாவட்டங்கள், மைசூர், ஐதராபாத் ஆகிய இடங்களில் இவ்வகை ஏரிகள் அநேகம் உள்ளன. மேலும் ஆறுகளிலிருந்தும் ஓடைகளிலிருந்தும் வாய்க்கால் மூலம் நீரைப் பல வகைச் சாத்னங்களைக் கொண்டு இறைத்துப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் இவ்விதச் சாகுபடி சிறிய அளவிலேயே நடை பெறுகிறது.

இந்தியாவில் நீர்ப்பாசனத்துக்கான வசதிகள் ஏராளமாக உள்ளன. ஆண்டுதோறும் இந்தியாவின் ஆறுகள் மூலமாகச் செல்லும் நீரின் அளவு ஒரு செகண்டுக்கு 23,00,000 க. அடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அதில் 6 சதவிகிதம் அதாவது 1,33,000 கன அடி அளவுள்ள தண்ணீரையே நாம் இப்போது கால்வாய்கள் மூலம் விவசாயத்திற்குப் பயன்படுத்துகிறோம். எஞ்சியுள்ள 94 சதவிகிதத்தில் பெரும்பாகத்தையும் பயன்படுத்திக்கொள்ள வசதிகள் உள்ளன. இதைத் தவிரத் தரையில் ஊறியுள்ள நீரும் நிறைய உண்டு. அதிலிருந்து இப்போது ⅓ பாகத்தையே கிணறுகள் மூலம் பயன்படுத்துகிறோம். பீ. எம். தி.

தாதுப்பொருள்கள்

பல இந்தியாவில் பயனுள்ள தாதுப்பொருள்கள் போதுமான அளவு கிடைத்தபோதிலும் சில முக்கியமான தாதுப்பொருள்கள் அகப்படுவதில்லை. இன்னும் விரிவான புவியியல் ஆராய்ச்சிகளால் அவைகளும் கிடைத்தாலும் கிடைக்கும். இந்தியாவில் கிடைக்கும் முக்கியமான தாதுப்பொருள்கள் இரும்பு, மாங்கனீஸ், குரோமியம், மக்னீசியம், அலுமினியம், டைட்டேனியம். நிலக்கரி, மண்ணெண்ணெய், மோனசைட்டு, சுண்ணாம்புக்கல், டாலமைட்டு, இயற்கையிற் கிடைக்கும் மெருகூட்டிகள், கண்ணாடி செய்வதற்கான பொருள்கள், சாயங்கள் செய்வதற்கான பொருள்கள் ஆகியவை. எல்லா நாடுகளுக்கும் அப்பிரகமும், மாங்கனீஸும் இல்மனைட்டும் இந்தியாவிலிருந்தே அநேகமாக ஏற்றுமதியாகின்றன. இந்தியாவில் உயர்ந்த ரக இரும்புத் தாதுக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. ஆனால் மண்ணெண்ணெய், வெள்ளி, காரீயம், நாகம், நிக்கல், கோபால்ட்டு, வெள்ளீயம், டங்ஸ்டன் ஆகியவை குறைவு.

நிலக்கரி: பலவிதமான வேலைகளுக்கும் பயன்படக்கூடிய நிலக்கரிப் புலங்கள், அஸ்ஸாமின் கீழ்ப்பாகத்திலும், வங்காளத்திலும், பீகார், மத்தியப்பிரதேசம், ஐதராபாத் ஆகிய பிரதேசங்களிலும் நெடுந்தூரம் பரவிக்கிடக்கின்றன. இவைகளில் கிடைக்கக்கூடிய, கோண்டுவானா காலத்தில் உண்டான நிலக்கரி 1.000 அடி ஆழம்வரையிருப்பதாகவும், 6.000 கோடி டன் நிறையுள்ளதாகவும் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் மூன்றிலொரு பகுதி 4 அடிவரை ஆழமுள்ளதாயிருக்கிறது. அதுவே வெட்டியெடுக்கத் தகுந்தது. அதிலும் 150 கோடி டன் கரியே உலோக வேலைகளுக்கேற்றது. அத்தகைய கரியில் பெரும்பகுதி எடுத்தாய்விட்டது. மூன்றாம் புவியுகத்தில் உண்டான நிலக்கரி அஸ்ஸாமில் காணப்படும் 500 கோடி டன் மட்டுமே கோதாவரி, மகாநதி பள்ளத்தாக்குக்களிலுள்ள நிலக்கரிப் புலங்களைச் சரிவர ஆராய்ந்தால் அதிகமான நிலக்கரி கண்டுபிடிக்கப்படலாம். ஆண்டுதோறும் வெட்டி எடுக்கப்பெறும் நிலக்கரியின் நிறை 260 முதல் 300 இலட்சம் டன் வரையாகும்.

லிக்னைட்டு : மூன்றாம் யுகத்தில் உண்டான லிக்னைட்டு என்னும் முற்றாத பழுப்பு நிற நிலக்கரிப் புலங்-